Search This Blog

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, 5 January 2015

போலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி ?



நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்' என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் அஞ்சல்களை நாம் அடிக்கடி பெறலாம்.


இப்போதெல்லாம், இது போன்ற ஸ்கேம் மெயில்களை வடிகட்டி, ஸ்கேம் மெயில் போல்டருக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தை கூகுள் போன்ற மின் அஞ்சல் தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், சில அஞ்சல்கள், இவற்றின் பிடியில் சிக்காமல், நம்மை வீழ்த்தப் பார்க்கின்றன. அப்படிப்பட்ட ஓர் அஞ்சலைப் பெற்றால், சந்தேகம் ஏற்பட்டால், என்ன செய்வது?



இந்த வகையில் நமக்கு உதவ ஓர் இணைய தளம் இயங்குகிறது. வந்திருக்கும் அஞ்சலில் உள்ள சில சொற்களை, இந்த தளத்திற்கு அனுப்பினால், அது சோதனை செய்யப்பட்டு, நமக்கு அது ஸ்கேம் வகை அஞ்சலா அல்லது வழக்கமான அஞ்சலா என்று தெரிவிக்கிறது. இந்த தளத்தின் இணைய முகவரி  jasonmorrison.net


இந்த தளமானது கூகுளின் தேடல் இஞ்சின் ஒன்றைப் பயன்படுத்துகிறது. இந்த தேடல் இஞ்சின், ஏற்கனவே ஸ்கேம் மற்றும் திருட்டு முயற்சிகளுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் தளங்கள் மற்றும் சில குழு தகவல் தளங்களின் உதவியுடன், வந்திருப்பது ஸ்கேம் மெயிலா எனக் கண்டறிகிறது. இந்த தளத்தை அடைந்தவுடன், தேடல் கட்டத்தின் கீழாக உள்ள LEARN MORE என்ற லிங்க்கில் கிளிக் செய்து, கிடைக்கும் தகவல்களைப் பாருங்கள். இந்த தளம் ஏற்பட்டதன் நோக்கம் என்ன, என்ன வகையில் உங்களுக்கு உதவுகிறது என்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.



எனக்கு வந்த மெயில் ஒன்றில், ரொஸட்டா என்ற பெயரில் விலை உயர்ந்த மரகதக் கல் ஒன்று குறைந்த விலைக்குக் கிடைப்பதாக தகவல் இருந்தது. அப்படியே அதன் முக்கிய சொற்களைக் காப்பி செய்து, இந்த தளத்தில் போட்டு கிளிக் செய்த போது, சில விநாடிகளில் தகவகள் கிடைத்தன. இது போன்ற ஸ்கேம் மெயில்கள் எங்கெல்லாம் அனுப்பப் பட்டுள்ளன என்ற தகவலும் கிடைத்தது. இனி, எந்த சந்தேகம் தரும் மெயில் வந்தாலும், அதனை இந்த தளத்தின் உதவியுடன் சோதனை செய்து, அதன் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளுங்கள்.

Thursday, 23 October 2014

துளசி மல்லி கஷாயம்




துளசி மல்லி கஷாயம்

 துளசி - 2 கைப்பிடி,

சுக்கு - 1 துண்டு,

வெள்ளை மிளகு - 20,

ஏலக்காய் - 5,

தனியா - 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த திராட்சை - 20, பனங்கல்கண்டு

 அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.


சுக்கு, வெள்ளை மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அத்துடன் துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ, பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.

பொதுவாக தூதுவளைதான் கபம் போக்கும். வெயில் காலத்தில் தூதுவளையின் சூட்டைத் தவிர்க்கவே இங்கே துளசி சேர்த்திருக்கிறோம். உணவின் மூலம் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் கஷாயம் இது. மாலை 6 முதல் 9 மணிக்குள் குடிக்கலாம். சளி பிடிக்காமல் தடுக்கும்.

Tuesday, 20 May 2014

ஆண்களுக்கு விரைவாக தாடி மீசை வளர வேண்டுமா?


 தற்போது ஃபேஷனானது அதிகரித்து வருகிறது. அதிலும் இதுவரை உடைகள், ஹேர் ஸ்டைல் போன்றவற்றில் தான் ஃபேஷன் இருந்தது. மேலும் இதுவரை ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியுமாறு வைப்பது என்று இருந்தார்கள். ஆனால் இப்போது ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடியை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சிலரால் நல்ல அடர்த்தியான மீசையை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தால், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரியான வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்களுக்கு, மீசை மற்றும் தாடியை நன்கு வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பார்க்கலாமே!!!

புரோட்டீன் உணவுகள்

உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோட்டீன் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

அடிக்கடி ஷேவிங்

மீசை மற்றும் தாடி நன்கு வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும். இதனால் அங்கு கூந்தல் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், வளர்ச்சியானது அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய்

மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியாக வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வது தான். இதனால் அங்குள்ள இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்கள் வலுவோடு வளர்ச்சி பெறும்.

டெஸ்டோஸ்டிரோன்

என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் குறைவாக இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியானது குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க்கடலை, எள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தண்ணீர்

உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக்கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.

போதுமான தூக்கம்

தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழுதுகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இயற்கை வைத்தியம்

ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.

தொப்பையை குறைக்க இதுதான் வழி !


தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.

