Search This Blog

Friday 6 December 2013

தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?



புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் பி2, கொழுப்புச் சத்து எனப் பல சத்துகள் தயிரில் உண்டு. 100 மி.லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது.


ஒல்லியாக இருப்பவர்கள், நுரையீரலில் பிரச்னை உள்ளவர்கள் நிச்சயம் தயிர் சாப்பிட வேண்டும். மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானமாக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள், பிரியாணி போன்ற உணவைச் சாப்பிடும்போது தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், இவை உணவு செரிக்கத் தேவையான பாக்ட்டீரியாக்களை உருவாக்குகின்றன.


அதனால்தான் தமிழர்கள் தங்கள் உணவில் கடைசியாக தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்கின்றனர். எடை அதிகரிக்க விரும்புபவர்கள், தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸி போல் சாப்பிடலாம்.


ஆனால், இரவில் தயிர் சேர்த்துக்கொண்டால், உடனடியாகத் தூங்க செல்லாமல், 10 நிமிடம் நடைப் பயிற்சி செய்தபின்னர்தான் படுக்கைக்குச் செல்லவேண்டும். உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் அதிக அளவு தயிர் சேர்த்துக்கொள்ளக் கூடாது

நகைச்சுவை!

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு 

நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச 

விரும்புகிறேன்…”



இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”


அவள் : “இல்லை”


இவன் : “கீதா ?”


அவள் : “இல்லை”


இவன் : “உமா ?”


அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு 

ஆசிரியை...!!!

என் முதல் காதலன்!

 


நான் செய்யும் சேட்டைகளை ரசிப்பவன்.


நான் தவறே செய்தாலும் எனக்கு ஆதரவாய் குரல் கொடுப்பவன்.


என்னிடம் சண்டையே போட்டாலும் ஒரு நொடியில் மறந்து விடுவான்.


நான் முதல் முதலில் அழுத பொழுது என்னை பார்த்து சிரித்தவன்.


நான் விழுந்தால் அவனுக்கு அடிபட்டது போல் துடிப்பவன்.


என்னை அவன் கையில் மட்டும் அல்ல நெஞ்சிலும் தாங்கியவன்.


ஆனால் அவனுடன் என் வாழ்நாள் முழுவதையும் செலவிட முடியவில்லை.....



என் முதல் காதலன் என் தந்தை என்பதால்.

தமிழன் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!

 

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.


ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.


அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.


"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.


ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.


ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது


எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.


தமிழரோடு தமிழில் பேசுவோம்...

தமிழன் என்று சொல்வோம்....

தலை நிமிர்ந்து நிற்போம்.....

"தமிழன் இல்லாத நாடில்லை

தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."

ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை!



 நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைய வழி சமூக வலைத்தளங்கள் மாறி விட்டன. ஃபேஸ்புக்கானது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பேருக்கும் மேலாக பயன்படுத்தப்படும் வலைத்தளமாக உள்ளது. உலகம் முழுவதும் ஃபேஸ்புக் வழியாக தொடர்பு கொள்வது மிகவும் எளிய விஷயமாக இருப்பதே இதன் காரணமாகும்.


இது நம்மை அனைவருடனும் தொடர்பில் இருக்க வைக்கிறது. சமூக வலைத்தளங்கள் உதவிகரமாக இருந்தாலும், தொந்தரவுகள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க அவற்றை கவனத்துடன் கையாள வேண்டும்.


இன்றைய ஃபேஸ்புக் மனிதர்கள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், உங்களுடைய விபரங்களை வைத்தே உங்களைப் பற்றி கணிக்கவும் வகை செய்து விடும். நீங்கள் ஒரு உறவில் உறுதியாக இருக்கும் வேளைகளில் ஃபேஸ்புக்கில் சில அடிப்படையான தவறுகள் நடப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.


உங்கள் பெண் நண்பரின் விபரங்களை வேவு பார்த்தல், அனுமதியின்றி ஊடுருவுதல், அவருக்குத் தெரியாமலேயே அவருடைய நண்பர்களுடன் நட்பு பாராட்டுவது போன்ற செயல்களை இந்த தவறுகளில் சிலவாக குறிப்பிட முடியும். ஃபேஸ்புக்கில் நீங்கள் செய்யும் செயல்கள், உங்கள் துணைவருக்கு எதிராக திரும்பாத வகையில் செயல்பட வேண்டும்.


சில நேரங்களில், அவருடன் நெருக்கமாக இருக்கும் படங்களை முகநூலில் அவருக்குத் தெரியாமல் வெளியிட்டால் உறவில் விரிசல் ஏற்பட்டு, மீண்டும் இணைய வழியில்லாமல் போய் விடும். உங்கள் துணையின் விபரங்களை எப்பொழுதும் வேவு பார்க்க வேண்டாம். இது அவளுடைய கற்பனை உலக தனிமையை பாதித்து விடுகிறது.


தங்களுடைய திறமையை நிரூபிக்கவோ அல்லது வேறு ஏதாவது நோக்கத்துடனோ சில பேர் விளையாட்டுத் தனமாக செய்யும் அடிப்படையான தவறுகளில் ஒன்றாக இது உள்ளது.

உங்கள் துணைவர் எவ்வளவு தான் உங்களுக்கு நெருக்கமானவராக இருந்தாலும், அவருடைய சுய விபரங்களை அவருக்குத் தெரியாமல் ஊடுருவிப் பார்க்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் அவளுக்கும் தெரிந்த நண்பர்களுக்கு 'நட்பு கோரிக்கைகள்' அனுப்புவது நல்லது தான்.


ஆனால், அதே விஷயத்தை அவளுக்கு மட்டுமே தெரிந்து, உங்களுக்குத் தெரியாத அழகிய பெண்ணொருத்திக்கு அனுப்பினால், அது கொண்டு வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்.


