Search This Blog

Monday 19 August 2013

அதிகம் அறியப்படாத பிரவுசர்கள்!



        இணையத்தை நம்முடன் இணைக்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் (சபாரி மற்றும் ஆப்பரா ஆகியவற்றையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.) ஆகிய பிரவுசர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ஏறத்தாழ இவை தரும் வசதிகளுடனும், திறனுடனும் இன்னும் சில பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடன் செயல்படும் வகையில் வடிவைக்கப்படவில்லை என்றாலும், இவற்றையும் விரும்பினால் பயன்படுத்திப் பார்க்கலாம்.

1. ஸீ மங்கி (SeaMonkey):

இங்கு தரப்படும் மற்ற பிரவுசர்களைப் போல் இல்லாமல், இது சற்று எளிதில் புரிந்து கொண்டு பயன்படுத்தக் கூடிய பிரவுசரே. இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை சற்று கணிசமானதாகும். இது பிரவுசர் மட்டுமல்ல. இமெயில் பெற்றுத் தரும் கிளையண்ட், பீட் ரீடர், எச்.டி. எம்.எல். எடிட்டர், ஐ.ஆர்.சி. சேட் என இன்னும் பல செயல்பாடுகளை மேற்கொள்ள வழி வகுத்திடும் புரோகிராம் ஆகும். பயர்பாக்ஸ் மற்றும் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் ஆகியவற்றில் காணப்படும் பல வசதிகளை இதில் காணலாம். Sync, session restore, themes, feed detection, smart location bar, popup blocker, safe mode, find as you type என இன்னும் பல வசதிகள் இதில் உள்ளன. இந்த பிரவுசரின் பதிப்பினைப் பார்க்கையில், இது மிக முந்தையது போலத் தெரியும். இருப்பினும் பல்வேறு வகைப்பட்ட இணைய வசதிகளை ஒரே புரோகிராமில் பெற வேண்டும் என விருப்பப்பட்டால், இந்த பிரவுசரைப் பயன்படுத்தலாம். ஸீ மங்கி பிரவுசர், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் வண்ணம் கிடைக்கிறது.

2. கே மெலான் (KMeleon):

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் முறையில் கிடைக்கும் பிரவுசராகும். இந்த பிரவுசரும் Session save, mouse gestures, context menu, keyboard shortcut customization, popup blocker, fast load times, popup search bar, themes, macros என இன்னும் பலவகையான சிறப்பு வசதிகளைத் தருகிறது. இதனுடைய இன்டர்பேஸ், விண்டோஸ் சிஸ்டம் டூல் கிட் அடிப்படையில் இயங்குவதால், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் திறனையும் பயன்படுத்திக் கொள்கிறது. எங்கும் எடுத்துச் செல்லும் வகையில், இந்த பிரவுசரின் போர்ட்டபிள் பதிப்பும் கிடைக்கிறது. ஒரு யு.எஸ்.பியில் எடுத்துச் சென்று, எந்த விண்டோஸ் கம்ப்யூட்டரிலும் இணைத்துப் பயன்படுத்தலாம். இது விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டுமே செயல்படும்.
 
3. பேல் மூன் (Pale Moon):

 விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் வகையில்,
பயர்பாக்ஸ் பிரவுசரினைப் போல இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டது. இது தனிப்பட்ட கட்டமைப்பினைக் கொண்டிராமல், நமக்கு அதிகம் பயன்தரும் வசதிகள் கொண்ட பிரவுசர் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. வேகம், திறன் ஆகிய இரண்டுமே இதன் முக்கிய அம்சங்களாகும். புதிய ப்ராசசரில் சிறப்பாகச் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. SVG graphics, HTML5/CSS/Advanced DOM supportஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. பயர்பாக்ஸ் பிரவுசர் எடுத்துக் கொள்ளும் மெமரி இடத்தைக் காட்டிலும் சற்றுக் குறைவாகவே இடம் எடுத்துக் கொள்கிறது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வசதிகளைத் தரும் வகையில், பயர்பாக்ஸ் அடிப்படையில், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பிரவுசர் வேண்டும் எனில், பேல் மூன் பிரவுசரை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

4. லூனாஸ்கேப் (Lunascape):