அத்தகைய உணவுகள் என்னவென்று ஒரு 20 உணவு வகைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன.


ஓட்ஸ்

ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும்.

 முட்டை

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.

 ஆப்பிள்

ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.

 மிளகாய்

மிளகாயில் உள்ள காப்சைசின், உடலின் மெட்பாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை கரைத்துவிடும்.

 பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.

 பருப்பு வகைகள்

பருப்பு வகைகளிலும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் அவற்றில் அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இவை உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவியாக உள்ளது. எனவே எப்போது பருப்புகளை கொண்டு செய்யப்படும் சூப் மற்றும் கிரேவி போன்றவற்றை சாப்பிடும் போது, இதில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறதோ என்று பயந்து சாப்பிட தேவையில்லை.

 ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும். அதிலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.

 மீன்

மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

 நிலக்கடலை, பாதாம் போன்ற நட்ஸ்

நட்ஸில் வால்நட், பாதாம் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் நட்ஸில் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் தான் நிறைந்துள்ளது. இவை தொப்பையை ஏற்படுத்தாது. எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாகத் தான் இருக்கும்.

தேன்

தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது நமது பண்டைய கால மக்களின் நம்பிக்கை. உண்மையில் இது நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு இயற்கை வைத்தியமும் கூட.

 க்றீன் டீ

க்ரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக, தினமும் க்ரீன் டீயை குடித்தால், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

கறுவா (பட்டை)

பட்டையை உணவில் சேர்த்து வந்தால், அது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து, உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.

 பப்பளிமாசு பழம்

தினமும் உணவு சாப்பிடும் முன் பாதி பப்பளிமாசு பழத்தை சாப்பிட்டால், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை தவிர்க்கலாம்.

 கேரட்

கேரட் சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த காய்கறியாக இருந்தாலும், அவை உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதிலும் சிறந்தது.

 நீர்

தினமும் குறைந்தது 2 லிட்டர் நீரை பருக வேண்டும். ஏனெனில் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

 தானியங்கள்

தானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். எனவே உடல் எடையை குறைக்க தானியங்களால் ஆன உணவுகளை சாப்பிடுங்கள்.

 அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதும், உடல் எடை குறைவுக்கு உதவியாக இருக்கும்.

 கொழுப்பு நீக்கிய பால் உணவுகள்

உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் கொழுப்பில்லாத பால் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 இஞ்சி

இஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், நன்கு அழகான ஒல்லியான உடலைப் பெறலாம். அதிலும் 1/2 டீஸ்பூன் இஞ்சிப் பொடியை சூடான நீரில் கலந்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

 மஞ்சள்

மஞ்சளும் உடல் எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் ஒன்றாகும்.

Thursday, 13 February 2014

கசப்பு அமுதம் பாகற்காய்...!!


 பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறாக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும்.


இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. பாகற் காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் ஜூரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.


பாகற்காய் எளிதில் ஜPரணமாகாது என்றாலும் ஜடாராக் கினியை ஊக்குவிக்கும். கபம், பித்தம், ரத்த தோஷம், பாண்டு, குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்குவது இதன் இயல்பாகும்.


பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. பாகற்காய் இலையின் சாறினை ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின் குளிக்க வேண்டும். இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க் கடியின் விஷம் உடம்பில் ஏறாது.


பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை சிறிது உரைத்து சிரங்கின் மேல் நல்ல தடிப்பாக தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்று சிரங்கு உதிர்ந்து விடும். பாகற் காய் வேரை சந்தனம் போல அரைத்து நல்லெண்ணெய் - யில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும் புறமும் தடவி வந்தால் பெண்களுக்கு கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்குப் பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கண்கண்ட மருந்து.


கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண் அகலும். 2 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே சிறிது வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள் வெளியேறும். பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து விடும். பாகல் இலைச் சாற்றை குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும். பாகல் இலையை உலர்த்தி பீடி போல சுற்றிக் கொண்டு அதன் புகையை உறிஞ்சினால் பல் நோய்கள் பறந்தோடி விடும்.


பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 1_2 அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட் கொண்டால் காலரா உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுக்கு பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நிரந்தரமாக குணம் ஆகும்.


அதுபோல 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் அதே அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்த முடியும்.

Friday, 10 January 2014

இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்…




சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.

* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.

* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.

* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.

* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.

* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.

* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.

* காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.

* தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.

* பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

* வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

* அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

• காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Thursday, 9 January 2014

காளிபிளவர் மொச்சை மசாலா...




காளிபிளவரை பகோடா செய்திருப்போம், உருளைக் கிழங்குடன் சேர்த்து வறுவல் செய்வோம். அதேப்போல, மொச்சைக் கொட்டையுடன் சேர்த்து பொறியல் செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
 
செய்யத் தேவையானவை

காளிபிளவர் - ஒரு பூ

மொச்சைக் கொட்டை - 100 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

தேங்காய் துருவல் - அரை கப்

செய்யும் முறை

மொச்சைக் கொட்டையை குக்கரில் 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

காளிபிளவரை ஒவ்வொரு கிளையாக நறுக்கி  ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அதில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து சுத்தப்படுத்தி, தேவையான அளவுக்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைக்கவும். அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் உளுத்தம் பருப்பை போட்டு அது சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு, வெங்காயத்தையும், தக்காளியையும் போட்டு நன்கு வதக்கி, நறுக்கி வைத்துள்ள காளிபிளவரையும், வேக வைத்துள்ள மொச்சைக் கொட்டையையும் போட்டு நன்கு கிளறவும்.

தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும். அடி பிடிக்காமல் இருக்கும் வகையில் அவ்வப்போது நன்கு கிளறி மசாலா பொருட்கள் சிவந்து வரும் போது தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.

காளிபிளவர் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் காய்களில் ஒன்றாகும். காளிபிளவரில் கால்சியம் அதிகம் உள்ளது. நரம்பை பலமாக்குவதோடு, புத்துணர்ச்சியை அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது நல்ல உணவாக அமைகிறது. வாயுத் தொல்லை இருப்பவர்கள், காளிபிளவருடன் பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

Wednesday, 8 January 2014

கசக்கும் வேம்பின் இனிக்கும் நன்மைகள்....!




வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.

வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ‘அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.

வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் ‘கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.

இலை: வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.

வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.

வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

பூ: வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.

விதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.

வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
பட்டை: வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.

பிசின்: உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.

புண்ணாக்கு: வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.

இது போல் வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா?

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.

* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.

* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.

* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.

அமெரிக்கன் சொன்னான்..




அமெரிக்கன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!

ரஷ்யன் சொன்னான்..

எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?

இந்தியன் சொன்னான்..

பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும்ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?

Tuesday, 7 January 2014

கார்களில் வருகிறது ஆண்ட்ராய்ட்...!





கோடிக்கணக்கான மொபைல் பயனாளிகளின் கைகளில் உலவும் ஆண்ட்ராய்ட் சேவை இனி கார்களிலும் வலம் வர உள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்ப கூட்டணி அமைக்கப்பட உள்ளது.

‘திறந்த வாகன கூட்டணி’ (OAA) என்ற இந்த அமைப்பில் ஹோண்டா, ஆடி, ஜி.எம்., கூகுள், ஹுண்டாய், ந்விடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொழில்நுட்ப சேவைகளை வழஙகுவுள்ளன. இந்தக் கூட்டணியானது புதிய கருவிகளை இயக்க உதவி புரிவதுடன், பாதுகாப்பான கார் சேவையுடன், அனைவருக்கும் எளிமையான சேவைகளை வழங்கவும் பாடுபடும்.

இந்த சேவையை வாகனங்களில் பொருத்துவதன் மூலம் த்டையற்ற சாலை பயணத்துடன், பாதுகாப்பான வாகன சேவையையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். வாகனத்தில் டிஜிட்டல் வாழ்க்கை முறையை அனுபவிக்க வகை செய்யும் இந்த தொழில்நுட்பத்தை நுகர்வோர் வரவேற்கிறார்கள்.

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?





1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி!




மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாக குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம்.

உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிலும், மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், பீதியிலும், வலியிலும், வேதனையிலும் தான் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது.

இவ்வகையிலான புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர்.இவர்களின் பல ஆண்டு கால உழைப்புக்கு தற்போது முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித ரத்தம் மற்றும் எலிகளின் ரத்தத்தில், ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித ‘நானோ’ துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் அதிசயிக்கத்தக்க வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம் புற்றுக் கிருமிகள் வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. 2 மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

தொட்டபெட்டாவில் மனிதர்களை கொன்று தின்னும் மர்ம விலங்கு?






நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா மலைச்சரிவில் உள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா (வயது-30), என்ற பெண் அருகிலுள்ள ஆடாசோலை குக்கிராமத்தில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கிவர் சனிக்கிழமை மாலை நடந்து சென்றபோது வழியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இவரை இரு சிறுத்தைகள் சேர்ந்து தாக்கியதாக அப்பகுதி மக்களும், புலி தாக்கியிருக்கலாம் என வனத்துறையினரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தொட்டபெட்டா அருகிலுள்ள சின்கோனா பகுதியை அடுத்த அட்டபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது-58) மர்ம விலங்கால் கொல்லப்பட்டுள்ளார். இவர் திங்கள்கிழமை மாலை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றவர் இரவு 7 மணி வரை வீடு திரும்பவில்லை.


இதையடுத்து அவரது குடும்பத்தாரும், அருகிலுள்ளோரும் அவரைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். வனப்பகுதிக்குள் மர்ம வனவிலங்கு ஒரு உடலைக் கடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.  ஆனால்,  சின்னப்பனை தேடிக்கொண்டு தீப்பந்தத்துடன் போன பொதுமக்களின்  சத்தத்தைக் கேட்டவுடன் அவ்விலங்கு தின்றுகொண்டிருந்த உடலை போட்டுவிட்டு புதருக்குள் மறைந்துவிட்டது.


பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, அது சின்னப்பன் தான் என்பது உறுதியானது. இதுகுறித்த தகவல் வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இறந்த சின்னப்பன் குடும்பத்திற்கு அரசின் உடனடி நிவாரண உதவியாக ரூ. 25,000 வழங்கப்பட்டுள்ளது.


