Search This Blog

Monday 30 September 2013

வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா?


காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக்
கொண்டிருக்கின்றன.



இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..




sep 30 health eyes
 

கண் எரிச்சலைப் போக்க


கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.


தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.


புத்துணர்ச்சி பெற


வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.


வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.


கருவளையம் போக்க


வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.


கண்கள் குளிர்ச்சி பெற



உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.


சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.


வசீகர கண்கள்


கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மாறும்.மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.


ப்ளீச் வேண்டாமே


முகத்திற்கு ப்ளீச் செய்யும் போது கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை கண்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.


உங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம்.பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன்படுத்தும் போது, சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த் தியாகவும், சிறிய கண்கள் உடையவர் கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.

பிள்ளையார் சுழி! காரணம்!





எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில் லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் சரி, கடை சாமான் லிஸ்டானாலும் சரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம்.  எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்து தான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம் என்பது  Written proof எழுத்து மூல நிரூபணமாகவே பிள்ளையார் சுழியில் தெரிகிறது.

பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் ‘சுழித்து’ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம். பிள்ளையார் சுழி போடாமல் ‘ஓம்’ போடு கிறவர்களும் கிரந்தம், தமிழ் இரண்டிலுமே அந்த ஓமுக்கும் சுழித்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமில்லை, இந்த ப்ரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தானே? சுழி என்பது வளைசல்; ‘வக்ரம்’ என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் ‘வக்ரதுண்டர்’ என்றே  அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும்,  நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். ‘அண்டம்’ என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வ ட்ட வடிவந்தானே?

இந்தப் பூர்ணரூபத்தையே ஸைஃபருக்கும் சொல்வதுதான் ஆச்சரியம்! ‘பரீக்ஷையில் கோழி முட்டை’என்கிறோம். ‘பூர்ணமும் பிள்ளையார்தான், சூன் யமும் பிள்ளையார்தான். உள்ளது அல்லது எல்லாம் பரமாத்மாதான்’ என்கிற மஹா தத்துவத்தையே சுழி காட்டுகிறது. காரியத்தை ஸைஃபர் பண் ணிக்கொண்டு வருகிறவனை, ‘‘என்னடா சுழி!’’ என்று ப்ரக்ருதத்திலும் (நடைமுறையிலும்) சொல்கிறோம். கையிலிருக்கிற மோதகத்தில் தித்திப்புப்  பூர்ணத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய பூர்ணத்வத்தை ‘டெமான்ஸ்ட்ரேட்’ பண்ணும் பிள்ளையாருக்கே சுழி போடுகிறோம். இந்தச் சுழி மற்றச் சுழியையெல்லாம் முழுசாகப் பண்ணிவிடுவது.

வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இர ண்டுமாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு  நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது. இங்கிலீஷிலும் straightness, straight   forward என்கிறார்கள். குணம், குணஹீனம் எல்லாம் ஒரே நிர்குண பரமாத்மாவின் வேஷங்கள்தான். ‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ, உ, ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்‘காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள்  இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம  ஸம்ஹாரம்; ஈஸ்வரன்.

த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம்  என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ, உ, ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உமஅ என்று இருக்கின்றன  அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’ விலோ ஸ்திதி (பரிபாலன) பீஜமான ‘உ’ என்பது முதல் எழுத்தாயிரு ப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’ வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல் லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.

அ, உ, ம வில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது.  ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் ‘அ’வும் ‘ம’வும் சேராமல் ‘உ’காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன் றுகிறது. அதாவது, அவர் ‘’தாயைப் போலப் பிள்ளை’’ மட்டுமில்லை; தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி? அவளும் ரக்ஷிக்கிற  ‘உ’வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார ‘ம’ஸ்ருஷ்டி ‘அ’இவற்றையும் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எ ல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்து கொண்டு ‘உ’ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.

ப்ரணவத்தில் ‘உ’விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’என்றே  பெயர் படைத்தவளாயிருக்கிறாள். பிள்ளையாரைப் பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ‘‘சுக்லாம்பரதரம்  விஷ்ணும்’’ என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்) ‘உ’என்பது சிவசக்தி புத்ரனை விஷ்ணுவோடும்  ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ண வத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது! வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது. சக்ராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத் தியில் அதற்கு ஆதாரமாக, அச்சாக (axis ஆக) நேரான (straight ஆன) ஒன்று இருந்தாக வேண்டும்.

விஷ்ணு தன் விரலையே நேராக  நிமிர்த்திக்கொண்டு அதிலேதான் சக்ராயு தத்தைக் கோத்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டியிருக்கும். சுற்றச் சுற்றப் பொறிப்  பொறியாகக் கொட்டுகிற கார்த்திகை வாணமானாலும் சரி (இது ஒளி)  விரலிலே மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி டபடபவென்று அடிக்கிற கிரிச்சட் டியானாலும் சரி (இது ஒலி), இதுகளின் வட்டமான சுழற்சிகளுக்கு ஆதாரமாகக் கையோ, குச்சியோ எதுவோ ஒன்று நேர்கோடாக இருக்க வேண்டியி ருக்கிறது. யுனிவர்ஸில் லோகங்களெல்லாம் ஸர்குலராகத்தான் சுற்றிக் கொண்டிருக் கின்றன என்கிறபோது இவற்றுக்கும்கூட straight line  ஆக ஒரு ஆதார axis நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் energy (சக்தி) ரூபத்தில் இருக்கத்தான் வேண்டும்.

வட்டமாகச் சுற்றுகிற  ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும்  போடுகிறோம். எங்கேயோ படித்த, அல்லது கேட்ட, ஞாபகம், எனர்ஜி உண்டாகிறதே பிள்ளையார் சுழி ரூபத்தில்தான் என்று. தாரை கொட்டி அதிலிருந்து எலெக்ட் ரிஸிடி எடுக்கிறபோது ரொடேஷனிலிருந்து (வட்டத்திலிருந்து) நேர்கோடாகத்தான் மின்சாரம் புறப்படுகிறதென்று எடுத்துக்காட்டியிருந்தது. பிள்ளையார்  சுழியில் கொம்பு தான் ரொடேஷன்; கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவசக்தி ஸ்வரூபமான நாதபிந்துக்களாகக்கூடச் சொல் லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸூக்ஷ்மமான விஷயம்.

ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு,  அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று  என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம். ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம  பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்து தான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது.

கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. ‘ஏக தந்தர்’ என்பதை ‘ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள். ‘‘பெரும்பாரக்கோடும்’’, ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே’’ என்றெல்லாம் அவ்வைப் பாட்டி  சொல்லும்போது ‘கோடு’ என்றாலும் தந்தந்தான். எப்பொழுதும் குழந்தையாயிருக்கிற ஸ்வாமியை வேண்டிக் கொண்டதாலேயே குழந்தைப் பிராயத்தில்  கிழவியாகிவிட்ட அவ்வை சொன்ன ‘கொடுவினை’ என்பதுதான் ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப்  பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். ‘தலைச்சுழி’ என்பதும் இதைத் தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!’’

காஞ்சி பரமாச்சார்யார் என்ற ‘தெய்வத்தின் குரல்’   



புரட்டாசிப் பட்டம் - என்ன விதைக்கலாம்? எவ்வளவு அறுக்கலாம்?


தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை  சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ...


பருத்தி: வெள்ளைத் தங்கம்


புரட்டாசிப் பட்டத்திற்கு எல்.ஆர்.ஏ. 5166, கே 11, கே.சி. 2, எஸ்.பி.வி.ஆர். 2 போன்ற பருத்தி ரகங்களைப் பயிரிடலாம். பருத்திக் காய்களில் மேலிருந்து கீழாக கீறல் தோன்றி, ஓரிரு நாட்களில் முழுவதும் மலர்ந்து வெடிப்பதே அறுவடைக்கான அறிகுறியாகும். விதைத்த  120 நாட்களுக்குப் பின் வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை காலை மற்றும் மாலை நேரங்களில் பஞ்சை கைகளால் அறுவடை செய்ய வேண்டும். ரகங்களைப் பொருத்து மகசூல் அளவு மாறுபடும்.