விண்டோஸ் இயக்கத்தில் மட்டுமே செயல்படும் பிரவுசர். Geko, WebKit, and Trident என மூன்று பிரவுசர் இஞ்சின்களிலும் செயல்படும். இதனால், நமக்கென்ன பிரயோஜனம் என்று எண்ணுகிறீர்களா? பிரவுசர் புரோகிராம் எழுதுபவர்கள், இணைய தளம் வடிவமைப்பவர்கள், இந்த மூன்று இஞ்சின் உள்ள பிரவுசர்களை ஒவ்வொன்றாகச் சோதனை செய்து பார்க்காமல், இதில் மட்டுமே இயக்கிச் சோதித்துப் பார்க்கலாம். நாம் பார்க்க விரும்பும் சில இணைய தளங்களில் சில, பக்கங்களைக் காட்ட இயலாமல் தடுமாறும். இதற்குக் காரணம், இந்த பிரவுசர் இயக்க இஞ்சின்களில், ஒரு சிலவற்றை அந்தப் பக்கங்கள் தங்களின் கட்டமைப்பினில் சேர்த்திருக்காது. அப்படிப்பட்ட நிலைகளில், இந்த பிரவுசர் தானாகவே மாறிக் கொண்டு இயங்கி, பக்கங்களை அழகாகக் காட்டும். Highlight search, engine autoswitch, cascade view, tab lock எனப் பல சிறப்பு வசதிகளையும் இந்த பிரவுசர் தருகிறது.

5. நெட் சர்ப் (NetSurf):

மிகச் சிறியதாக இருந்தாலும், பல்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் திறன் கொண்டது. வேகத்தில் மிகச் சிறப்பானது. சிறியதாக இருப்பதால், அதிக வசதிகளைத் தராது என எண்ண வேண்டாம். நாம் அடிக்கடி பயன்படுத்தும், எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. Web page thumbnailing, local history trees, global history, hotlist manager, URL completion, scale view, searchasyoutype, cookie manager என இன்னும் பல வசதிகளைக் கொண்டுள்ளது. இது இணைய இயக்கத்திற்கான அனைத்து ஸ்டாண்டர்ட்களையும் கொண்டுள்ளது. இதன் போர்ட்டபிள் பார்மட் ஒன்றும் கிடைக்கிறது. Haiku, BeOS, AmigaOS, Atari, Linux, UNIX, RISC OS என இன்னும் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் தன்மை கொண்டது
.
இணையத்தில் கிடைக்கும் அனைத்து இணைய பிரவுசர்களும், சமமான திறனுடனும் வசதிகளுடன் வடிவமைக்கப்படவில்லை. மேலே காட்டப்பட்டுள்ளவற்றுள் சில, பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசர் போன்று சிறப்பான சில வசதிகளைத் தராமல் இருக்கலாம். ஆனால், இவை ஒவ்வொன்றும், தனக்கென ஒரு சில தனிச் சிறப்புகளைக் கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன. அதனால், இவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்களை நிச்சயம் கவரும். ஆர்வத்தினைத் தூண்டும். எனவே, ஒருமுறை இன்ஸ்டால் செய்து இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்திப் பார்க்கவும். இதனால், நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிரவுசரின் அதி சிறப்புத் தன்மையையும் உறுதிப் படுத்திக் கொள்ளலாமே!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்



ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

 
 
நாங்கள் பரிட்சை எழுத 
நீங்கள் அல்லவா படித்தீர்கள் 
நாங்கள் வெற்றிப் பெற 
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள் 

 
 
கல்லும் உடையாமல் 
சிலையும் சிதறாமல் 
எங்களை செதுக்கிய 
சிற்பி அல்லவா நீங்கள் 

 
 
மழையின் அருமை தெரியாமல் 
மழையை கண்டு ஓடுபவர்போல 
உங்களைக் கண்டு ஓடினோம் 
மழையின் அருமை 
கோடையில் தெரியும் 
உங்களின் அருமை, பெருமை 
இப்போது உணர்கிறேன் !

யாருக்காக ஆசிரியர் தினம்?



வருடம் முழுவதும் எத்தனையோ விஷேச நாட்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், வருங்கால தலைமுறையினரான மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம். அந்த வகையில், மற்ற சிறப்பு தினங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆசிரியர் தினமானது மாறுபட்டு நிற்கிறது.


ஆசிரியர் தின வரலாறு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கவுரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது.

இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசிரியப் பணியின் மதிப்பு

ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.

மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். எனவே, அந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்வது அரசின் பிரதான கடமை.

அனைவருமே சிறந்த ஆசிரியர்களா?

ஆனால் இன்றைய இந்திய சூழலில், ஆசிரியப் பணி என்பது சலுகைகள் மற்றும் சம்பளம் அதிகம் கிடைப்பதால், துளியளவுக்குக்கூட அப்பணிக்கு பொருத்தமற்ற பலர், அத்துறையில் வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள். பலர் வேலை வாய்ப்புக்கு காத்துக்கொண்டுள்ளார்கள். பலர் அதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஆசிரியப் பணியில் இருப்பவர்களில் கணிசமான சதவீதத்தினர், தகுதியும், திறமையும் இல்லாமல், அதைப்பற்றி கவலையும் படாமல், சம்பளத்தோடு, டியூஷன் மற்றும் சொந்த தொழில்களை நடத்திக் கொண்டு வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

இவர்களே போற்றத்தக்கவர்கள்!

எது எப்படியிருந்தாலும், சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம். இந்த தினத்தில், ஆசிரியர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டியதை மாணவர்கள் சிறப்பாக செய்தலே நன்று!