நீங்கள் ஃபேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்துபவராக இருந்து, அவளுடைய 'அப்டேட்ஸ்'களை கவனிக்காமலும், 'லைக்' போடாமலும் இருந்தால் கூட பிரச்சனைகளாக உருவெடுக்கும். நீங்கள் தொடர்பில் இருக்கும் போது, அதுவும் ஃபேஸ்புக் வழியாகவும் தொடர்பில் இருக்கும் போது, நீங்கள் பதிவிடும் எதிர்வாதம் மிக்க மற்றும் கண்ணியமில்லாத பதிவுகளை சற்றே கவனத்துடன் பரிசீலனை செய்யுங்கள்.


பலருக்கும் தெரியக் கூடிய இது போன்ற பதிவுகளால், அவளுடைய நண்பர்களும் கூட கேலி செய்து மோசமான நிலைக்கு அவளை தள்ளி விடுவார்கள். உங்கள் காதலியுடன் நீங்கள் தனிமையில் செய்பவை அனைத்தும் தனிமையாகவே இருக்க வேண்டும்.


உங்கள் நண்பர்களிடம் ‘பாப்புலாரிட்டி' பெற வேண்டும் என்ற நோக்கில், இது போன்று நெருக்கமான படங்களை பதிவேற்றம் செய்வதை அறவே நினைத்தும் கூட பார்க்காதீர்கள். ஏனெனில், அது உங்கள் காதலியின் தனிமை மற்றும் உணர்வுகளை பாதிக்கும்.


நீங்கள் அவளுடைய பதிவுகளுக்கு அவ்வப்போது உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் அவளை கவனிக்கிறீர்கள் என்பது தெரியும். எனினும், எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் அவரை வெளிப்படையாக விமர்ச்சிப்பதை தவிர்ப்பது நல்லது.

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு!

 >> முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.


 >> முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.


 >> மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.


 >> மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.


 >>மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவளரும்.


 >> பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

ஓரெழுத்து சொற்கள் தமிழில்!

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன, அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.


அ -----> எட்டு

 ஆ -----> பசு

 ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

 உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

 ஏ -----> அம்பு

 ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

 ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

 கா -----> சோலை, காத்தல்

 கூ -----> பூமி, கூவுதல்

 கை -----> கரம், உறுப்பு

 கோ -----> அரசன், தலைவன், இறைவன்

 சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

 சீ -----> இகழ்ச்சி, திருமகள்

 சே -----> எருது, அழிஞ்சில் மரம்

 சோ -----> மதில்

 தா -----> கொடு, கேட்பது

 தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

 தூ -----> வெண்மை, தூய்மை

 தே -----> நாயகன், தெய்வம்

 தை -----> மாதம்

 நா -----> நாக்கு

நீ -----> நின்னை

 நே -----> அன்பு, நேயம்

 நை -----> வருந்து, நைதல்

 நொ -----> நொண்டி, துன்பம்

 நோ -----> நோவு, வருத்தம்

 நௌ -----> மரக்கலம்

 பா -----> பாட்டு, நிழல், அழகு

 பூ -----> மலர்

 பே -----> மேகம், நுரை, அழகு

 பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

 போ -----> செல்

 மா -----> மாமரம், பெரிய, விலங்கு

 மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

 மு -----> மூப்பு

 மூ -----> மூன்று

 மே -----> மேன்மை, மேல்

 மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

 மோ -----> முகர்தல், மோதல்

 யா -----> அகலம், மரம்

 வா -----> அழைத்தல்

 வீ -----> பறவை, பூ, அழகு

 வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

 வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

குளிர்கால ஆலோசனைகள்!

* காய்கறிகளை சூப்பாகத் தயார் செய்து அருந்துவது
 குளிர் காலத்திற்கு பொருத்தமானது.


* வெங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவற்றை
 உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் குளிர்கால
 நோய்கள் ஏற்படாது.


* ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட் போன்றவற்றில்
 ஏதாவது ஒன்றை தினசரி பச்சையாகச் சாப்பிட்டு வர
 குளிரால் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகள் மாறும்.


 * குளிர்காலத்தில் சளியைக் கூட்டும் மற்றும் உடம்பில்
 குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கிவிட
 வேண்டும். அதிக இனிப்புகளைத் தவிர்த்துவிட வேண்டும்.
சற்று காரமான உணவு வகைகளை உண்ணலாம்.
கிரீம் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.


* குளிர்காலத்தில் சிலருக்கு மூக்கில் நீர் ஒழுகிக் கொண்டே
 இருக்கும். இதற்கு ஓமத்தை சிறிதளவு எடுத்து ஒரு
 வெள்ளைத் துணியில் முடிந்துகொண்டு உறிஞ்சி வர
 மூக்கு நீர் நிற்கும். தலைபாரம், ஜலதோஷம் மாறும்.


* குளிர்பானங்கள், தயிர், மோர் போன்றவற்றை அருந்த
 வேண்டியதற்கு மாறாக இளஞ்சூடான பானங்கள்,
தேயிலை போன்றவற்றை அருந்துதல் நல்லது.


* இரவில் தூங்கப் போகும் முன் கோல்டு கிரீமை
 தடவலாம். உதடு வெடிப்பைத் தவிர்க்க வெண்ணெய்
 அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசலாம்.


 * காபி, டீ, பால் இவற்றில் இஞ்சி சேர்த்தல் நல்லது.
இது தொண்டை சம்பந்தமான பிரச்னையைத் தீர்க்கும்.


* மழைக்காலத்தில் தோல் செருப்பு, கவர் ஷுக்களைப்
 பயன்படுத்தாமல் ரப்பர் செருப்புகளையே அணியவும்.


 * அதிக சூடான நீரில் குளித்தால் சருமத்தின் இயற்கையான
 எண்ணெய் பசை மாறிவிடும். எனவே இளஞ்சூடான நீரில்
 குளித்தலே நல்லது.


* குளிர்காலத்தில் இரவு கால்களில் சாக்ஸ் மாட்டிக்
 கொண்டால் நல்லது. வயதானவர்களுக்கு அதிக குளிர்
 தாக்காது.

பாண்டவர்கள் வெட்டிய குளம்!



ஆமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ள “கோலியாக்’ என்னும் கிராம கடற்கரை வியப்பையும், பக்தியையும் அளிக்கக் கூடியது.