துவரை: ஏற்றம் தரும் நாற்று நடவு


துவரை, மிதமான வெப்பம் மற்றும் குறைந்த ஈரப்பதத்தில் வளரக்கூடியவை. நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் மற்றும் குறுமண் நிலம் துவரை சாகுபடிக்கு ஏற்றது. புரட்டாசிப் பட்டத்தில் கோ 6, வம்பன் 1, வம்பன் 2, கோ(சிபி) 7  போன்ற துவரை ரகங்களைப் பயிரிடலாம். துவரை சாகுபடியில் விதைப்பு முறையை விட, நாற்று நடவு தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறலாம். 150 நாட்களில் அறுவடை செய்துவிடலாம். 80 சதவிகிதக் காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் காய்களை தனியாகவோ அல்லது முழு செடியாகவோ அறுவடை செய்து வெயிலில் உலர்த்தி விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.


அவரை: அள்ளலாம் மகசூல்


அவரையில் இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று, செடியில் காய்ப்பது (குத்து அவரை), மற்றொன்று கொடியில் காய்ப்பது (பந்தல் அவரை). பந்தல் ரகத்தை பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 10 அடியும், குத்து ரகத்தைப் பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 1.5 அடியும் இடைவெளி விட வேண்டும். பந்தல் அமைத்து சாகுபடி செய்யும்போது, கொடி, பந்தலை அடைந்தவுடன் நுனிக்குருத்தைக் கிள்ளிவிட வேண்டும். அவரை வேர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தக்கூடிய பாக்டீரியங்கள் இருப்பதால் இது மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தி மண்ணை வளமாக்குகிறது. பந்தல் அவரையில் ஹெக்டேருக்கு 240 நாட்களில் 8-10 டன் மற்றும் குத்து அவரையில் 120 நாட்களில் 6-8 டன் மகசூல் கிடைக்கும்.


தட்டைப்பயறு: வெப்பத்திலும் மகசூல் கொட்டும்


வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் தட்டைப்பயிரை சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் மற்றும் நடுநிலை கார அமிலநிலை கொண்ட மண் ஏற்றது. தனிப்பயிராக இருப்பின் ஹெக்டேருக்கு அனைத்து ரகங்களுக்கும் 20 கிலோ விதைகளும், கலப்புப் பயிராக இருப்பின் 10 கிலோ விதைகளும் தேவைப்படும். 120 நாட்களில் அறுவடை செய்து விடலாம். காய்கள் 80 சதவிகிதம் முற்றியபின், செடிகளை அறுத்துக் கட்டி வைத்து பின்பு வெயிலில் காய வைத்து, மணிகளைப் பிரித்தெடுக்க வேண்டும். ஹெக்டேருக்கு மானாவாரியில் 700-900 கிலோ மற்றும் இறவையில் 1,200-1,500 கிலோ மகசூல் கிடைக்கும்.


பச்சைப்பயறு: பலே வருமானம்


கோ 4, கோ 6, கேஎம் 2, விபிஎன் 1, பிஒய் 1 போன்ற பச்சைப்பயறு ரகங்கள் புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்றவை. ஹெக்டேருக்கு தனிப்பயிருக்கு 20 கிலோவும், கலப்புப்பயிருக்கு 10 கிலோ விதைகளும் தேவைப்படும். மூன்றில் 2 பங்கு காய்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் செடியை அறுவடை செய்து காயவைத்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். பச்சைப்பயறு தானியங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது. பருப்பு தவிர எஞ்சிய பாகங்கள் பசுந்தாள் உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. ஹெக்டேருக்கு மானாவாரியில் 600-750 கிலோவும், இறவையில் 1,000-1,200 கிலோவும் மகசூல் கிடைக்கும்.


தினை: மானாவாரி மன்னன்


தமிழகத்தில் பெரும்பாலும் மானாவாரியாகவே சாகுபடி செய்யப்படும் தினை, கடினமான வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. செம்மண், இரு மண் கலந்த நிலங்கள் இதற்கு உகந்தது. ஒரு ஹெக்டேருக்கு வரிசை விதைப்பிற்கு 10 கிலோவும், தூவுவதற்கு 12.5 கிலோ விதைகளும் தேவைப்படும். 90-ஆம் நாளில் கதிர் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும்.  உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்துவதாலும், சீரிய சாகுபடி குறிப்புகளைக் கடைப்பிடிப்பதாலும் தோராயமாக ஹெக்டேருக்கு ஒன்றரை டன் தானியமும், 5 டன் தட்டையும் பெறலாம். தினை தானியத்தை சாக்குப் பைகளில் வைத்து நீண்ட காலத்திற்கு சேமிக்க முடியும். தினையில் உள்ள சத்துக்கள் நெல், அரிசி, கோதுமையில் உள்ளதைவிட அதிகமானது.


குதிரைவாலி: காலம் கம்மி, லாபம் ஜாஸ்தி


குதிரைவாலியை 90 நாட்களில் மானாவாரியாகப் பயிரிட்டு அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு மழை பெய்த பின், ஒரு மாதம் வரை மழை இல்லாவிட்டாலும் தாக்குப் பிடிக்கும். பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் குதிரைவாலியைத் தாக்குவது இல்லை. கதிர் நன்கு காய்த்து முற்றிய பின், அறுவடை செய்து, நன்கு காய வைத்து சுத்தம் செய்து, காற்று புகாதபடி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். குதிரைவாலி சாகுபடியில் தானியங்களைத் தவிர, அவற்றின் தாள்களும் கால்நடைத் தீவனங்களுக்காக விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் கிடைக்கும். இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது.



கோதுமை, கம்பு, ராகி, மக்காச்சோளம், உளுந்து, சோயாமொச்சை போன்ற பயிர்களையும் புரட்டாசிப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விவசாயிகள் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

 

மிரட்டும் மெட்ராஸ் ஐ!


கோடை காலம் வந்தாலே உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் வேகமா பரவும். இதுல குறிப்பா மக்கள தாக்குற நோய் மெட்ராஸ் ஐ தான். ஆனா என்னவோ சம்மர் முடிஞ்சு, 3 மாசம் ஆகியும் சிட்டிவாசிகளை இந்த நோய் மிரட்டிட்டு வர்ருது. டெய்லி 15 பேராவது மெட்ராஸ் ஐ அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வர்றதா அரசு கண் மருத்துவமனை டாக்டர்கள் சொல்றாங்க.


மெட்ராஸ் ஐ என்ற நோய் ஒருவித வைரஸ் மூலம் பரவுகிறது. கண்வீக்கம், எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல் மற்றும் சிவப்பாகுதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களிடம் மிகவும் எளிதாக இந்த நோய் பரவுகிறது. குறைந்தது இந்நோயின் தாக்கம் ஒரு வாரம் நீடிக்கும். மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



இதுகுறித்து கண் மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘மழைக்காலம் தொடங்கிய பிறகும் மெட்ராஸ் ஐ சிட்டியின் சில இடங்களில் பரவிட்டு வருது. இதில் பாதிக்கப்பட்ட 40 சதவீத நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கும், 30 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக செல்கின்றனர். மீதமுள்ள 30 சதவீதம் பேர் சுய சிகிச்சை அளித்துக் கொள்கின்றனர். மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம். கண் சிவப்பாகுதல், கண்ணில் நீர்வடிதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள். பொதுவாக இந்த நோய் காற்று மற்றும் தண்ணீர் மூலமாக பரவுகிறது. 



இந்நோய் வராமல் இருக்க அடிக்கடி சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். மேலும் முன்தினம் இரவு சுமார் 15 நிமிடம் சூடு வைத்த தண்ணீரை கொண்டு மறுநாள் காலையில் கண்களை சுத்தம் செய்வது நல்லது. ஃபில்டர் வாட்டரை பயன்படுத்த கூடாது. ஏனென்றால் ஃபில்டர் வாட்டரில் பாக்டீரியாக்கள் இருக்காது. ஆனால் அதில் வைரஸ்கள் இருக்கும் என்கிறார்.  அதானல உங்க கண்களை ஜாக்கிரதையா பார்த்துக்குங்க!

Sunday 29 September 2013

அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்- சுற்றுலாத்தலங்கள்!



      அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
 
டெல்லி குதுப்மினார். இந்தியாவின் மிகஉயர்ந்த கோபுரம். செம்மண்-பாறைக் கற்களால் உருவான அரிய பொக்கிஷம். இதன் உயரம் 72.5 மீட்டர் (சுமார் 238அடி). உயர்ந்து நிற்கும் குதுப்மினார், சுவாரஸ்ய வரலாற்றையும் உள்ளடக்கியது.

 
டெல்லி மட்டுமின்றி தெற்காசியாவின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர், முதல் சுல்தான் என்ற பெருமைக்குரியவர் குத்புதீன் ஐபக். அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர். மத்திய ஆசியாவில் துருக்கிய மரபில் பிறந்த குத்புதீன் ஐபக் சிறுவயதிலேயே அடிமையாக விற்கப்பட்டார். இடையே கைமாறி, கடைசியில் முகமத்கோரியால் விலைக்கு வாங்கப்பட்டார். தனது வீரதீர செயல்பாடுகளால் கோரியின் முக்கிய தளபதியாக விளங்கினார். கோரியின் மறைவுக்குப் பிறகு டெல்லி சுல்தான் ஆனார்.டெல்லியில் உருவான முஸ்லிம் நினைவுச்-சின்னங்களுக்கு காரணகர்த்தா இவரே.
 
முதலில் குவ்வாத்-உல்-இஸ்லாம் மசூதியை அமைத்த குத்புதீன் ஐபக், 1199ம் ஆண்டில் குதுப்மினாருக்கு அஸ்திவாரம் போட்டார். மக்களை தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியாக இந்த கோபுரத்தை எழுப்பத் தொடங்கினார். இதன் முதல் அடுக்கு முற்றுப்பெற்ற நிலையில் குத்புதீன் ஐபக் திடீரென மரணம் அடைந்தார். பிறகு ஆட்சிக்கு வந்த குத்புதீன் ஐபக்கின் மருமகன் சம்சுதீன் அல்துமிஷ், கோபுரத்தில் மேலும் மூன்று அடுக்குகளை அமைத்தார். 1211 முதல் 1236ம் ஆண்டு வரை கட்டடப்பணிகள் நடந்தன.
 
இருப்பினும், கடைசி அடுக்கு 1386ம் ஆண்டில் பெரோஷா துக்ளக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இப்படி மூன்று மன்னர்களால் உயர்த்தப்பட்டதுதான் குதுப்மினார். ஒவ்வொரு அடுக்கிலும் உப்பரிகை அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. குதுப்மினாரின் உச்சிக்கு சென்றடைய 379 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
குதுப்மினார் வளாகத்தில் உள்ள அல்துமிஷ் ஸ்தூபி, அலைய் தர்வாஷா மெயின்கேட், அலைய் மினார் போன்ற கட்டடங்களும் கலைநயம் மிக்கவை. ஏழு மீட்டர் உயரம் கொண்ட இரும்புத்தூண் ஒன்றும் இங்கு உள்ளது. நான்கரை அடி பருமனும் ஏழரை டன் எடையும் கொண்ட இந்த இரும்புத்தூண் இன்றளவும் சிறிதும்கூட துருப்பிடிக்காதது அதிசயமே.
 
குதுப்மினாரையும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்களையும் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ அமைப்பு 1993ம் ஆண்டில் அறிவித்தது. நவம்பர்- டிசம்பரில் இங்கு குதுப் திருவிழா நடத்தப்படுகிறது. டெல்லி மாநில சுற்றுலாத்துறை சார்பில் 3நாட்கள் நடைபெறும்  இந்த  விழா, இசை - நடனம் - நாட்டியம்  என அமர்க்களப்படுகிறது.
 
அடிமை உருவாக்கிய அற்புத கோபுரம் குதுப்மினார்,தன்னைக் காண்போரையும் அடிமையாக்கி விடுகிறது, வனப்பாலும் வசீகரத்தாலும்..!

கடவுள் பக்தி (நீதிக்கதை)!




ஒரு ஊரில் கடவுள் மீது அதிக பக்திக் கொண்ட ஒருவன் இருந்தான்.அவன் பெயர் முருகன்.அவனுக்கு நாதன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான்.

நாதன் நாத்திகவாதி.கடவுள் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லித் திரிபவன்.

ஒரு நாள் நாதன்,முருகனிடம் ' நீ கடவுளை எனக்குக் காட்டு....நான் ஒப்புக்கொள்கிறேன் ' என்றான்.

என்னுடன் இரு.நான் உனக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்றான் முருகன்.

அதன்படியே நாதன் முருகன் வீட்டிற்கு வந்தான்,பல மணிநேரம் ஆகியும் இறைவன் வரவில்லை.

நாதன், முருகனிடம் ' பசிக்கிறது என்றான்.

நீ சொல்வது பொய்- என்றான் முருகன்.

இல்லை உண்மையிலேயே எனக்கு பசிக்கிறது.

அப்படியானால் எனக்கு பசியைக் காட்டு.

பசியை எப்படி காட்டமுடியும்.

அதன் நிறம்.

பசிக்கு ஏது நிறம்.

அதன் குணம்.

குணம் இல்லை.

உன்னால் உன் பசியைக் காட்டமுடியவில்லை.ஏன்.?

அது வந்து....அது வந்து..

எப்படி பசி என்று ஒன்று இருந்தும் உன்னால் அந்தப் பசியை காட்டமுடியவில்லையோ அது போன்று தான் கடவுள் என்று ஒருவர் இருந்தும் அவர் புற உருவத்தைக் காட்டமுடிவதில்லை.

கடவுள் மீது பக்தி உள்ளவர்கள் மட்டுமே அந்த இறைவன் இருப்பது உணரமுடியும் என்றான் முருகன்.

நாதனுக்கும் கடவுள் நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது.

Saturday 28 September 2013

உலக இதய நாள் – செப்டம்பர் 29!


இந்த உலகில், முதலிடம் வகிக்கும் உயிர்கொல்லி நோயான “மாரடைப்பு” எனும் கொடிய நோயினால் வருடத்திற்கு 17மில்லியன் மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29% ஆகின்றது. அதிலும் 82% வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும்தான் காணப் படுகிறது.இந்நிலையில்தான் செப்டம்பர் 29-ம தேதியான இன்று உலகம் முழுவதும், ‘இதய நாள்’ இன்று கொண்டாடப்படுகிறது. 



உலக இதய நாளின் முக்கிய குறிக்கோளே, ‘மாரடைப்பை’ வரும் முன் காப்பதும், வந்தபின் பூரண குணம் அடையச் செய்வதும்தான். உலகளவில் சிந்தித்து, வீட்டளவில் செயல்பட்டு, ஒவ்வொரு தனி மனிதனும் அவர்தம் இதயத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உலகளவில் மாரடைப்பு அற்ற சமுதாயத்தையே உருவாக்கமுடியும்.



Heart

 


“மாரடைப்பு (heart attack)” எனும் நோயே, தவறான வாழ்கை முறையினால் ஏற்படுவது. எனவே, சீரான வாழ்க்கை முறையினால் மட்டுமே அந்நோயைத் தடுக்க முடியும். வாழ்க்கை முறை என்பதை வரையறுப்பது அவர்தம் மனநிலையேதான். 


எதிர்மறை எண்ணங்களான, கோபம், போட்டி, பொறாமை, ஆவேசம், ஆத்திரம் போன்றவற்றால் மூளையில் வெளிப்படும் எண்ண அலைகளை அதிகப்படுத்தி, அதன்விளைவாக வேண்டாத அட்ரினலின், கார்டிசால் போன்ற ஆர்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்க வைத்து அவை, இரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் : 


ஆவேசத்தையும் , ஆத்திரத்தையும் அதிகமான கொழுப்பு உணவைச் சாப்பிடுவதில் காட்டுவது. உடல் எடை கூடுவது. உடற் பயிற்சியைத் தவிர்ப்பது. 


இந்நிலையில் மகிழ்ச்சி என்னும் மாய உணர்வினால் புகை பிடிப்பது , மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாவது. பதற்றம், உடல் நடுக்கம், அதிக வியர்வை. இதயத் துடிப்பு அதிகரித்தல். இரத்த அழுத்தம் கூடுதல். கல்லீரலில் உற்பத்தியாகும் கெட்ட கொலசுட்ரால் கூடியும் , நல்ல கொலசுட்ரால் குறைந்தும் இரத்தத்தில் கலக்கின்றது. இரத்தச் சர்க்கரை அளவு கூடுதல். 