சோலாடா, அட்டபெட்டு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமான ஆட்கொல்லி வனவிலங்கு, சிறுத்தையா அல்லது புலியா என்பதில் குழப்பம் உள்ளது. அந்த ஆட்கொல்லி வனவிலங்கை உயிருடன் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


இதன் ஒரு கட்டமாக, முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு மற்றும் தெற்கு வனக்கோட்டங்களிலிருந்து தலா ஒரு கூண்டுகள் கொண்டுவரப்பட்டு, சந்தேகத்திற்கிடமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.


இந்த 5 இடங்களிலும் இரகசியமாக காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இனம் காணப்படாத இவ்விலங் கைப் பிடிக்கும் பணியில் 30 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டபெட்டு முதல் கல்லட்டி பகுதி வரை தொடர் ரோந்துப்பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒலிபெருக்கி மூலம் இப்பகுதிகளில் வனப்பகுதிகளுக்குள் யாரும் அனுமதியின்றி செல்லக் கூடாது என்றும் அறிவித்து வருகின்றனர்.

‘இலவச தாய் சேய் வாகனம்‘ – தமிழக அரசின் புதிய திட்டம்!





சாலை விபத்து, தீக்காயம் மற்றும் பிரசவங்களுக்காக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல ‘108 இலவச ஆம்புலன்ஸ் சேவை‘ தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற 24 மணிநேர தொலைபேசி ‘104 மருத்துவ சேவை‘ திட்டத்தை கடந்த 30ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைத்தார். இந்நிலை யில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையை தனி வாகனம் மூலம் வீட்டிற்கே கொண்டு சென்று விடும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 30ம் தேதி துவக்கி வைத்தார்.

அத்திட்டத்தின்படி, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் பிறந்த 51 குழந்தைகள் மற்றும் அதன் தாய் ஆகியோரை வாகனங்கள் மூலம் வீட்டிற்கே கொண்டு விடும் ‘இலவச தாய்-சேய் வாகனம்‘ திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது மருத்துவ கல்வி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கனகசபை, கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனை டாக்டர் விஜயா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.மேலும் தேசிய ஊரக நல வாழ்வு இயக்கத்தின் மூலமாக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகின்ற ‘அவசர பேறுகால சிகிச்சைக்கான பயிற்சி‘ திட்டமும் கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் நடைபெறுகிறது. இத்திட்டத்தின்படி, எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு, அவசர பேறுகால சிகிச்சை குறித்து 24 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியின்போது, ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் டாக்டர்கள்தான் பிரசவம் பார்க்கிறார்கள். மிகவும் ஆபத்தான நிலையில் வரும் கர்ப்பிணி பெண்களுக்கு எப்படி பிரசவம் பார்ப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படுவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது..?



இன்று பெரும்பாலோர் மற்றவர்களின் வற்புறுத்தலின் மூலமே ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி) எடுக்கிறார்கள்.

காப்பீடு செய்து கொள்வதில் உள்ள பயனை இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு ஆக முடியாது அது ஒரு பாதுகாப்பே.

மேலும் இன்சூரன்ஸ் ஒரு நீண்ட கால திட்டம். இடையில் வெளியேற முடியாது. உதாரணமாக இது 20 முதல் 25 வருட திட்டம்

 நமக்கு கிடைப்பதோ 5.5% முதல் 6% வரை தான். இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. முன்பே சொன்ன மாதிரி இன்ஷூரன்ஸ் என்பது நம்முடைய ரிஸ்க்கினை மற்றவருக்கு மாற்றுவதே.

பொதுவாக மக்களுக்கு ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பு என்ற எண்ணமும்,  மற்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது.

அது மிகவும் தவறானது ஏனென்றால் எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை.

நிறைய பேருக்கு நம்மிடம் தான் போதுமான பணம் உள்ளதே எதற்கு நமக்கு இன்ஷூரன்ஸ் என்ற கேள்வி உள்ளது.

அதற்கான பதில் இது தான்.

ஒரு வேளை நாம் இறந்தால், நம்முடைய குடும்பம் தற்போது உள்ள நிலையிலே இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நிதிச் சிக்கலில் இருந்து விடுபட நம் எல்லாருக்கும் தேவையான ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

இன்று பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறார்கள் ஆனால் தேவையான இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. மேலும் பலருக்கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை.

சிலர் 10 பாலிசிகள் கூட வைத்திருப்பார்கள், ஆனால் போதுமான தொகைக்கு எடுத்திருக்க மாட்டார்கள். இன்ஷூரன்ஸில் பல வகை உள்ளது.

மிகவும் பிரபலமானது என்றால் அது எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் மணிபேக் பாலிசி. இது நீண்ட கால பிளான் 20 முதல் 25 வருடம் வரை. ஆனால் வட்டி குறைவு மேலும் சரண்டர் செய்தால் நாம் நிறைய பணம் இழக்க வேண்டி வரும்.

உதாரணமாக நம்முடைய காலில் சிறிய கட்டி வந்தவுடன் அதை அப்புறப்படுத்தாமல் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்றால் காலையே எடுக்கவேண்டி வரும்.

முதலிலே இந்த மாதிரி எண்டோவ்மென்ட் பாலிசியை புரிந்து கொண்டால் சரண்டர் செய்வது நல்லது. தெரிந்தும் 20 வருடம் கட்டுவது காலை இழப்பதற்குச் சமமாகும்.