ஆம். அந்த ஊரில் காலை 8 மணிக்கெல்லாம் கடல் உள்வாங்கி நெடுந்தூரம் சென்றுவிடுகிறது. கரையில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் பழமையும், வரலாறும் கலந்த சிவலிங்கங்கள் எழுந்தருளியிருக்கும் மேடு கண்ணில் தென்படுகிறது.


கொடிமரம் மற்றொரு சூலம் கொண்ட தூண் நன்கு வெளிப்படுகிறது. கடலலை உள் வாங்காத நேரத்தில் கொடியும், தூணும் கடல்நீரால் சூழப்பட்டிருக்கும்.


அந்தக் கோயில் அந்த மேடு “நிஷ்களங்க மகாதேவர்’ எனப் போற்றப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணிய பூமி.


கடல்நீர் வற்றியதும், அவரை வணங்கிப் போற்ற, மக்கள் கரையில் கூடுவர். காலையில் உள்வாங்கிய கடல், மதியம் 2 மணியளவில் மீண்டும் நீர்ப்பரப்பாகிவிடும். இடைப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள், கடலுக்குள் சென்று, இறைவனை வழிபட்டுத் திரும்ப வேண்டும்.


அந்தக் கோயிலைக் கண்டு வணங்குதல் அவ்வளவு எளிதல்ல. கடல்நீர் வற்றியதும், கடலுக்குள் குறுக்கே நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழி, பள்ளமும், சேறும் நிறைந்த பாதை. ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். விழுந்து, எழுந்து, ஆடையெல்லாம் நனைந்து, சேறாகி அடிபட்டு, கால்தடுமாறி, ஒரு வழியாய்ச் சமாளித்துச் செல்ல வேண்டும்.


ஆயினும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வழிபட வருகிறார்கள்.


நடுவே கோயிலாய் விளங்கும் அம்மேட்டில் ஐந்து சிவலிங்கங்கள் தனித்தனியே காட்சி அளிக்கின்றன. நந்தியும் உண்டு. பெரிய கோயில் அளவு பரப்பு கொண்ட அந்த இடத்தில், சிறிய சுனை (குளம்) உள்ளது.


பாண்டவர்கள், போரிலே கௌரவர்களை அழிக்கின்றனர். உறவினர்களையே அழித்ததால், பாண்டவர்களுக்குக் களங்கம் ஏற்படுகிறது. களங்கத்தைப் போக்கிக் கொள்ள, சிவபெருமானை ஐவரும் வழிபடுகின்றனர்.


கடல் நடுவே மேட்டு நிலத்தை உருவாக்கி, சிவலிங்கம் அமைத்து வழிபடுகின்றனர். மகிழ்ந்த சிவபெருமான், அவர்களது களங்கத்தைப் போக்குகிறார். பாண்டவர்களது களங்கத்தைப் போக்கியதால், “நிஷ்களங்க மகாதேவர்’ என அழைக்கப்படுகிறார். பாண்டவர்கள் போற்றிய லிங்கங்கள், வெட்டிய குளம், கொடிமரம் எல்லாம் அங்கே இன்றும் காட்சி தருகின்றன.

ரிமோட் கண்ட்ரோல் எப்படிச் செயல்படுகிறது!


   
நீங்கள் தினசரி சாதாரணமாகத் தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்துகிaர்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று தெரியுமா?

ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு, ஒரு தொடர்பு ஆகும். அதில் மூன்று விஷயங்கள் முக்கியமாக அடங்கி இருக்கின்றன.

1. டிரான்ஸ் மிட்டர்

2. சிக்னல்

3. ரிசீவர்

தொலைக்காட்சிக்கான ரிமோட் கண்ட்ரோல் அமைப்பை பொறுத்த வரை, நீங்கள் டிரான்ஸ் மிட்டர் என்று சிறு உபகரணத்தைக் கொண்டு டிவியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்கிறீர்கள். டிரான்ஸ்மிட்டரின் ஒவ்வொரு பட்டனையும் நீங்கள் அழுத்தும் போது அதிலிருந்து ஒரு சிக்னல் டிவியை நோக்கிச் செலுத்தப்படுகிறது. அந்த சிக்னல் டி.வி. பெட்டியில் பெறப்படுகிறது. பின்னர் உங்களின் உத்தரவுக்கு ஏற்ப மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

சிக்னல் என்றால் என்னவென்று அறிவோம். பல்வேறு வகையான ரிமோட் கண்ட்ரோல் அமைப்புகளுக்கு ஏற்ப சிக்னல் வேறுபடுகிறது. டிவியை பொறுத்த வரை அகச்சிவப்புக் கதிரானது சிக்கலாகப் பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் கண்ட்ரோல் பொம்மைகள் போன்றவற்றில் சிக்கலானது சோனிக் அல்லது அல்ட்ரோசோனிக் அலைகளாக இருக்கும்.

ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு செயல்படும் தூரம் அதிகமாக இருக்க வேண்டிவரும் போது சக்தி வாய்ந்த ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா தொலைக்கட்டுப்பாட்டு விமானங்கள், விண்கலன்கள் ஆகியவற்றில் அந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

டிவி ரிமோட் கண்ட்ரோல் அமைப்பில் ஒவ்வொரு பொத்தானுக்கும் வெவ்வேறு பணி இருக்கிறது. ஒரு பொத்தான் பிரகாசத்தைக் கூட்டும் என்றால் மற்றொரு பொத்தான், பிரகாசத்தைக் குறைக்கும். ஒரு பொத்தான், ஒலியைக் கூட்டினால், மற்றொரு பொத்தான் அதைக் குறைக்கும்.

இவற்றைப் போல வண்ணம், சேனல்களுக்கு என்று பல்வேறு பொத்தான்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒவ்வொரு பொத்தானும் அழுத்தப்படும் போது அது குறிப்பிட்ட அலைநீளத்தில் ஒரு அலையையோ சிக்னலையோ அனுப்புகிறது. ஒவ்வொரு சிக்னலும் டிவியில் உள்ள ரிசீவரால் வெவ்வேறு விதமாகப் பெறப்படுகின்றன. ரிசீவரானது குறிப்பிட்ட கட்டளையை அதைக் கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட பகுதிக்குப் பிரித்து அனுப்புகிறது.