இவை அனைத்தும், இதய இரத்தக் குழாய்களில் அடைப்பு வருவதற்கும், சுருங்குவதற்கும் காரணமாகி மாரடைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா, தியா னம் செய்ய வேண்டும். சத்துள்ள காய்கறிகள், பழங் களை சாப்பிட வேண்டும். அரிசி கோதுமை உணவையும் மற்றும் எண்ணெய், நெய், வறுத்த உணவு பொருட்கள், ஊறுகாய் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை பிடித்தலை அறவே தவிர்க்க வேண்டும். இதனை நாம் கடைப்பிடித்தால், இதய நோய் வராமல் தடுக்க முடியும்.


அத்துடன் தினமும் அரை மணி நேரமாவது காலார நடை போடுங்கள். சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுதுவதை பெருமளவு குறைத்து விடலாம். பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (walking), மெல்லோட்டம்(jogging), சைக்கிள் பயிற்சி(cycling), நீச்சல் பயிற்சி(swimming) என நான்கு வகைகளாக பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உடல் அமைப்பு, ஓய்வு நேரம்,உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.


குறிப்பாக வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. 


அதிலும் எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள் இருதயம் கடைசி வரை ஆரோக்கியமாய் இயங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பிரவுசருக்கு ஒரு குளிர் கண்ணாடி.!


பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சிகளின் போது நடுவே ஒரு சின்ன பிரேக் என்று சொல்வது போல தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது அடிக்கடி சின்ன பிரேக் எடுத்து கொள்வது அவசியம் என்கின்றனர்.இரண்டு வகைகளில் இந்த பிரேக் வலியுறுத்தப்படுகிறது.ஒன்று அமர்தல் தொடர்பாக!.இன்னொன்று பார்த்த‌லுக்காக!


அதாவது கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது ஒரே இடத்தில் ஒரே மாதிரி அமர்ந்திருக்க நேர்கிறது அல்லவா! உடலுக்கு இது கேடு என்று சொல்கின்றனர்.இல்லை எச்சரிக்கின்றனர்.இடுப்பு வலியில் துவங்கி பலவித பாதிப்புகள் இதனால் ஏற்படலாம்.இப்படி கம்ப்யூட்டர் முன் பழியாக கிடப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவர்த்து அளிக்க எர்கோனாமிக்ஸ் என்னும் தனிப்பிரிவே இருக்கிறது.எர்கோனாமிக்ஸ் என்றால் அமர்தல் கலை!

sep 28 - tec glass MINI

 


இதே போல கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மானிட்டரையே பார்த்து கொண்டிருப்பதால் கண்களுக்கு களைப்பு ஏற்படுகிறது.இதை தவிர்க்க இடையிடையே கண்களுக்கு ஓய்வு தேவை என வலியுறுத்துகின்றனர். இதை நாமாக செய்ய மாட்டோம் என்று சரியான இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ள உதவுவதற்கு என்றே இணையதளங்களும் செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.


அதோடு 20;20 என ஒரு விதியும் உருவாக்கியுள்ளனர்.
இவை தவிர கண்களை பாதுகாப்பதற்கான குளிர்கண்ணாடியும் கூட உருவாக்கப்பட்டுள்ளது.இந்த குளிர் கண்ணாடியை நாம் மாட்டிக்கொள்ள வேண்டியதில்லை .பிரவுசருக்கு மாட்டி விடலாம்.


நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்து கொண்டிருக்கும் போது அதன் பிரகாசத்தன்மை கண்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கும்.குறிப்பாக மீக நீளமான கட்டுரையை படிக்கும் நிலை ஏற்பட்டால் கண்களில் பூச்சி பற‌ப்பது போல உணர்வு ஏற்படலாம்.


இதை தவிர்க்க கம்ப்யூட்டர் திரையின் பிரகாசத்தை கொஞ்சம் கொஞ்சம் குறைத்து கொண்டால் படிக்கும் போது கணகளுக்கு இதமாக இருக்கும் அல்லவா? கூகுல் கூரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக உருவாக்கப்பட்டுள்ள சன் கிளாசஸ் இதை தான் செய்கிறது.


இந்த பிரவுசர் நீட்டிப்பை டவுண்லோடு செய்து கொண்டால் ,கம்ப்யூட்டரில் படிக்கும் போது அயர்ச்சியாக உணர்ந்தால் உடனே இதை கிளிக் செய்து பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தின் பிரகாசத்தை குறைத்து கொள்ளலாம்.
குளிர்கண்ணாடி வழியே பார்க்கும் போது கண்கள் கூசாமல் காட்சிகள் இதமாக தெரிவது போல இப்போது இணையதளமும் பிரகாசம் குறைந்து மங்களாக ஆனால் தெளிவாக தெரியும்.எந்த அளவுக்கு பிரகாசம் குறைய வேண்டும் என்று கூட தீர்மானித்து கொள்ளலாம்.இதற்காக நீட்டிப்பில் உள்ள கட்டத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். கட்டத்தின் நடுவே உள்ள கர்சரை அப்படியும் இப்படியும் நகர்த்தினால் பிரகாசம் கூடும் குறையும்.


கம்ப்யூட்டரிலேயே பிரகாசத்தை மாற்றி கொள்ளும் வசதி இருக்கிறது.ஆனால் இந்த பிரவுசர் சேவை கம்ப்யூட்டரில் எந்த மாற்றமும் செய்யாமல் பிரவுசரில் மாற்றம் செய்து பார்க்கும் இணையதளத்தின் பிரகாசத்தை மங்களாக்கி தருகிறது.


அதாவது பிரவுசருக்கு குளுர்கண்ணாடியை அணிவித்து நம் கணகளுக்கு இதம் தருகிறது.


குளிர்கண்னாடி டவுண்லோடு செய்ய:




அன்பே சிறந்தது (நீதிக்கதை)!



 
 
அந்த வீட்டில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான்.
அப்போது வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

தந்தை 'வாருங்கள்' என்றார்.

'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது...யாராவது ஒருவர் தான் வரமுடியும்...என் பெயர் பணம்...இவர் பெயர் வெற்றி...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்...எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ' வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார்.

ஆனால் குமரனோ ...'அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்...நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட ...அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் குமரனின் தாயோ 'வேண்டாம்...அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும், 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.உடன் குமரனின் அம்மா'அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்...அன்பே முக்கியம்.

இதையே வள்ளுவர்..

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு


என்கிறார்..

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்.இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும்.

சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.

புலியும்..மானும்..நரியும் (நீதிக்கதை)





ஒரு காட்டில் புலியை வேட்டையாட வேடன் ஒருவன் ஒரு கூண்டை வைத்து..அதில் ஆடு ஒன்றைக் கட்டி வைத்திருந்தான்.புலி ஆட்டிறைச்சி மீது ஆசைப்பட்டு உள்ளே வந்ததும் கூண்டு மூடிக்கொள்ளும்..அப்படியான கூண்டு அது.

அதன்படியே, புலி ஒன்று ஆட்டிற்கு ஆசைப்பட்டு உள்ளே செல்ல..கூண்டு மூடிக் கொண்டது.

கூண்டிற்குள் மாட்டிக் கொண்ட புலி..தப்பிக்க வழி தெரியாமல் விழித்த போது..ஒரு மான் அந்தப் பக்கம் வந்தது.

புலி மானிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கூறியது.

அதற்கு அந்த மான்..'உன்னை நான் காப்பாற்றினால் வெளியே நீ வந்ததும் என்னை அடித்துக் கொன்றுவிடுவாயே!'என்றது.

உடன் அந்தப் புலி 'நான் அப்படி செய்ய மாட்டேன்' என உறுதி கூற, மான் கூண்டின் கதவை திறந்து விட்டது.கூண்டிற்குள் இருந்த ஆடு தப்பினால் போதும் என ஓடி ஒளிந்தது.வெளியே வந்த புலி, 'ஆடும் ஒடி விட்டது..எனக்கோ பசி..உன்னைத்தான் கொல்லப் போகிறேன்' என்றவாறு மானின் மீது பாயத் தயாராகியது.

