Search This Blog

Monday 9 September 2013

கம்ப்யூட்டர் தரும் பொதுவான பிரச்னைகள்!


உங்களிடம் உங்கள் அப்பா பயன்படுத்திய பழைய எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 98 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டராக இருந்தாலும், அல்லது புதிய கம்ப்யூட்டராக விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இருந்தாலும், சில பிரச்னைகள் எல்லா வகை கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் இருப்பதாக நாம் உணர்வோம். சில உண்மையிலேயே பிரச்னைகளாக இருக்கும். சில நாமாக எண்ணிக் கொள்பவையாக இருக்கும். இங்கு அத்தகைய பிரச்னைகள் குறித்தும், அவற்றிற்கான தீர்வுகள் சார்ந்தும் சில தகவல்களைப் பார்க்கலாம்.

1. முதலில் இதனை முயற்சிக்க: 

எந்தக் கம்ப்யூட்டராக இருந்தாலும், சிக்கல் கொடுப்பது எந்த புரோகிராமாக இருந்தாலும், அவற்றை மூடி, மீண்டும் இயங்க வைத்தால், எந்தப் பிரச்னைக்கும் தீர்வாக அது அமையும். கம்ப்யூட்டர் சிஸ்டம் செயல்பாட்டில் பிரச்னை என்றால், கம்ப்யூட்டர் இயக்கத்தினை முழுமையாக நிறுத்தி, மீண்டும் இயங்க வைப்பது நல்லது. அதே போல, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட துணை சாதனமாக இருந்தால், அதன் இயக்கத்தினையும் நிறுத்தி, கம்ப்யூட்டர் இணைப்பையும் எடுத்துவிட்டு, பின்னர் இணைத்துச் செயல்படுத்திப் பார்க்கவும்.

2. மிகவும் மெதுவாக செயல்படுகிறது: 

கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கிச் சில ஆண்டுகள் ஆன பின்னர், எல்லாரும் கூறும் குற்றச்சாட்டு இது. கம்ப்யூட்டர் இயக்கம் முன்பு போல் இல்லாமல், மெதுவாக இருப்பதாகக் கூறுவார்கள். இந்தப் பிரச்னை இருந்தால், முதலில் இதற்கு உங்கள் கம்ப்யூட்டர் தான் பிரச்னை தருகிறதா எனப் பார்க்கவும். தரவிறக்கம் செய்யப்படுவது வீடியோவாக இருந்தால், பழைய இணைய தளமாக இருந்தால், அவை மெதுவாகத்தான் உங்கள் கம்ப்யூட்டரை அடையும். எனவே, உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. எனவே, எதனால் பிரச்னை ஏற்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையைக் கூறி தீர்வு கேட்ட பலர், பின்னர், இது இணைய இணைப்பின் வேகக் குறைவினால் வந்தது என்று ஒத்துக் கொண்டுள்ளனர். இணைய இணைப்பின் வேகத்தினை Speedtest.net என்னும் தளம் சென்று, பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பிரச்னை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் என்று உறுதியாகத் தெரிந்தால், கீழ்க்கண்டவற்றைச் சோதனை செய்திடவும்.
2.1 ஹார்ட் ட்ரைவில் தேவையான இடம் உள்ளதா? இல்லை எனில், பைல்களை நீக்கி இடம் அமைக்கவும்.

2.2 கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், உங்களுக்குத் தேவைப்படாமலேயே, சில புரோகிராம்கள் இயக்கப்பட்டு ராம் நினைவகத்தில் தங்கிக் கொண்டு, கம்ப்யூட்டர் செயல்பாட்டினைத் தாமதப்படுத்தும். msconfig கட்டளை மூலம், சிஸ்டம் கான்பிகரேஷன் விண்டோ பெற்று, அதில் Startup என்ற டேப்பினைத் தட்டிப் பார்த்து, தேவையற்ற புரோகிராம்கள் தொடக்கத்தில் இயங்குவதனை நீக்கி அமைக்கலாம். இந்த செயல்பாட்டினை அவ்வப்போது மேற்கொள்வது நல்லது.