பணத்தை இழக்க விரும்பாமல் 20 வருடம் கட்டிய பின்பு வரும் தொகை மிகக் குறைவு. எனவே இந்த மாதிரி பாலிசியைத் (traditional) தவிர்ப்பது நல்லது.

அடுத்ததாக ULIP பாலிசி இது. இது பங்குச் சந்தையின் போக்கிற்கேற்ப நம்முதலீடு இறங்குவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த பாலிசியில் ப்ரீமியம் அதிகம் ஆனால் லைப் இன்ஷுரன்ஸ் கவரேஜ் குறைவு. இதையும் தவிர்ப்பது நல்லது.

பின்பு எதுதான் நல்ல பாலிசி என்கிறீர்களா..?
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி தான்.

உதாரணமாக ஒருவருக்கு 30 வயது என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு 60 வயது வரை கவர் செய்யக்குடிய டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கும்பட்சத்தில், பிரீமியமாக 18,000 ருபாய் செலுத்தினால் போதும்.

ஒரு ஊர்ல ஒரு ஊழல் கணக்கு ?






புள்ளி விவரங்கள் பொதுவாக போரடிக்கக்கூடியவை. சமயத்தில் அதுவே சுவாரசியம் கொள்ளச் செய்துவிடுவதும் உண்டு. அக்கப்போர் விவரங்களாக இருக்கும் பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் கீழே கிடந்தால் எடுத்து அப்படியேவா கொடுத்துவிடுவோம்? அவசரமாகத் திறந்து ஒரு புரட்டு புரட்டமாட்டேன் என்றால் நீங்கள் மகாத்மா. நானெல்லாம் பாபாத்மா.

இங்கே கவனியுங்கள். இது ஒரு புள்ளி விவரம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் போன்ற ஒன்று. இந்தியாவின் பக்கத்து வீட்டுக்காரர் சம்பந்தப்பட்டது. கடந்த வருடம் மட்டும் சீனாவில் 36,907 அரசு அதிகாரிகள் ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த முப்பத்தி ஆறாயிரத்தி சொச்சம் பிரகஸ்பதிகளும் ஈடுபட்ட ஊழல்களின் எண்ணிக்கை 27,236. அதாகப்பட்டது, சில ஊழல்களில் கூட்டணி செயல்பட்டிருக்கிறது.

ஆச்சா? மேற்படி 27,236 ஊழல்களில் 21,848 கேஸ்கள் மிகப் பெரியவை. அதாவது ஊழல் செய்த தொகை பெரிது என்று பொருள். சதவீதக் கணக்கில் சொல்வதென்றால் 80.2 சதவீத ஊழல்கள் பெரும் ஊழல்கள். இந்த எண்பது சதவீத ஊழலில் 16,510 ஊழல்கள் மிக நேரடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த வகையில் சேருபவை. இந்த ரக ஊழல்களில் மட்டும் 23,017 அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இத்தனை ஊழல்கள் நடந்திருந்தாலும் இதில் தேர்ந்தெடுத்த 12,824 ஊழல்களைக் குறித்துத்தான் அரசுக்குப் பெரும் கவலை. இந்தப் பன்னிரண்டாயிரத்தி சொச்ச ஊழல்களின் மொத்த மதிப்பு 910.57 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5670 கோடி) என்பது மட்டுமல்ல காரணம். சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளில் சிலபேரின் பெயர்கள் வெளியே வந்தால் மானம் மரியாதையெல்லாம் மொத்தமாகப் போய்விடும் என்கிற அச்சம்.

வருஷம் முழுக்க ஊழல் நடக்கும்போது பக்கத்தில் இருந்து கண்காணித்து, நடந்து முடிந்ததும் கர்ம சிரத்தையாக லிஸ்டு போட்டார்களா என்றெல்லாம் கேட்கப்படாது. உலகெங்கும் ஊழல் நடந்தபடிதான் இருக்கிறது. சீனாவில் மட்டும் ஒரு டிபார்ட்மெண்ட் இப்படி கர்ம சிரத்தையாகக் கணக்கெடுத்துப் புள்ளிவிவரம் கொடுக்கிறது. அதுதான் வித்தியாசம்.

இத்தனை ஊழலர்களையும் என்ன செய்யலாம் என்று இனி யோசிப்பார்கள். பொலிட் பீரோ தீர்ப்புக் கொடுக்குமா அல்லது காட்ரெஜ் பீரோவில் வைத்துப் பூட்டிவிடுவார்களா என்று இப்போது சொல்வதற்கில்லை. சீனாவின் மிகப்பெரிய பிரச்சினையாக ஊழல் உருவெடுத்து வருவது கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிற சங்கதி.

என்ன பிரச்சினை என்றால் ஊழல் நடக்கும் இடம் கண்டறியப்படுகிறது. இன்னார் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று சுட்டிக்காட்ட முடிகிறது. ஆதாரங்கள் திரட்ட முடிகிறது. வளைத்துப் பிடிக்கவும் முடிகிறது. ஆனால் நிரூபித்தல் என்று வரும்போது பல வழக்குகள் புஸ்ஸாகிவிடுகின்றன. எனவே சீர்திருத்தங்களை நீதித் துறையில் இருந்து தொடங்கவேண்டும் என்று பலமாகக் குரலெழும்பத் தொடங்கியிருக்கிறது.