உடன் மான் புலியின் உறுதிமொழியை ஞாபகப் படுத்தியது. 'என் உயிரை காப்பாற்றிக் கொள்ள அளித்த உறுதி அது' என்றது புலி.

அந்நேரம் ஒரு நரி அங்கு வந்து..நடந்த விஷயங்களை கேட்டு அறிந்தது.

மானைக் காப்பாற்ற விரும்பிய நரி, புலியைப் பார்த்து ' நான் நீதி வழங்குகிறேன்..நடந்தவற்றை அப்படியே இருவரும் செய்துக் காட்டுங்கள்' என்றது.

பின் புலியைப் பார்த்து..'நீங்கள் கூண்டிற்குள் எங்கு இருந்தீர்கள்?' என்றது.

புலியும் கூண்டினுள் சென்று..'இங்குதான்' என்று சொல்லும் போதே நரி மீண்டும் கூண்டை மூடியது.புலி இப்போது மீண்டும் கூண்டுக்குள்.

நரி புலியைப் பார்த்து சொல்லிற்று..'உங்களைக் காப்பாற்றிய மானையே கொல்லத் துணிந்ததற்கு இதுதான் தண்டனை '

பின் மானிடம், 'ஒருவரைக் காப்பாற்றுமுன் அவரின் தராதரத்தை அறிந்துக் கொள்ள வேண்டும்..தகுதியில்லாதவர்க்கு உதவக் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றது.

நாமும் தகுதியற்றவர்களுக்கு உதவினால் துன்பத்தில் மாட்டிக் கொள்வோம்.ஒருவரின் தரம் அறிந்து உதவ வேண்டும்.

லேசர் கதிரின் வலிமை!




ஆப்பிள் நிறுவனம் புதிய ios7.0.2 மேம்படுத்தல் வெளியீடு!



ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐ பேட் டச் சாதனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ios7 அல்லது ios7.0.1 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை மேம்படுத்தப்பட்டு(updates) புதிய ios7.0.2 என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.


ios7 வெளியீட்டுக்குப் பிறகு லாக் ஸ்கிரீன் சிக்கல்களை மேம்படுத்தப்பட்டு சரி செய்துள்ளது. ஐபோன் 5-ல் 21MB பதிவிறக்கம் செய்யக்கூடியதாக ios7.0.2 மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் போன் லாக் ஸ்கிரீன் சிக்கல்கள் ஏற்படும் போதும் ஐபோன் வாடிக்கையாளர் மற்றொருவர்களுக்கு அழைக்ககூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.



ஐபோன் சாதனத்தில் போன் லாக் ஸ்கிரீன் சிக்கல்கள் இருக்கும் போது கூட எமர்ஜென்சி கால் (emergency call) அழைப்பினை மட்டும் ஏற்கக்கூடியதாக இல்லாமல் சாதனத்தில் இருக்கும் நம்பர்களை அழைக்கக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. NULL dereferences என்ற சிக்கல்களை சரி செய்வதற்காக இந்த புதிய 7.0.2 ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

iphone 5S hack செய்ய முடியுமா! அட கடவுளே!






திருடர்களை விட ஒருபடி மேலேயே யோசிக்கிறாங்களே….



அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன் 5-ல் கைரேகை ஸ்கேனிங்க் மூலம் பாதுகாப்பு வசதி அளித்துள்ளது.



ஐபோனை ஆக்சஸ் செய்வதற்கென கைரேகையை வழங்கினால் மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருசில நாட்களிலேயே இப்பாதுகாப்பு வசதியை தாம் உடைத்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளனர் ஜேர்மனிய ஹேக்கர் குழுவினர்.



கைரேகையை படம்பிடித்து அதியுயர் தரத்தில் கிளாஸ் ஒன்றில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதைக்கொண்டே ஐபோனை இயக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.


Friday 27 September 2013

டெல்லி செங்கோட்டை- சுற்றுலாத்தலங்கள்!


      டெல்லி செங்கோட்டை
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
டெல்லி செங்கோட்டை
 
டெல்லி நகரின் இன்னொரு கம்பீரம் 'செங்கோட்டை'. இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக்கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் மொகலாய மன்னர் ஷாஜஹான்.
 
தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜஹானா பாத்திற்கு (தற்போதைய பழைய டெல்லி) ஷாஜஹான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக் கட்டிமுடிக்க 1638-48 வரை பத்தாண்டு ஆனது. செலவிட்ட தொகை அப்போதைய மதிப்புக்கு ஒருகோடி ரூபாயாம்.
 
யமுனை நதிக்கரையில் ஒப்பிலா அழகுடன் எழுந்து நிற்கும் செங்கோட்டை, பாரசீக, ஐரோப்பிய, இந்திய கட்டடக் கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சரியப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும் போற்றப்படுகிறது. டெல்லிகேட், லாகூர்கேட் என இருபெரும் நுழைவாயில்கள் உள்ளன.
 
கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றி அந்தப்புரங்களிலும்கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. 'திவான்- இ- ஆம்' எனப்படும் தர்பார் மண்டபம் பொதுமக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காக அமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.
 
'ஜெனானா' என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மஹால், ரங் மஹால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்ட நீருற்று புதுமையின் பதிப்பு.அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட மோத்திமஸ்ஜித் எனப்படும் பியர்ல் மஸ்ஜித் (முத்து மசூதி) முழுவதும் சலவைக்கல் மயமே.

 
இவைதவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த 'நஹ்ர்-இ-பேஹிஸ்ட்' என்ற பகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி, கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும்கூட கால்வாய்வெட்டி நனவாக்கிய மொகலாய மன்னர்கள். இதை 'சொர்க்கத்தின் நீரோடை' என்றும் அழைத்து வந்தனர். நீரோடையை இன்றும் காணலாம்.
 
செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான் என்றாலும் அவருக்குப் பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது கண்டோன்மென்ட்டாக (ராணுவமுகாம் மற்றும் குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது. அப்போது சில கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகும் ராணுவக்-கட்டுப்பாட்டில் இருந்துவந்த செங்கோட்டை, 2003ம் ஆண்டில் இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இங்குள்ள மும்தாஜ் மஹாலில் மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வரலாற்றுப் பொக்கிஷங்கள். பெருமைக்குரிய டெல்லி செங்கோட்டை, யுனெஸ்கோவால் 2007ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

வேப்பமரமும்...சிறுவனும் (நீதிக்கதை)






வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான்.அதைக் கண்ட மரம் 'தம்பி ஏன் அழறே' என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை

.காலையில் எழுந்ததுமே 'முதலில் பல் தேய்த்துவிட்டு வா' என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா 'காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி' என்று கண்டிக்கிறார்.பின் குளித்து முடித்து 'பசிக்கலை' என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.

பள்ளிக்கு வந்தாலோ 'பாடம் படிக்கலைன்னும்,பாடம் சொல்லிக்கொடுக்கும் போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க"

எல்லாருமே நாள் முழுக்க என்னை திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை" என்றான் அழுது கொண்டே.

வேப்பமரம் "என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா?" என்றது.'ஓ...இலை மட்டுமா உன் இலை,குச்சி எல்லாமே ஒரே கசப்பு.சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன்.

"ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன்.

அது போல் பெற்றோர்,ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது.ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.

நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பபப்டுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.

புதிய தலைமுறை கணனியை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானி !!



உலகிலேயே முதன்முறையாக உலோகமற்ற கரிம நுண் குழாய் (கார்பன்-நானோடியூப்) மூலம் புதிய தலைமுறை கணனியை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.



அமெரிக்காவில், இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுபாஸிஷ் மித்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினரே இந்த சாதனையை படைத்துள்ளர்.



சிலிக்கானைவிட மேம்பட்ட கார்பன் நானோடியூபுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணனி, மின்னணுவியல் பயன்பாட்டில் புதிய அத்தியாயமாகும்.