ஆக கண்ணுக்குத் தெரியாத சிக்னல்கள் மூலம் உங்களால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே டிவியை இயக்க முடிகிறது.

தமிழில் சைக்கிள் பாகங்களின் பெயர்கள்!



Tube - மென் சக்கரம்

Tyre - வன் சக்கரம்

Front wheel - முன் சக்கரம்

ear wheel (or) Back wheel - பின் சக்கரம்

Free wheel - வழங்கு சக்கரம்

Sprocket - இயக்குச் சக்கரம்

Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்

Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்

Hub - சக்கரக் குடம்

Front wheel axle - முன் அச்சுக் குடம்


Rear wheel axle - பின் அச்சுக் குடம்

Rim - சக்கரச் சட்டகம்

Gear - பல்சக்கரம்

Teeth - பல்

Wheel bearing - சக்கர உராய்வி

Ball bearing - பந்து உராய்வி

Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு

Cone cup - கூம்புக் கிண்ணம்

Mouth valve - மடிப்பு வாய்

Mouth valve cover - மடிப்பு வாய் மூடி


Chain - சங்கிலி

Chain link - சங்கிலி இணைப்பி

Chain pin - இணைப்பி ஒட்டி

Adjustable link - நெகிழ்வு இணைப்பி

Circlip - வட்டக் கவ்வி

Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்

Handle bar - பிடி செலுத்தி

Gripper - பிடியுறை

Cross Bar - குறுக்குத் தண்டு


Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை

Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி

Head light - முகப்பு விளக்கு

Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி

Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி

Front Carrier Basket - பொதி ஏந்தி

Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்

Side box - பக்கவாட்டுப் பெட்டி


Stand - நிலை

Side stand - சாய்நிலை

Speedo meter (Odo meter) - வேகம்காட்டி

Fender - வண்டிக் காப்பு

Derailleurs - பற்சக்கர மாற்றி

Peg - ஆப்பு

Air pump - காற்றழுத்தி

Shock absorber - அதிர்வு ஏற்பி

Break - நிறுத்தி

Break shoes - நிறுத்துக்கட்டை


Break wire - நிறுத்திழை

Break Lever - நிறுத்து நெம்பி

Front break ankle - முன் நிறுத்துக் கணு

Back break ankle - பின் நிறுத்துக் கணு

Disc brake - வட்டு நிறுத்தி

Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை

Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை

Pedal cover - மிதிக்கட்டை உறை

Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்


Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு

Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை

Seat Post - இருக்கை தாங்கி

Baby Seat - குழந்தை இருக்கை

Seat cover - இருக்கை உறை

Leather Seat - தோல் இருக்கை

Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை

Tension washer - மிகுநெருக்கு வில்லை


Screw - திருகுமறை

Nut - ஆணி இறுக்கி

Bolt - திருகாணி

Spring - சுருள்

Bush - உள்ளாழி

Lever - நெம்பி

Rust - துரு

Balls - பொடிப்பந்துகள்

Crank - வளைவு அச்சு

Rivet - கடாவு ஆணி

Axle - அச்சு

Spring chassis - சுருள் அடிச்சட்டம்

Nose spring - சுருள் முனை

Fork - கவை

Horn - ஒலியெழுப்பி

Cable - கம்பியிழை

Knuckles - மூட்டுகள்

Clamp - கவ்வி

Ring - வளையம்

Hole - ஓட்டை

Hook - கொக்கி

Spokes - ஆரக்கால்கள்

Spoke guard - ஆரக் காப்பு

Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி

Spanner - மறைதிருகி

Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி

Screw driver - திருப்புளி

Tools - கருவிகள்

Pocket tools - பையடக்கக் கருவிகள்

Front Mud Guard - முன் மணல் காப்புறை

Back mud guard - பின் மணல் காப்புறை

Chain Guard - சங்கிலிக் காப்புறை

Dress Guard - ஆடைக் காப்புறை

Gloves - கையுறை

Head set - தலைக்கவசம்

Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி

Bell lever - மணி நெம்பி

Bell cup - மணி மூடி

Bell spring - மணிச் சுருள்

Bell frame - மணிச் சட்டகம்

Bell rivet - மணி கடாவி

Bell fixing clamp - மணிப் பொருத்தி


Lock - பூட்டு

Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி

Key - சாவி

Key chain - சாவிக் கொத்து

Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை

Electrical parts - மின்னணுப் பாகங்கள்

Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்

Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்

Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி

Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி

Water bottle - தண்ணீர்க் குடுவை


Racing cycle - பந்தய மிதிவண்டி

Mini cycle - சிறு மிதிவண்டி

Mountain cycle - மலை மிதிவண்டி

Foldable cycle - மடக்கு மிதிவண்டி

Wheel chair - சக்கர நாற்காலி

Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி

One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி

High-tech bike - அதிநுட்ப வண்டி

Kid cycle - சிறுவர் மிதிவண்டி

Ladies cycle - மகளிர் மிதிவண்டி

Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி

Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்

Patch - பட்டை

Patching - பட்டை வைத்தல்

Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை


Over hauling - முழுச் சீரமைத்தல்

Painting - வண்ணம் தீட்டல்

Lubrication - எண்ணெய் இடல்

Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை

Puncture closure - துளைமூடல்

Puncture lotion - துளைமூடு பசை

Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)

Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை

Lubricant oil - உயவு எண்ணெய்

Waste oil - கழிவு எண்ணெய்

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு! ! ! !



தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்....

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங்கள் பெட்ரோல் போட்டுக்கொள்கிறீர்களா...?

உங்களுக்கான எச்சரிக்கை இது...

நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்...

இது போன்ற இடங்களில் மீட்டர் பெட்ரோல் நிரப்பும் நாசில் மீது இருக்கும்...

பெட்ரோல் நிரப்பும் நபர் உங்களிடம் எவ்வளவு என்று கேட்பார்...

நீங்கள் 100.00 ரூபாய் அல்லது 200.00 ரூபாய் என்று கூறுவீர்கள்...