இந்த வருஷம் ஊழலை மெயின் அஜண்டாவாக எடுத்துக்கொண்டு மிகக் கடுமையான தண்டனைகள் மூலம் அச்சம் பரப்பி ஊழலைக் குறைக்க சீன அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஊழலை ஒழிக்கட்டும். நாம் கொசு ஒழிக்க முயற்சி செய்வோம்.

ஏழு அணிகள், ஏழு வீரர்கள் கொண்ட ஏழு ஓவர் கிரிக்கெட்!



துபையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

7 அணிகளுக்கும் அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, சார்ஜா, ரசல்-ஹைமா, உம் அல்-கைவாய்ன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டும் தான் இடம் பெறுவார்கள். போட்டியும் 7 ஓவர்களை கொண்டதாக இருக்கும்.

இந்த கிரிக்கெட் போட்டி அறிமுக விழா இந்த வார இறுதியில் துபையில் நடக்கிறது. இதற்கான விழாவில் இந்திய அணியின் கேப்டன் டோனி, நட்சத்திர வீரர் ரெய்னா ஆகியோர் கலந்துகொண்டு போட்டி தொடர்பான அறிவுப்புகளை வெளியிடுகின்றனர். போட்டிகள் வரும் மார்ச் மாதம் துபையில் நடக்கிறது.

Monday, 6 January 2014

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!



கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்டரை கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி.

‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்’ என்ற செய்தி மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரிகள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது. சென்னையில் மட்டுமல்ல… பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் இதரப் பகுதிகளிலும் இதேபோன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் துவங்கியுள்ளனர்.

“ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்’’ என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. இது அவர்களின் குரல் மட்டுமல்ல… ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் மூலம் தேர்வாகி காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் குரலும் கூட‌. கேம்பஸ் என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் வெளியில் வரத் துவங்கியுள்ளது. உண்மை நிலை என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்காமல் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிபவரும், ‘சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.

“பொதுவாகப் பார்த்தால் கேம்பஸ் இண்டர்வியூ என்பது மாணவர்களுக்கு வசதியானது போல தோன்றும். நிறுவனங்களும், கல்லூரிகளும் மாணவர்களின் நலனுக்காக தேடிவந்து வேலை தருகிறார்கள் என்பதைப் போன்ற எண்ணம் வரும். ஆனால் உண்மை அதுவல்ல. கேம்பஸ் இண்டர்வியூவினால் நிறுவனங்களுக்குதான் லாபம். அவர்கள் தங்களுக்குத் தேவையான தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். புகழ்பெற்ற முன்னணி கல்லூரிகளுக்கு மட்டும்தான் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த வருகிறார்கள். அங்கு +2-வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள்தான் படிப்பார்கள் என்பதால், தரமான ஊழியர்கள் கிடைத்துவிடுகின்றனர்.

கல்லூரிகளை பொருத்தவரை ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பது பெரிய வரப்பிரசாதம். சக போட்டிக் கல்லூரிகளை விட ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கல்லூரியில் இருந்துதான் அதிகம் பேர் கேம்பஸ் மூலம் வேலை பெறுகிறார்கள் என்று காட்டிதான் அடுத்த ஆண்டுக்கான மாணவர்களை சேர்க்கின்றனர். ஆகவே இதை ஒரு சலுகையாகவோ, மாணவர்களுக்கு வழங்கும் சிறப்பு ஏற்பாடாகவோ கருத வேண்டியது இல்லை.

இப்போதைய பிரச்னை எதனால் உருவாகிறது? கேம்பஸ் மூலம் வேலைக்கு எடுத்துவிட்டு பிறகு வேலை தராமல் இழுத்தடிப்பது எதனால்? கல்லூரிகளை பொருத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு. டோட்-1 என்பது அண்ணா பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. போன்ற முன்னணி கல்லூரிகளை உள்ளடக்கியது. நிறுவனங்கள், கேம்பஸ் இண்டர்வியூவுக்கு முதலில் வருவது இந்த கல்லூரிகளுக்குதான். டோட்-2 கல்லூரிகள் என்பவை இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள சாதாரண கல்லூரிகள். இங்கு கேம்பஸ் நடத்த எந்த நிறுவனமும் வருவதில்லை. கல்லூரிகள் கெஞ்சி, கூத்தாடிதான் நிறுவனங்களை அழைத்து வருகின்றன.

இந்த டோட்-2 கல்லூரிகளில் தேர்வாகும் மாணவர்களுக்குதான் தற்போது பிரச்னை வருகிறது. நாடு முழுவதும் கேம்பஸில் தேர்வாகி வேலை தராமல் இழுத்தடிக்கப்படுவதில் டோட்-2 கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். இவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருக்கின்றனர். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துகளை விற்று படிப்பவர்கள் இவர்கள். எல்லோருமே நன்றாக படிப்பவர்கள்தான். அதனால்தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும் நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைகழிப்பது எதனால்? அதற்கு ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஐ.டி. நிறுவனங்களை பொருத்தவரை ஊழியர் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். ‘எங்களிடம் 2 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்; 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டிதான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க பொருளாதார தேக்கநிலை, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி என பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்டுகள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், அனுபவம்மிக்க மூத்த ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை தள்ளிப்போடுகின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துவிட்டு கடைசியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதிமூலம்” என்கிறார் செந்தில்.