குறைந்த ஆற்றலில், மிக வேகமான செயல்திறனை இந்தக் கணினி பெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



இது குறித்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மின்னியல் பொறியாளரும், கணிப்பொறி விஞ்ஞானியுமான சுபாஸிஷ் மித்ரா கூறுகையில்,


“புதிய சாகாப்தத்தைச் சேர்ந்த கார்பன் நானோடியூப், சிலிக்கானைவிட சிறப்பானது என பேசப்பட்டு வந்தது.



அந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில், அந்த கணினியில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் அமைந்துள்ளன’ என்றார்.


கொனார்க் சூரியக்கோவில் - சுற்றுலாத்தலங்கள்!



      கொனார்க் சூரியக்கோவில்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
கொனார்க் சூரியக்கோவில்
 
"இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள்.
 
"இருபத்து நான்கு பெரிய சக்கரங்கள் கொண்ட பிரம்மாண்டத் தேர்,  முன்கால்களைத் தூக்கியவாறு ஆக்ரோஷமாக அதை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகள்..." எனச் சொல்லிப்பாருங்கள். மிரட்டலாக இருக்கும். அதுவே நிஜமாக இருந்தால்...? இருக்கிறது. கொனார்க் சூரியகோவிலாக!. ஆம். கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவம்தான் சூரியபகவான் கோவில்.
 
 
ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த கலைப்பொக்கிஷத்துக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி1236- 1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம்.
 இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.

 பாலியல் விளையாட்டுக்களை பளிச்செனக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில் சூரியபகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன.
 
 நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம்.
 
 இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
 
விழாக்கள்:

கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' பிரசித்தம்.  சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது.
 
எப்படிப் போகலாம்?

புவனேஸ்வரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் பூரியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று விடலாம். பூரி, புவனேஸ்வரில் ரயில்நிலையங்கள் உள்ளன. புவனேஸ்வரில் விமான நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத்தலமாகும்.

உண்மை எது...பொய் எது...(நீதிக்கதை)




 
ஒரு சமயம் முகலாய பேரரசராய்த் திகழ்ந்த அக்பருக்கு..உண்மை எது பொய் எது என எப்படிக் கண்டு பிடிப்பது,..அதற்கான தூரம் எவ்வளவு என்ற சந்தேகம் வந்தது.


தன் அரசரவை மந்திரிகளை எல்லாம் கூப்பிட்டு..தனது சந்தேகத்தைச் சொல்லி அதை தீர்த்துவைக்குமாறு கோரினார்.


எந்த அமைச்சருக்கும் அதற்கான விடை தெரியவில்லை.அக்பர் அரசவையில் அமைச்சராக இருந்த பீர்பால் என்பவர் மிகவும் புத்திசாலி...


அவர் அரசரைப் பார்த்து 'மன்னா..உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளி நான்கு விரற்கடை தூரம்' என்றார்...


அக்பர்...'அது எப்படி..தங்களால் நிரூபிக்கமுடியுமா' எனக் கேட்டார்.


உடன் பீர்பால்...தன்  இடது கையை எடுத்து இடது கண்ணிலிருந்து  இடது காதுக்கு தன் நான்கு விரல்களை வைத்துக் காட்டினார்.பின் 'அரசே...இது தான் உண்மைக்கும் பொய்க்கும் ஆன தூரம்.எந்த ஒரு விஷயத்தையும் காதால் கேட்பது பொய்யாக முடியலாம்.ஆனால் கண்ணால் பார்ப்பது பொய்யாக ஆக வாய்ப்பில்லை.கண்ணால் கண்டதை சற்று தீர விசாரித்தால் அதுவே மெய்யாக முடியும்' என்றார்.
 

நாமும் எந்த ஒரு விஷயத்தையும் கேட்பது மூலம் அதை நம்பிவிடாது அதை பார்த்து தீர விசாரித்து உண்மையை உணரவேண்டும்.
 
 

Thursday 26 September 2013

காதல் சின்னம் தாஜ்மஹால் - சுற்றுலாத்தலங்கள்!



     காதல் சின்னம் தாஜ்மஹால்
 லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ,அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் 27 இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23 இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த வாரம்...

காதல் சின்னம் தாஜ்மஹால்
 
 உலக அதிசயம், காதல் சின்னம், பரவசப்படுத்தும் பளிங்கு மாளிகை என தாஜ்மஹாலின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அழகுப் பெட்டகமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தாஜ்மஹால், இந்தியாவின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்று.

 மொகலாய மன்னர் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக இதைக் கட்டி முடித்தார். ஷாஜஹானின் மூன்றாவது மனைவி மும்தாஜ். இவர் மீது ஷாஜஹானுக்கு தனிக்காதல் உண்டு. தனது பதினான்காவது பிள்ளைப்பேற்றின் போது மும்தாஜ் இறந்து விட்டார். மும்தாஜின் பிரிவைத் தாங்க முடியாத ஷாஜஹான் அவரது நினைவாக எழுப்பியதே தாஜ்மஹால். இங்கு மும்தாஜின் சமாதி உள்ளது. பின்னாளில் ஷாஜகான் இறந்த பிறகு அவரது உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டது.

 வரலாற்றுச் சிறப்புக்குரிய தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் கி.பி. 1631-1654ம் ஆண்டு. சுமார் 22ஆயிரம் பேர் கட்டடப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முழுவதும் பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி பாரசீக பாணி மற்றும் மொகலாயருக்கே உரித்தான ஸ்டைலும் கலந்து உருவாக்கப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டுபவை.
 
 தாஜ்மஹால்- மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்டது. சதுரவடிவ நிலப்பரப்பில் சமச்சீராக கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மூலைக்கு ஒன்றாக நான்கு உயரமான மினார்களும், கட்டடத்தின் உச்சியில் வெங்காய வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் குவிமாடமும் தாஜ்மஹாலின் தனி அடையாளங்கள். குவிமாடம் மட்டும் 35மீட்டர் உயரம் கொண்டது. சுவர்கள் அனைத்திலும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 'துலுத்' என்ற வகையிலான அரபி வனப்பெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாரசீக வனப்பெழுத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இவை உருவானவை. மேலும் செடி, கொடி வடிவங்களும் அழகுற வரையப்பட்டுள்ளன. தாஜ்மஹாலின் உட்புறக்கூடம் இன்னும் அழகானது. எண்கோண வடிவில் அமைந்துள்ள உட்புறக்கூடத்தில் விலை உயர்ந்த பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.தாஜ்மஹாலைப் போலவே அதன் முன்புறம் அமைந்துள்ள பூங்காவும் ரசனைக்குரியது. பாரசீக பூங்காக்களின் வடிவமைப்பை பின்பற்றி இது அமைக்கப்பட்டுள்ளது.
 
எப்படிப் போகலாம்?
 
ஆக்ராவில் விமான நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன ஆக்ராவும் ரயில் நிலையமும் உள்ளது. டெல்லியில் இருந்து சுமார் 3மணி நேர ரயில் பயணத்தில் ஆக்ராவை அடைந்து விடலாம். நல்ல சாலை வசதிகளும் உள்ளன.
 
"கலையும், காதல் வரலாறும் கலந்த ஒரு அழகு ஓவியம்தான் தாஜ்மஹால். நேரில் பார்க்கும்போதே இதை உணர முடியும்''

பேராசை பெரு நஷ்டம் (நீதிக்கதை)



ஒரு ஊரில் அரிசி வியாபாரி ஒருவன் இருந்தான்.அவன் அவனது தானியக்கிடங்கில் பெரிய பிரும்மாண்டமான உலோகத்தால் ஆன டிரம்களில் அரிசியை சேகரித்து வைத்திருந்தான்.அப்படிப்பட்ட டிரம்களில் ஒன்றில் கீழே சிறு ஒட்டை இருந்தது.அதில் இருந்து வந்த அரிசி வெளியே சிதறிக் கிடந்தது.

அந்த வீட்டில் இருந்த இரண்டு எலிகள் இதைப் பார்த்து சிதறிக் கிடந்த அரிசியை உண்டு பிழைத்து வந்தன.

இந்நிலையில் இரு எலிகளில் பேராசை பிடித்த ஒரு எலி மற்றொரு எலியுடன் ..நாம் இந்த ஒட்டை வழியே உள்ளே சென்று விட்டால்,நிறைய அரிசி இருக்கும்.

வேண்டும் வரை உண்ணலாம் வா என்றது.