மீட்டரில் இரண்டு வரிசைகளில் எண்கள் ஓடும்...

முதலில் உள்ளது லிட்டர் அளவு...

அதற்குக் கீழே உள்ளது தொகை...

பெட்ரோல் நிரப்பத் தொடங்குகையில் 0.0000 என்று இரண்டு வரிசைகளிலும் இருக்கும்...

நீங்கள் நூறு ரூபாய் என்று கூறினால்
பெட்ரோல் நிரப்பத் தொடங்கியதும்
லிட்டர் அளவு வருமிடத்தில் 1.0000 என்று வந்ததும் பெட்ரோல் நிரப்பும் நபர் நிறுத்தி விடுவார்...

நமக்கு அது ஒரு லிட்டர் என்பது தெரியாமல் நகர்ந்துவிடுவோம்...

அவ்வளவுதான் 100.00 ரூபாய்க்கு 30.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்பட்டுவிட்டது...

200.00 ரூபாய்க்கு 60.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்படும்...

நீங்கள் கூறும் 100.00-இன் மடங்குகளுக்கு ஏற்ப நீங்கள் ஏமாறும் தொகை 30.00-இன் மடங்குகளில் அதிகரிக்கும்...

ஏற்கனவே பெட்ரோல் விலை சுமை போதாதென்று இது வேறு...

சென்னையில் உள்ள நண்பர்கள் (குறிப்பாக பத்திரிகை நண்பர்கள்)யாரேனும் டெமோ பார்க்க ஆசைப்பட்டால்...

சென்னை, ஈக்காடுதாங்கல்,ஐ சி ஐ சிஐ வங்கிக்கு (ICICI BANK ) அருகில்,
VIRTUSA TOWER -க்கு எதிரில் (காசி தியேட்டர் பாலம் அருகில்) உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுங்கள்...

இன்று நண்பரும் நானும் அனுபவப்பூர்வமாகஇதனை உணர்ந்தோம்...

உரிமையுடன் கேட்டு மீதத்தொகைக்கு பெட்ரோல் வாங்கினோம் ...

மேலும் யாரும் ஏமாறாமல் இருப்பதற்கு...

காதலர்களுக்கு, நோ ஐஸ்கிரீம்!



அண்மையில், என் நண்பரோடு கோவையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன். இரண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி திரும்பும் போது, அக்கடையில், "இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை...' என, பெரிய போர்டு இருந்தது. ஆச்சரியமடைந்து, அந்த போர்டு பற்றி கடைக்காரரிடம் கேட்டேன். "அதை ஏன் சார் கேட்கறீங்க... முளைச்சு மூணு இலை விடாத, ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கற பசங்க, இங்கே ஜோடி ஜோடியா வர்றாங்க. ஒரு சின்ன கப் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, இங்கேயே இரண்டு மணி நேரம், டேரா போட்டு அரட்டை அடிக்கிறாங்க. அரட்டை அடிச்சாலும் பரவாயில்லை. ஒருத்தர் தொடையில் ஒருத்தர் கை போடறதும், முத்தம் கொடுக்கறதும், ஊட்டி விடறதும்... பார்க்க சகிக்கலே.


"ஆம்பளை பசங்க அடங்கி போனாலும், இந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும், தாராளமா இடம் கொடுக்கறாங்க. இவங்களை பார்த்து, மற்ற பெண்களும், குடும்பத்தோடு வருவோரும் கடைக்கு உள்ளே வர தயங்கறாங்க. இவ்வளவு, வெட்ட வெளிச்சத்திலும், இந்த இளசுகள் யாரையும் மதிக்காம, கொஞ்சம் கூட பயப்படாம, ரொம்ப மோசமா நடந்துக்கறாங்க. அதனால தான், "காதலர்களுக்கு அனுமதி இல்லை'ன்னு போர்டு வச்சுட்டேன். ஆளுங்களை பார்த்த உடனே, கண்டுபிடிச்சு, திருப்பி அனுப்பி விடுவேன். அவுங்களால வர்ற வியாபாரமும், பணமும் எனக்கு முக்கியமில்லை. ஒழுக்கம் தான் முக்கியம்...' என்றாரே பார்க்கலாம்.


பள்ளி, கல்லூரி காதல் ஜோடிகளே... என்னதான் வயதுக் கோளாறு இருந்தாலும், பொது இடங்களில் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கலாமா? உங்கள் வாழ்வில் அதற்கு என்று ஒரு நேரம், காலம் உண்டு. அப்போது காட்டுங்க உங்க வித்தைகளை. அதுவரை, எல்லாவற்றையும் கொஞ்சம் அடக்கி வாசிக்க கற்றுக் கொள்ளுங்களேன்.

மண்டேலா என்ற மாணிக்கம் - சிறப்புக்கட்டுரை!



நெல்சன் மண்டேலா... ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் 'நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.

ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.

ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற மண்டேலா, படிப்பில் சுட்டியாக இருந்தார்.

ஜோன்கின்தபா இவருக்கும் இவரின் தம்பிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதை விரும்பாத நெல்சன் மண்டேலா, வீட்டைவிட்டு ஓடிப்போய் சுரங்கத்தில் காவலாளியாகவும் தோட்டக்காரராகவும் வேலைபார்த்தார்.

நெல்சன் மண்டேலா, கல்லூரிக் காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணுவப் பிரிவை உருவாக்கினார். கல்லூரியில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, ஆயுதக் கலகம் விளைவிக்க முயன்றார். அதனால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார்.

  ஒரு வழியாக சட்டம் பயின்று முடித்தார். அப்போது கறுப்பின மக்களை அடக்கி ஆளும் தேசியக் கட்சி, தேர்தலில் வென்றதால், பல்வேறு போராட்டங்களில் கல்லூரித் தோழர்களுடன் ஈடுபட்டார்.  இலவசமாக சட்ட மையம் ஒன்றை ஆரம்பித்து, ஏழை மற்றும் அப்பாவிக் கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவி செய்தார்.