ஹெ.சி.எல். நிறுவனத்தில் மட்டும் 2013-ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியா முழுவதும் 6,000 பேர் கேம்பஸில் தேர்வாகி வேலை கிடைக்காமல் உள்ளனர். இவர்கள் ஃபேஸ்புக்கில் எதேச்சையாக ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி ஒரு ரகசிய குழுமம் ஒன்றை உருவாக்கி ஒருங்கிணைந்துள்ளனர். அதன் வழியேதான் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோல இதர நிறுவனங்களையும் கணக்கிட்டால், இப்படி வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1 லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். இவர்கள் அனைவரும் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் பிள்ளைகள். இந்தப் பிரச்னை குறித்து பேச, ஃபேஸ்புக்கில் ‘நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அதைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது…

“ஒருமுறை கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால் கல்லூரி முடியும்வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால் திறமையாக பங்கேற்று முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க… அதன்பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் எல்லாம் மிக நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாக காத்திருக்கிறார்கள்.

நாளை வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் ‘நீங்க ஃப்ரெஷ்ஷரா? அல்லது எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதா’ என கேட்பார்கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை, வேலையில் சேர்ந்துவிடலாம். ‘வெட்டியாக வேலைக்காக காத்திருந்தோம்’ என்று சொன்னால் எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். அப்படியே வேலை கொடுத்தாலும் ஜூனியர்களுடன் போட்டிப் போட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாக படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை சிதைக்கின்றனர்” என்று அதிர்ச்சியான இன்னொரு முகத்தை சொல்கிறார்.

எனில், இதில் கல்லூரியின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அது கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம்தானே… அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம்தானே… என்று கேட்கலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் கல்லூரிகள், நிறுவனங்களை கெஞ்சி கூத்தாடிதான் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு அழைத்து வருகின்றன. ஆகவே ‘ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால் அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வரமாட்டார்கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றி கண்டுகொள்வது இல்லை.

10 ஆயிரம் ரூபாய்க்கு வாஷிங்மெஷின் விற்பவன் கூட ஒரு வருடத்துக்கு வாரண்டி கொடுக்கிறான். 10 லட்சம், 20 லட்சம் கட்டி நமக்கு பொறியியல் படிப்பை விற்கும் கல்லூரிகள், படிப்பு முடிந்ததும் கொஞ்சம் கூட கண்டுகொள்வது இல்லை. ஆனால் எந்த கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ‘எங்கள் கல்லூரியில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலைமை குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பேசவும் முடியாது. அப்படி பேசினால் பிறகு எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காது. ஒரு ஐ.டி. முதலாளிக்கு பிரச்னை என்றால் மற்றவர்கள் ஒன்று கூடிக்கொள்வார்கள். அவர்களுக்கு என ‘நாஸ்காம்’ சங்கம் இருக்கிறது. மாணவர்களுக்கு இத்தகைய அமைப்புகள் எதுவும் இல்லை.

“இதுதான் ஐ.டி. துறையின் உண்மையான பிரச்னை. பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இவை எல்லாம் ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடக்கும். ‘இத்தனை வருட அனுபவம் உள்ளவர்களுக்கு இத்தனை சதவிகிதம் சம்பள உயர்வு’ என்று இருக்கும். ஐ.டி. துறையில் மட்டும் ஒவ்வொரு ஊழியரையும் தனித்தனியே அழைத்து ரகசியம் போல பேசுவார்கள். இந்த வெளிப்படையற்றத்தன்மைதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்படி செய்வதன் மூலம் எல்லா ஊழியர்களையும் தனித்தனியே பிரித்து வைக்கிறார்கள். ஒருபோதும் இவர்கள் ஒன்று சேர்வது இல்லை.” என்கிறார் ‘சேவ் தமிழ்ஸ்’ செந்தில்.

இந்த ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பதன் உண்மை அபாயத்தை வேறொரு கோணத்தில் இருந்தும் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரிப் படிப்பு என்பது வெறுமனே வேலைக்கு ஆட்களை தயார் செய்யும் பட்டறை அல்ல. அது சுயமாக சிந்திக்கவும், சமூகத்தை சொந்த அறிவுடன் அணுகவும் கற்றுத்தரும் இடம். உலகம் முழுவதும் மாணவர்கள் அரசியல் அறிவு பெறும் இடம் கல்லூரிதான். இந்த கேம்பஸ் இண்டர்வியூ என்பதோ, மாணவர்களிடம் இருந்து சமூக உணர்வை துண்டிக்கிறது. மண்டை முழுக்க ‘கேம்பஸ் இண்டர்வியூ’வில் வேலை பெறுவது மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கிறது. ‘நன்றாக படி, வேலைக்குப் போ, சம்பாதி, கடன் வாங்கு, வீடு வாங்கு, கார் வாங்கு, இ.எம்.ஐ. கட்டு, செத்துப்போ’ என வாழ்க்கை முழுவதும் ஓர் இயந்திரத்தைப் போல சிந்திப்பதற்கான மூளையை கல்லூரியிலேயே தயார் செய்கிறார்கள்.