ஆனால் மற்ற எலியோ "பேராசை வேண்டாம்.இப்போது நமக்கு கிடைக்கும் அரிசியே போதும் " என்று கூறிவிட்டது.

அந்த எலியின் பேச்சை கேட்காத முதல் எலி,அந்த ஒட்டையின் மூலம் உள்ளே சென்று...அரிசியை சாப்பிட ஆரம்பித்தது.இதனால் அது உள்ளே நுழையும் போது

இருந்ததை விட பருத்து விட்டது.அதனால் இப்போது அந்த சின்ன ஒட்டையின் மூலம் வெளியே வர இயலவில்லை.

ஒரு நாள் டிரம்மிலிருந்த அரிசியை விற்பனைக்கு எடுத்தான் வியாபாரி.அப்போது அதில் பதுங்கியிருந்த குண்டு எலியைக் கண்டு அதை அடித்துக் கொன்றான்.

பேராசை இல்லாத எலி பிழைத்தது.

பேராசை கொண்ட எலி இறந்த்து.

பேராசை பெரு நஷ்டமாகும்.

விண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா?




விண்டோஸ் எக்ஸ்பி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 8, 2014க்குப் பின்னர் இருக்காது. இந்த செய்தி, பல எக்ஸ்பி விசுவாசிகளுக்கு எரிச்சலைத் தந்துளது. பலர் மாற விரும்பினாலும், உடனே செயல்படாமல், நாட்களைக் கடத்திக் கொண்டுள்ளனர். பலர், மைக்ரோசாப்ட் புதிய கம்ப்யூட்டர்களையும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும் நம்மை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, பணம் சம்பாதிக்கத் திட்ட மிடுகிறது என்ற குற்றச்சாட்டினையும் வைக்கின்றனர்.இது உண்மை அல்ல என்பது இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தின் பல பதிப்புகளுக்கு நேர்ந்ததைக் கவனித்தால் தெரியவரும்.



மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இது எக்ஸ்பி சிஸ்டத்திற்கு மட்டுமல்ல. அனைத்து சிஸ்டங்களும், இது போல்தான் முடக்கப்பட்டன என்று கூறுகிறது. விண்டோஸ் 95, விண்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் மி ஆகியவற்றின் வாழ்நாளும் இதே போல முடிவுக்கு வந்தன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விஸ்டாவின் இயக்க வாழ்வு, வரும் ஏப்ரல் 11,2017ல் முடிவடையும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பாதுகாப்பு முறை ஜனவரி 14,2020 ஆம் ஆண்டில் முடிந்துவிடும்.


விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அதன் வாழ்நாள் சப்போர்ட் பலமுறை நீட்டிக்கப்பட்டது. மற்ற சிஸ்டங்களை நடத்தியது போல, எக்ஸ்பியையும் நடத்த முற்பட்டிருந்தால், சில ஆண்டுகளுக்கு முன்பே, இதற்கான சப்போர்ட் வாபஸ் பெற்றிருக்கப்பட வேண்டும். உற்றுக் கவனித்தால், ஓர் ஆச்சரியமான உண்மை வெளிப்படும். விண்டோஸ் எக்ஸ்பி 2001 ஆம் ஆண்டு வெளியானது. 2010ல் எக்ஸ்பி பதிந்து இயக்கப்பட்டகம்ப்யூட்டர்கள் மிகப் பழமையாக இயங்கின. ஆனால், எக்ஸ்பி வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த, விண்டோஸ் விஸ்டா, 2011 வரையே பாதுகாப்பில் இருந்தது.



விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி 13 வயதாகி விட்டது. இளஞ்சிறுவர்கள் மாதிரி, இன்றைய (டிஜிட்டல்) உலகை, எக்ஸ்பியால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. மிகப் பெரிய அளவில், பல மாற்றங்களுடன் சர்வீஸ் பேக் 3 வந்தாலும், எக்ஸ்பியால், புதிய டிஜிட்டல் மாற்றத்திற்கு ஈடு கொடுக்க இயலவில்லை என்பதே உண்மை. விண்டோஸ் விஸ்டாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில பாதுகாப்பு வழிகளைக் கூட எக்ஸ்பியால், பின்பற்ற இயலவில்லை. தற்போது ஹார்ட்வேர் பிரிவில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களுடன் இணைந்து செயல்பட எக்ஸ்பி சிஸ்டத்தால் இயலவில்லை.




மைக்ரோசாப்ட் மட்டுமின்றி, இதற்கென புரோகிராம்களை உருவாக்கியுள்ள சில தர்ட் பார்ட்டி நிறுவனங்களும், தொடர்ந்து எக்ஸ்பியில் அவை இயங்குகையில் பாதுகாப்பு அளிக்க இயலவில்லை. ஒவ்வொரு விண்டோஸ் சிஸ்டம் புதிய பதிப்பு வெளியாகும் போதும், இந்த நிறுவனங்கள், அதிக நேரம் மற்றும் பணம் செலவழித்து தங்கள் புரோகிராம்களை அப்டேட் செய்கின்றனர். அந்நிலையில், எக்ஸ்பிக்கு வெளியான புரோகிராம்களையும் தொடர்ந்து பராமரிப்பது வீணான செயல் என்று எண்ணுகின்றனர்.



எக்ஸ்பி தொடர்வது இன்டர்நெட்டையும் பாதிக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6, 7 மற்றும் 8 பதிப்புகள் மட்டுமே, எக்ஸ்பியுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த பிரவுசர்கள் எல்லாம், மற்றவற்றைக் காட்டிலும் மிகப் பின் தங்கியவை ஆகும். இதனால், தற்போதைய பிரவுசர்களுக்காக எனத் தனியே கூடுதலாக, வெப்சைட்கள் தயார் செய்திட வேண்டியுள்ளது.




ஆனால்,எக்ஸ்பி சிஸ்டத்தை விடுத்து, விண்டோஸ் 2007 அல்லது விண்டோஸ் 8 க்கு மாற இருப்பவர்களுக்குக் கூடுதல் செலவு ஆகலாம். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, துணை சாதனங்களையும் மாற்ற வேண்டியதிருக்கும். ஆனால், வேறு வழியில்லை.



இன்னொரு சிக்கலும் உள்ளது. விண்டோஸ் 7 ஓரளவிற்கு, விண்டோஸ் எக்ஸ்பியின் தன்மையைக் கொண்டு இயங்குகிறது. இதனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், மிக அதிக அளவில் புதுமையைச் சந்திக்கவில்லை. மாற்றத்திற்குத் தங்களை எளிதில் பழகிக் கொண்டனர்.




ஆனால், விண்டோஸ் 8க்கு மாறுபவர்களுக்கு எல்லாமே மிகப் புதியதொரு அனுபவத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இவர்கள், சற்று நேரம் ஒதுக்கிச் சிலவற்றைப் புதியதாகக் கற்றே ஆக வேண்டும். புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்குபவர்களுக்கு விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. அவர்கள் இதனை இயக்கிப் பார்க்கும் போது, புதிய மாற்றங்களையும், அவை நம்மிடம் எதிர்பார்க்கும் திறனையும் உணரலாம். அடுத்து விண்டோஸ் 8.1 வருகையில், அதில் சில பழைய விண்டோஸ் அம்சங்களைப் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மைக்ரோசாப்ட், விண்டோஸ் 8.1 பயன்படுத்துவது பற்றிய குறிப்பு களையும் சேர்க்கலாம்.


எனவே, விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருப்பவர்கள், அடுத்து எப்போது அதனை முடித்து வேறு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறலாம் என்பதனைத் திட்டமிட வேண்டும்.

தலை முடி பிரச்னைகளுக்கு 60 நிமிடத்தில் தீர்வு!

Solution to the problem of hair in 60 minutes


முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான பிரச்னைகள் தலை முடியில் வரும். வயது வித்தியாசம் இல்லாமல் , ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இதுபோன்ற தலை முடி பிரச்னைகள் வரும். உணவு பழக்கவழக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், பராமரிப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்கிறேன், ஆனாலும் எனக்கு முடி உதிர்கிறது, பேன், பொடுகு இருக்கிறது என்பதும், இருபது வயது தான் ஆகிறது முடி நரைத்து விட்டது என்பதும் பலரின் தினசரி புலம்பல்களில் ஒன்று.