முதலில் அமைதி வழியில் செயல்பட்ட மண்டேலா, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில்  சுற்றினார். இங்கிலாந்து மக்களைப் ஃபிரான்ஸில் இருந்து காப்பாற்றிய நாயகன் பிம்பெர்னல் போல மாறுவேடம் பூண்டபோது, மக்கள் கறுப்பு பிம்பெர்னல் என அழைத்தனர்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.

இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது,  'மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. 'எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

அரசாங்கத்துடன் நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அனைத்து மக்களும் இணைந்து ஓட்டு அளிக்கும் முறைக்கு ஒப்புக்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆனார்.  இவருக்கு 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ''நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே சமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்'' என்றார் மண்டேலா.

பூமி எப்போது தோன்றியது?

 

வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் "கேலக்ஸி" (Galaxy). இந்த "கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி.

அறிவியலாளர்கள் பல மூலங்களைப் பயன்படுத்தி பூமி தோன்றிய காலத்தை பல வகையாக கணித்திருக்கின்றனர். பெரிய பாறைகள், பூமியில் விழுந்த விண்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு பல ஆய்வுகளை நடத்தி, பூமி இப்பொழுதுதான் தோன்றிய காலைத்தைப் பற்றிய சில முடிவுகளை நமக்குக் கொடுத் திருக்கின்றனர்.

பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானி களின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமை யான பாறையைக் கொண்டு அறிவியலாளர் கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை (Radioactive Decay of Elemets) ஆராய்ந்து, பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணிக்கிட்டிருக்கிறார்கள்.

ஆனால், பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலக் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்த போது, மீண்டும் சூரியக் குடும் பத்தில் பூமியின் வயது 4.6 மில்லியன் என்று கணித் திருக்கின்றனர். விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடைந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான யுகத்திலே, வானியல் நிபுணர்கள் பிரபஞ்சத்தின் வயதைக்கூட கணக்கிட பல்வேறு முறைகளையும் ஆய்வுகளையும் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இருப்பினும் பிரபஞ்சத்தின் உண்மையான வயதை தெரிந்து கொள்ள இன்றும் முடியவில்லை.

பூமிக்கடியில் புதைந்திருக்கும் புராதனப் பாறைகளில் உள்ள மூலங்களின் கதிரியக்கத் தேய்வை கணக்கிட்டு பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டது.

வான்மண்டலத்தில் ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டு பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. இதைத் தவிர, சூரியன் தோற்றுவித்த காலத்தையும் சில ஆய்வுகளின் மூலம் தெளிவு செய்துள்ளனர். சூரிய பரிதியின் பிளாஸ்மா (Plasma) எனப்படும் ஒளிப்பிழம்பின் வெப்பத்தையும், அதன் வாயுக்களையும் கொண்டு செய்த ஓர் ஆய்வில் சூரியன் 10 பில்லியன் வயது கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

பூமி தோன்றிய காலத்தைப் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், குத்துமதிப்பாக பூமி மேற்குறிப்பிட்ட காலத்தில் தோன்றியிருக்கும் என்றுதான் கூறுகின்றன. ஆனால் மனிதன் எப்போது தோன்றினான், அவனின் மொழி எப்படி தோன்றியது என்பதனைப் பற்றிய ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்வதை விடவில்லை. இதற்கும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இறுதியில் இதற்கான பதிலையும் அறிவியலாளர்கள் கணித்தனர். மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தனது இனத்தோடு தொடர்பு கொள்ள தற்போது இருக்கும் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம், கிரேக்கம், அரபு மொழிகள் அல்லது இதர மொழிகளைப் பயன்படுத்தவில்லை. இவைகளெல்லாம் மனிதன் தோற்றுவித்து பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டவை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் சேர்ந்த ஒரு இனமே. ஆறாவது அறிவு எனக்கூறப்படும் பகுத்தறிவு கொண் டவன் என்பதே அவனை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு காட்டுகிறது. விலங்குகள் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை.


ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் அவைகளுக்கு உண்டு. பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களின் ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.


வாய் வழி ஒலி எழுப்பி மற்றவர்களோடு தொடர்பு கொண்ட மனிதன், காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் மனிதன் முதலில் சைகைகளையும், உடல் அசைவுகளையும் மூலமாகக் கொண்டு செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றனர் நம் அறிவியலாளர்கள்.


மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக அங்க அசைவுகள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியது. பிறகு பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்த பின், பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


மேலும் மனிதன் சைகைகளுக்கு வலது கைகளையே அதிகம் பயன்படுத்துகிறான். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்க மூளையில்தான் என்பதன் மூலம் மனித இனத்தின் மொழி சைகைகளில் உருவாகியது என்பதில் சந்தேகமில்லை.

சூரியனைப்பற்றிய அறிய தகவல்!

 

சூரிய நமஸ்காரம்: 

தினமும் காலையில் நீராடிய பின் கிழக்கு திசைநோக்கி சூரியநமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி, அதனைத் தொடர்ந்து காயத்ரீ மந்திரம் ஜபித்தல் ஆகியவை, சூரியனின் ஆற்றலை அதன் கிரணங்களின் மூலம் பெறும் முறைகளாகும். காலை, மாலை வேளைகளில் சூரியனை நோக்கி இருகைகளாலும் நீரை எடுத்து அர்க்யம் விடுவதும் சூரிய தோஷத்திற்கு தகுந்த பரிகாரமாகும். ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய துதிகளைச் சொல்வதால் நம் உடலும், மனமும் சூரிய சக்தியைக் கிரகித்துக் கொள்கின்றன. கிரகணம் பற்றிசுவாமி சிவானந்தர்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதிலிருந்து அமிர்தம் வெளிப் பட்டது.