3. தரவிறக்கச் செயல்பாடு அதிக நேரம் எடுக்கிறது: 

ஸ்பீட் டெஸ்ட் டாட் நெட் தளம் மூலம், இணைய இணைப்பின் வேகத்தினைப் பார்க்கவும். உங்களுக்கு இணைய இணைப்பினை வழங்கும் நிறுவனம், உறுதி செய்த வேகத்தில், குறைந்தது 60% ஆவது வேகம் இருக்க வேண்டும். வேகம் சரியாக இருந்தால், நீங்கள் தேவை இல்லாமல், பெரிய பைல்களைத் தரவிறக்கம் செய்வதனை நிறுத்தலாம். உங்களுடைய நெட்வொர்க் இணைப்பில் உள்ள சாதனங்களுக்குப் புதிய ட்ரைவர் புரோகிராம்கள், அவற்றின் இணைய தளங்களில் இருந்தால், அவற்றை அப்டேட் செய்திடவும்.

4. தானாக ரீஸ்டார்ட் செய்திடும் பிரச்னை: 

கம்ப்யூட்டர், செயல்பாட்டில் இருக்கும்போதே, தானாக ரீஸ்டார்ட் ஆகும் பிரச்னையைப் பலர் எதிர் கொண்டுள்ளனர். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ் கார்ட், மதர்போர்ட், நெட்வொர்க் கார்ட் ஆகியவை, புதிய ட்ரைவர் புரோகிராம்களுடன் அப்டேட் செய்திருப்பதை உறுதி செய்திடவும். இவை சரியாக அப்டேட் செய்யப்பட்டிருந்தால், அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வதற்குக் காரணம், வைரஸ், மால்வேர், அட்வேர், மதர்போர்ட் சூடாவது ஆகியவை ஆக இருக்கலாம். மின் இணைப்பிலிருந்து கம்ப்யூட்டரை விடுவித்து, சிபியு டவரைக் கழற்றி, அதில் பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளைச் சோதனை செய்திடவும். அதில் உள்ள அதிகமான தூசு அனைத்தையும் நீக்கவும். இப்போது வருகின்ற கம்ப்யூட்டர் சிஸ்டங்களில், சிஸ்டம் குறிப்பிட்ட அளவிற்கு மேலாக வெப்பச் சூழ்நிலையைச் சந்தித்தால், தானாக மூடப்படும் வசதியுடன் வருகின்றன.இவற்றால் கூட, கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் செய்யப்படலாம்.

5. டெஸ்க்டாப்பில் எதிர்பாராத நேரங்களில் பாப் அப் விளம்பரங்கள்: 

உங்கள் பிரவுசர் இயக்கப்படாத நேரங்களில் கூட, பாப் அப்பாக்ஸ் எழுந்து வந்து, வர்த்தக ரீதியான விளம்பரங்களைக் காட்டுகின்றனவா? அப்படியானால், அட்வேர் எனப்படும் தேவையற்ற புரோகிராம் ஒன்று, உங்கள் கம்ப்யூட்டரில் வந்து அமர்ந்து கோண்டுள்ளது என்று பொருள். இத்தகைய விளம்பரங்கள்,நமக்கு எந்த விதத்திலும் பயன் இல்லாததாகவே இருக்கும். இதனை நீக்க, சிறப்பாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்றினை இயக்கி, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடலாம். சந்தேகப்பட்ட கோப்புகள் இருப்பின், அவற்றை நீக்கிவிடலாம்.

6. கூகுள் தவறும் வேளை: 

 பிரவுசரை ஹைஜாக் செய்து தங்கள் கட்டுப்பாட்டில் சில ஹேக்கர்கள், உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்றுவிடுவார்கள்.கூகுளில் நீங்கள் தேடும்போது, உங்களின் பெர்சனல் தகவல்களைத் தேடுவதற்காக, அவர்களாக வடிவமைத்த தளத்திற்கான லிங்க் தந்து, கிளிக் செய்திடச் சொல்வார்கள். உங்கள் பிரவுசர் ஹைஜாக் செய்யப்பட்டதனை உணர்ந்தால், அந்த பிரவுசரை அன் இன்ஸ்டால் செய்து, மீண்டும் பதிக்கவும். உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினையும் இயக்கி, மால்வேர் புரோகிராம்களை நீக்கவும்.