இது எங்களை பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் சரி செய்யகூடியது தான் என்கிறார் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள விக்டோரியா சீக்ரெட் பெண்கள் அழகு நிலையத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்மி.

இது குறித்து ஷர்மி கூறியதாவது: முன்பு பயப்பட வேண்டிய நிலையில் இருந்த தலை முடி பிரச்னைகள் தற்போது சாதரண விஷயமாகி விட்டது. கடந்த 22 வருடங்களாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மூலம் பலன் அடைந்தவர்கள் பல ஆயிரம் பேர். இந்த சிகிச்சையின் ரகசியம் எங்களது எண்ணெய் தான். ஆயுர்வேத முறைப்படி தகுந்த மூலிகைகள் மூலம் மிக சரியான பக்குவத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள எண்ணெய் மற்றும் ஹேர் பேக் மூலம் தலை முடி பிரச்னைகளுக்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுகிறது.

நரையை மறைப்பதற்காக கெமிக்கல் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் சிலருக்கு முகத்தில் கருப்பு திட்டுக்கள், அலர்ஜி ஏற்படும். எனவே தலை முடி பிரச்னைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். எந்த நிலையில் தலை முடி சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்பட தேவை இல்லை. ஒரு முறை அதுவும் ஒரு மணி நேர ஹேர் பேக்கேஜ் மூலம் எத்தனை ஆண்டுகள் ஆன தலைமுடி பிரச்னைகளையும் சரி செய்யலாம்.

சிகிச்சைக்கு வருபவர்களிடம், முதலில் என்ன காரணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் அதற்கேற்ற ஹேர் மசாஜ் செய்யப்படும். பேன், பொடுகு உள்ளவர்களுக்கு அதற்கேற்ற மூலிகை பேக் போடப்பட்டு சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு பின்னர் கழுவி விடப்படும். இதை தொடர்ந்து வீட்டில் தினமும் பயன்படுத்த ஹேர் ஆயில், வாரம் ஒரு முறை பயன்படுத்த மூலிகை பவுடர் பேக், ஷாம்பு வழங்கப்படும்.

வேகன் ஐஸ் கிரீம்!

 In a blender, add the frozen banana, the peanut butter, the cocoa powder and the vanilla essence and blend till smooth and all the ingredients have mixed well.




என்னென்ன தேவை?


மிகவும் கனியாத வாழைப்பழங்கள்-2
வேர்க்கடலை வெண்ணெய்-1 1/2மேஜைக்கரண்டி
கோகோ தூள்-3/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ்-3 சொட்டு
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு



எப்படி செய்வது?



ஒரு ஜாடியில் வாழைப்பழம், வெண்ணெய், கோகோதூள், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக ஐஸ்கிரிம் போல அடிக்கவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு பருப்பு வகைகளை சேர்த்து அலகரித்து பரிமாறவும்.

காலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்?




காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.


பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.



ஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த கனகபுரத்தில் சாத்தை குலத்தில் பிறந்தவன் லிங்கையன். பாண்டியன் வீரபாண்டிய மாறவர்மானால் காலிங்கராயன் என அழைக்கப்பட்டான். 12 ஆண்டுகள் தவமிருந்து அணையை கட்டியதால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டான். கலிங்கம் என்றால் அணை என்று பொருள். அதனால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டு பின்னாளில் காலிங்கராயன் என மருவியதாக வரலாறு. வாய்க்கால் நேராக கொண்டு சென்றால் அதிகமான வயலுக்கு பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும்.



எனவே நீர் தேங்கி நின்று வயலுக்கு பாய்ந்து நிலம் வளப்படுத்துவதற்காகவும், நீரின் வேகத்தை குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்காகவும், மேட்டுபாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்கிறது. பாய்ந்தோடும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்த காலிங்கராயன் கையாண்ட யுக்தி இப்போதைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.



பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.

தங்க நிறத்தில் சாம்சங் கேலக்ஸி S4 அறிமுகம்!




சாம்சங் நிறுவனம் அதிரடியாக தங்க நிறத்தில் சாம்சங் கேலக்ஸி S4 அறிமுகப்படுத்தியுள்ளது. தங்க பிரவுன் அல்லது தங்க பிங்க் - தங்க கேலக்ஸி S4s இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். பிங்க் மற்றும் ப்ரவுன் போன்களில் தங்க நிறத்தில் பின் தகடு கொண்டுள்ளது.



சாம்சங் விலை அல்லது கிடைக்கக்கூடிய தகவல்களை வெளியிடவில்லை. அவை தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையில் மட்டும் கிடைக்கும். இது மத்திய கிழக்கு சந்தைகளில் விற்பனை செய்ய இலக்காக உள்ளது போல் தெரிகின்றது.



ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தர் - சுற்றுலாத்தலங்கள்!



ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தர்
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரின் இன்னொரு ஆச்சரியம் 'ஜந்தர்மந்தர்' என்னும் பாரம்பரிய வானியல் கோளரங்கம். ஜெய்ப்பூர் அரண்மனையையொட்டி அமைந்துள்ளது.
 
 இது கி.பி1727-1734ஆம் ஆண்டுகளுக்கு இடையே இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா என்ற மன்னரால் அமைக்கப்பட்டது.வானவியல் கருவிகள் இங்குள்ளன.ஜந்தர் மந்தரின் உண்மையான பெயர் 'யந்த்ரா மந்த்ரா'. இதில் 'யந்த்ரா' என்றால் கருவிகள். 'மந்ந்ரா' என்றால் சூத்திரம். அதாவது கருவிகளின் துணையுடன் வானவியல் கணக்கீடுகளை அறிந்து கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும். இதே போல ஜந்தர்மந்தர்கள் டெல்லி, காசி, உஜ்ஜைனி, மதுரா போன்ற இடங்களில் இருந்தாலும் ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தரே மிகப்பெரியது.

 இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களும் கருவிகளும் நேரத்தை அறிந்து கொள்ளவும்,கிரகணங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும், கோள்களின் சாய்மானங்களை அறியவும் என வானவியல் தொடர்பான கணக்கீடுகளுக்கு பயன்பட்டு வந்துள்ளன.இங்குள்ள 'சாம்ராட் இயந்திரம்'என்றழைக்கப்படும் சூரியக் கடிகாரம் நேரத்தை மிகத் துல்லியமாக அறிவதற்கு பயன்பட்டுள்ளது. இதன் உயரம் 90அடி. இது உலகின் மிகப்பெரிய சூரியக்கடிகாரமாக கருதப்படுகிறது. இதன் நிழலை அடிப்படையாகக் கொண்டு நேரத்தை கணக்கிட்டு வந்துள்ளனர்.

 இங்குள்ள வானியல் கணக்கீட்டுக் கருவிகளை பளிங்குக் கற்களால் கட்டியிருப்பது இன்னொரு சிறப்பு.உள்ளுர் உழவர்கள் பருவநிலையை தெரிந்து கொள்ள இன்றளவும் இந்தச் சூரியக்கடிகாரம் உதவி வருகிறது. சிறப்புக்குரிய ஜந்தர்மந்தர் 1948ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் 2010ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

 ஜெய்ப்பூரின் வரலாற்றில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. கி.பி.1875ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணியின் மகன் இந்த நகருக்கு வருகைதந்ததையொட்டி நகரின் முக்கிய வீதிகளில் சிவப்பு வண்ணங்களைப் பூசி அழகுபடுத்தினார் ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் ராம்சிங். அன்று முதல் ஜெய்ப்பூர் 'பிங்க் சிட்டி' என்றழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூர் அரண்மனையின் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஜெய்ப்பூரின் ஆச்சரியம் மற்றும் அதிசயங்களில் ஒன்றாக ஜந்தர்மந்திர் என்றழைக்கப்படும் வானியல் கோளரங்கமும் திகழ்ந்து வருகிறது.
 
எப்படிப் போகலாம்?
 
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஜெய்ப்பூரில் பெரிய ரயில்நிலையம் உள்ளது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜெய்ப்பூர் நகரில் இருந்து சுமார் 13கி.மீ தொலைவிலேயே விமான நிலையம் உள்ளது.