பகவான் விஷ்ணு ஓர் அழகான மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை மயக்கி, அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்கினார். ஆனால் சுவர்பானு என்ற அசுரன் மட்டும் தேவர்களைப் போல உருவம் தாங்கி வந்தான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் அதை மோகினியிடம் தெரிவித்தனர். உடனே மோகினியாக இருந்த விஷ்ணு அசுரனின் தலையை கொய்து விட்டார். ஆனால், அதற்குள் அமிர்தம் கழுத்துவரை சென்று விட்டதால் அவன் சாகவில்லை. அவனது தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் அழைக்கப்பட்டன. தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரரைப் பழிவாங்கும் விதத்தில் அவ்வப்போது ராகுவும் கேதுவும் சூரியனையும் சந்திரனையும் விழுங்குகின்றனர். வானசாஸ்திரப்படி சூரியன், சந்திரன், பூமி ஒரே கோட்டில் வரும்போது, நடுவில் சந்திரனோ, பூமியோ வரும்போது சூரியசந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. கிரகண காலத்தில் மக்கள் புனிதநதிகளில் நீராடி, பசுக்கள், பணம் மற்றும் தங்கத்தை தானமாக அளிக்க வேண்டும். கிரகணத்திற்கு மறுநாள் ஏழைகள் மற்றும் சாதுக்களுக்கு உணவளிக்க வேண்டும். கிரகணம் முடிந்தபின் வீடுகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கிரகண காலத்தில் ஒருவன் சாப்பிடக்கூடாது. தொடங்கும் நேரத்தில் முன் உண்ட உணவு முழுவதும் ஜீரணமாயிருக்க வேண்டும். கிரகணம் விட்ட பிறகு சூரியனைப் பார்த்தபின்னரே உணவு உட்கொள்ள வேண்டும்.

கிரகணத்தின் போது சூரியனை கர்ப்பமான பெண்கள் பார்க்கவே கூடாது. அவர்கள் பார்த்தால் பிறக்கப்போகும் குழந்தைகள் செவிடு, ஊமை அல்லது குருடாகப் பிறக்கும். இதே காரணத்திற்காகவே கிரகணநேரத்தில் தாம்பத்ய உறவும் கொள்ளுதல் கூடாது. இந்தநேரத்தில் ஒருவர் தேள்கடிக்காமலோ மற்றும் காயத்திலிருந்து ரத்தம் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். இவற்றால் பயங்கரவிளைவு ஏற்படும். கிரகணநேரத்தில் ஒரு மண்புழுகடித்தால் கூட விஷம் இருக்கும். கிரகண நேரத்தில் ஜபம், தியானம் செய்பவர்கள் பெரும் நன்மை அடைவார்கள். இவ்வேளையில் செய்யும் ஜபம், சங்கீர்த்தனம் (இறைவனைக் குறித்த பாடல்கள்) அல்லல்களையும், பீடைகளையும் அகற்றும். தேவர்களின் ஆசி கிடைக்கும். நமது சிற்றறிவினால் பிரபஞ்சத்தில் நிகழும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியாது. எனவே, முனிவர்களின் வார்த்தைகளை நம்புங்கள். உலக வாழ்வு நிலையற்றது என்ற ஆன்மஞானமாகிய நிஜத்தை, அறியாமை மறைக்கிறது. எனினும், இந்தத்திரையாகிய கிரகணம் நிச்சயம் ஒருநாள் அகலும். நீங்கள் உங்கள் இயற்கையான புகழுடன் ஒளிர்வீர்கள். இதுதான் கிரகணத்தின் ஆன்மிகத் தத்துவமாகும்.

யார் இந்த சூரியன்?:


 சூரியனின் பிறப்பு குறித்து இருவேறு கதைகளைப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு தமது உந்திக்கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார். திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள்மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க "ஓம்' என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு. அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை. பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுபடுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு13 மனைவிகள் .அவர்களில் மூத்தமனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதைகள் சொல்லப்படுகின்றன. சூரியன் நவக்கிரகமண்டலத்தின் தலைவனாகத் திகழ்கிறார். இவர் ஏழுகுதிரைகள் பூட்டப்பட்ட, ஒற்றைச் சக்கர ரதத்தில் மேருமலையை வலம் வருகிறார். இவருக்குச் சாரதியாக அருணன் விளங்குகிறார். வைவஸ்தமனு, யமன், அசுவினிதேவர்கள், பிரதவன், ரைவவஸ்தன் என்ற மகன்களும், யமுனை என்ற மகளும் சூரியனுக்கு உள்ளனர். சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார். பிருகுமுனிவர், வால்மீகி, அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் ஆகியோர் சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்கள் என்று ராமாயணமும், மகாபாரதமும் கூறுகின்றன.

சூரியனுக்கு கோயில் : 

ஒரிசாவிலுள்ள கோனார்க்கிலும், தமிழகத்தில் தஞ்சாவூர் அருகிலுள்ள சூரியனார்கோயிலிலும்சூரியனுக்கு கோயில்கள் உள்ளன. முன்னொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவமுனிவர் என்பவர் தவம் செய்து வந்தார். இவர் தம் தவசக்தியால் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களைச் சொல்வார். ஒருநாள், தனக்கே தொழுநோய் வரவிருப்பதை அறிந்தார். நவக்கிரகங்களை நோக்கி வழிபாடு செய்தார். தொழுநோய் ஏற்படாமல் இருக்க கிரகங்கள் வரம் தந்து, அந்த நோயைத் தாங்களே ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். அந்த நோய்நீங்க பூலோகம் சென்று அர்க்கவனம் என்னும் இடத்தில் பிராணேசுவரரைப் பூஜித்தால் விமோசனம் பெறலாம் என்று பிரம்மா அருளினார். அதன்படியே அர்க்கவனமாகிய சூரியனார்கோயிலுக்கு வந்து விரதமிருந்து நவக்கிரகங்கள் நன்னிலை பெற்றனர். தனக்காக நோயை ஏற்றதியாக உள்ளம் படைத்த கிரகங்களுக்கு காலவமுனிவர் கோயில் அமைத்து நன்றிக்கடனைச் செலுத்தினார். இத்தலமே சூரியனார்கோயில் என்று பெயர் பெற்றது.