இந்தப் பிரச்னையில் மிக முக்கியமானது கல்விக்கடன். இலவச கல்வியை கை கழுவிவிட்ட காங்கிரஸ் அரசு, கல்விக்கடன் வழங்குவதை பெரிய திருவிழா போல கொண்டாடுகிறது. ப.சிதம்பரம் இதை முனைப்புடன் செய்கிறார். ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பொறியியல் முடித்து வெளியில் வருகிறார்கள் என்றால் ஒரு லட்சம் பேர் கடனாளிகளாக வருகிறார்கள் என்று அர்த்தம். கல்லூரி முடித்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து கல்விக்கடனை திருப்பிச் செலுத்தியாக வேண்டும். ‘கேம்பஸில் எப்படியேனும் தேர்வாகிவிட வேண்டும்’ என மாணவர்கள் துடிப்பதற்கு இதுவும் ஓர் முக்கியமான காரணம். ஒரு பக்கம் கல்விக் கடன் நெருக்க… மறுபக்கம் கைக்கு எட்டிய வேலை வாய்க்கு எட்டுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து இறங்கு முகத்தில் செல்லும் நிலையில், இந்த அபாயமான போக்கு இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும்.

‘இதற்கு நிறுவனங்கள் என்ன செய்யும்? அவர்களுக்கு எதிர்பார்த்தது போல ஆர்டர் கிடைத்திருந்தால் வேலைக்கு எடுத்திருப்பார்கள். கிடைக்கவில்லை; எடுக்கவில்லை’ என்று சிலர் சொல்லலாம். அது உண்மையல்ல.. என்னதான் ஆர்டர் குறைந்திருந்த போதிலும் ஐ.டி. நிறுவனங்களின் லாப விகிதம் எப்போதும் போல, ஆண்டுக்கு 35 சதவிகிதம் என்ற அளவில் தொடர்கிறது. அந்த லாபத்தின் சிறு பகுதியையும் இழக்க முதலாளிகள் தயார் இல்லை. இந்த லாபவெறியின் பலியாடுகள்தான் அப்பாய்ண்மென்ட் ஆர்டருடன் காத்திருக்கும் மாணவர்கள்!

அவசரப்படாதே.! கொஞ்சம் பொறுமையா இரு.!




*ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?

அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.

எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.

கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.
அப்பா...
என்னம்மா... யார் இந்த பையன்
இவர்தாம்பா அவர்
அவர் ...ன்னா
அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.

அப்படியா வாப்பா..உட்கார்.
உட்கார்ந்தான்.
உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா
தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.

இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே
கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ?
கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.

சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே
அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.

சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.

அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?

அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை மட்டும் கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன.?



சஹாரா:

“சஹாரா’ என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் “பாலைவனம்’ என்று பொருள்.


“ஆரஞ்ச்’ வந்த வழி:

வடமொழியில் “நருகுங்கோ’ (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் “நாருங்கோ’ ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் “ஆரஞ்சியா’வாகி ஆங்கிலத்தில் “ஆரஞ்ச்’ ஆகிவிட்டது இந்த ORANGE.


தாய் + தந்தை:

தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் “தாய்’ என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது “தந்தை’ ஆனது.


உதகமண்டலம்:

தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு “மந்து’ என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு “உத மந்து’ என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு “உதகமண்ட்’ என்றும் “உதக மண்டலம்’ என்றும் பெயர் வந்தது.


காகிதம்:

“காகிதம்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல. அரபுச் சொல். “காகஸ்’ என்ற அரபுச் சொல்தான் தமிழில் “காகிதம்’ என்று வழங்கப்படுகின்றது.


திங்கள்:

திங்கள் என்றால் “சந்திரன்’. வானத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும்வரை உள்ள கால அளவே “திங்கள்’ அல்லது “மாதம்’ ஆகும்.


கிருதா:

“கிருதா’ என்ற சொல் “கிர்தா’ என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது.


சர்க்கரை:

சர்க்கரை என்ற சொல் “சொர சொரப்பு’ என்று வழங்குவதால் சர்க்கரை. இது “ஜர்ஜரா’ என்ற வடசொல்லின் திரிபு.


டொபாக்கோ (புகையிலை):

ஊதல், உண்ணல், உறிஞ்சல் ஆகிய மூன்றுக்கும் பயன்படுவது புகையிலை. இந்த இலைக்கு டொபாக்கோ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இந்த இலையைப் போட்டு சிவப்பிந்தியர்கள் புகை பிடிப்பதை வால்டர் ராலே என்பவர் முதன்முதலாகப் பார்த்து அறிந்துகொண்டார். இந்த இலைகளைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் அந்தப் புகையை இழுப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை சிவப்பிந்தியர்கள்தான் முதன் முதலாகக் கண்டுபிடித்தனர்.

 இலைகளை அம்மாதிரி சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் “டோபாகோ’ என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் டொபாக்கோ என்று மருவி விட்டது.


பஞ்சாங்கம்:

கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் – இவைகள் அடங்கியதுதான் “பஞ்சாங்கம்’. பஞ்ச் என்றால் ஐந்து. அங்கம் -பங்கு வகிப்பது; இடம்பெறுவது.

முதலில் சொன்ன ஐந்தும் அங்கம் வகிப்பதால் “பஞ்சாங்கம்’ என்று பெயர் வந்தது.

ஆலமரம்:

ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் “பன்யன்’ என்று பெயர். பனியன் என்னும் சில வியாபாரிகள் பாரசீக வளைகுடாவில் “பந்ரா அப்பாஸ்’ என்னும் துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்றும்,
அதனால் அந்த மரத்துக்கு பன்யன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்