புதன்கிழமை பிறந்தவரா?:

 கிரகணத்துக்கு முன்னதாக சாப்பிடக்கூடாது என மகான்கள் சொல்கிறார்கள். நாளை அதிகாலையே கிரகணம் நிகழ இருப்பதால், இன்று மாலை 6.40 மணிக்குள் இரவு உணவை முடித்து விடுவது நல்லது. நாளை காலையில் கிரகண நேரத்தில் ஆறு, குளம், கடல்களில் நீராடி முன்னோருக்காக தர்ப்பணம் செய்யலாம். வீட்டில் இருப்பவர்கள் இறைவணக்கப் பாடல்களை கிரகண நேரத்தில் பாடுவதன் மூலம் எவ்வித தோஷமும் இல்லாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். எந்தக்கிழமையில் கிரகணம் நிகழ்கிறதோ, அந்த கிரகணநாளில் பிறந்தவர்கள், கிரகணம் முடிந்த பிறகு நீராடிவிட்டு, கோயில்களுக்குச் சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்வது நல்லது. இதுதவிர புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.


ஆணும் பெண்ணுமான சூரியனின் தேரோட்டி: சூரியனின் தேரோட்டியான அருணன், காஷ்யபருக்கும், விநதைக்கும் பிறந்தவர். காஷ்யபரின் மற்றொரு மனைவியான கத்துரு என்பவளுக்கு முதலில் குழந்தைகள் பிறந்தனர். இதனால், பொறாமை கொண்ட விநதை, ஆத்திரத்தில் தான் அடைகாத்த முட்டையை பருவம் வரும்முன் உடைக்கவே, ஒருகி கால் இல்லாதவனாக அருணன் பிறந்தான். இதனால் ஆத்திரமடைந்த அவன், ""என்னை கால் இல்லாமல் செய்த நீ, கத்ருவுக்கு அடிமையாகி, அதன்பிறகு என் சகோதரன் கருடன் மூலமாக சாபம் நீங்கப்பெறுவாயாக!'' என்று தன் தாய்க்கே சாபம் விடுத்தான். இவன் மீது இரக்கம் கொண்ட சூரியன், தனது சாரதியாக நியமித்துக் கொண்டான். ஒருசமயம் அருணன் இந்திரலோகத்தில் நடந்த கொலுவை வேடிக்கை பார்க்க, பெண் வடிவில் சென்றான். இந்தப் பெண்ணின் பேரழகைக் கண்ட இந்திரன், அவளோடு இணைந்ததால் வாலி பிறந்தான். இதன் காரணமாக இவன் சூரியலோகத்திற்கு தேரோட்ட தாமதமாகச் சென்றான். அருணன் இந்திரலோகத்தில் நடந்ததைச் சொல்லவே, அந்தப் பெண் உருவைப் பார்க்க வேண்டுமென சூரியன் கூறினார். அருணன் மீண்டும் பெண் வடிவம் எடுக்கவே, அவள் மீது ஆசைப்பட்ட சூரியன் அவளுடன் இணைந்ததால் சுக்ரீவன் பிறந்தான். ராமாயணத்தின் இரு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இந்த அருணனே காரணமாகிறான். இவனது மனைவிஸ்யேனி. இவளுக்கு சம்பாதி, ஜடாயு ஆகிய கருட குழந்தைகள் பிறந்தனர்.

விஷப்பூச்சி அருகே செல்லாதீர் : சூரிய கிரகண நேரத்தில் பூச்சிகளுக்கு சக்தி அதிகரிக்கும். இந்நேரத்தில் வீட்டில் திரியும் பூச்சிகள், பல்லிகள், கரப்பான் களை அடிக்கப்போகிறேன் என்று கட்டையுடன் திரியக்கூடாது. கிரகண நேரத்தில் இவை கடித்தாலோ, உடலில் ஊர்ந்தாலோ ஏற்படும் விளைவு கடுமையாக இருக்கும். குறிப்பாக, குழந்தைகளை இந்நேரத்தில் சுவர்களில் இருக்கும் துவாரங்கள் அருகே செல்லவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சூரிய வணக்கப்பாடல் :


ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி!
தவிக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
சூரிய போற்றி சீலமாய் வாழ சீர்அருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி! சுதந்திரா போற்றி!
வீரியா போற்றி! வினைகள் களைவாய்.
சூரிய ஸ்துதி: சூர்யம் சுந்தர லோக நாதம்
அம்ருதம் வேதாந்த சாரம் சிவம்
சுரேஷம், அமலம் லோகைக சித்தஸ்வயம்
இந்திராதித்ய நரதீபம் சுரகுரும்
த்ரைலோக்ய சூடாமணிம்
ப்ரம்ம விஷ்ணு சிவ ஸ்வரூப
ஹ்ருதயம் வந்தே சதா பாஸ்கரம்

சூரியன் உதித்ததும் இந்த ஸ்லோகத்தை
24 தடவை சொல்பவர்களுக்கு நோய்கள் நீங்குவதுடன் செல்வவளம் பெருகும்.

இரவும் பகலும் ஒரே நேரத்தில் அறிய புகைப்படம்!



இந்த புகைப்படம் கொலம்பிய விண்வெளி ஓடத்தின் கடைசி பயணத்தின் போது மேகமூட்டம் இல்லாத ஒரு நாளில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.


சூரியன் மறையும் நேரத்தில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் மேல் இருந்து எடுக்கப் பட்டது.பாதி இரவையும் பாதி பகலையும் மிகத் தெளிவாக இப்படம் பிரதிபலிக்கிறது. ஒரு பாதியில் சூரிய வெளிச்சத்தையும் மறுபாதியில் இரவு விளக்குகளின் ஒளியில் நகரங்கள் மின்னுவதையும் காணலாம்.



இதில் சூரிய ஒளி படும் ஆப்பிரிக்காவின் மேல் பகுதி சஹாரா பாலைவனமாகும். லண்டன்,லிஸ்பன்,மேட்ரிட் போன்ற பகுதிகள் பகலாக இருக்கும் அதே நேரத்தில் ஹொலண்ட், பாரிஸ், பார்சிலோனா போன்ற பகுதிகளில் இரவு விளக்குகள் மின்ன தொடங்கி விட்டன.


அதற்கு மேலே இடது பக்கம் உறைந்து போன க்ரீன்லாந்து தீவையும் காணலாம்.