7. என் வை-பி இணைப்பு துண்டிக்கப்படுகிறது: 

 வை பி மூலம், இணைய இணைப்பு கொண்டிருந்தால், அதில் பிரச்னை ஏற்படுகையில், எந்த சாதனத்தில் பிரச்னை என்று அறிவது பெரிய சவாலாக இருக்கும். கம்ப்யூட்டரா? ரௌட்டரா, இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் சர்வரா? என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதற்கும் உங்கள் இணைய இணைப்பு நிறுவனத்தை அழைத்து, பிரச்னையைக் கூறி, அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். ரௌட்டர், அவர்களின் சர்வர், இணைப்பின் நிலை ஆகியவற்றில் பிரச்னை இருந்தால், அவர்களால் துல்லியமாகக் கூற இயலும்.

அதே நேரத்தில், உங்கள் கம்ப்யூட்டர், வை பி இணைப்பின் எல்லைக்குள் இயக்கப்படுவதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள். சிக்னல்கள் மிகவும் குறைந்த சக்தியுடன் இருந்தால், இணைப்பு அடிக்கடி விட்டுப் போவது நடக்கும். இந்த பிரச்னையில் விண்டோஸ் சிஸ்டமும் கை கொடுக்கலாம். டாஸ்க் பாரில் உள்ள வை பி ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். Troubleshoot problems என்பதனைத் தேர்ந்தெடுத்து இயக்கினால், இதன் மூலமும் பிரச்னை எங்குள்ளது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.

8. வெப்சைட் செக்யூரிட்டி சர்டிபிகேட்: 

சில வேளைகளில், பெரிய பிரச்னைகளை, மிக எளிய முறையில் தீர்த்துவிடலாம். பல பிரச்னைகள், நம் சிஸ்டம் கிளாக் சரியான முறையில் இயங்காததனால் ஏற்படுகிறது என்று தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுவார்கள். ஒரு இணைய தளத்தின் செக்யூரிட்டி சர்டிபிகேட் கம்ப்யூட்டரின் கடிகாரத்துடன் இணைந்தே செயல்படும். எனவே, சீமாஸ் பேட்டரி செயல் இழந்து, சிஸ்டம் கிளாக் செயல்பாட்டினை நிறுத்தி இருந்தால், இந்த பிரச்னை ஏற்படலாம். எனவே, சிஸ்டம் ட்ரேயில் உள்ள கடிகார ஐகானைக் கிளிக் செய்து, கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் தேதி மற்றும் நேரத்தினைச் சரியாக செட் செய்தால், இந்த வெப் செக்யூரிட்டி சர்டிபிகேட் பிரச்னையைத் தீர்த்துவிடலாம்.

9. பிரிண்டர் அச்சடிக்கவில்லை:

  உங்களுடைய பிரிண்டரின் ட்ரைவர் புரோகிராம் அப்டேட் செய்யப்பட்டு, உங்கள் பிரிண்டரில் தாள், டோனர் அல்லது இங்க் காட்ரிட்ஜ் எல்லாம் சரியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், உங்கள் பிரிண்டரை மின் இணைப்பிலிருந்தும், கம்ப்யூட்டரிலிருந்தும் கழட்டி, பின்னர் இணைக்கவும். இதனை அடுத்து, உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் அச்சடிக்கக் கொடுத்த பைல்களின் நிலை அறிய, பிரிண்ட் வரிசை (print queue) பார்க்கவும். இதில் ஏதேனும் ஒரு பைலில் பிரச்னை இருந்தால், பிரிண்டர் உங்கள் கட்டளைக்குப் பின்னணியில் காத்துக் கொண்டு, அச்சடிக்காமல் இருக்கலாம். இங்கு கிடைக்கும் மெனுவில், 'Use Printer Offline’ என்ற ஆப்ஷனில் டிக் அடையாளம் இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திடவும். அச்சடிக்கையில், உங்கள் பிரிண்டர் ஆப் செய்யப்பட்டிருந்தால், ‘Use Printer Offline’ ஆப்ஷன் இயக்கப்படும் நிலை ஏற்படலாம். இதனால், அதன் பின்னர், அச்சிடக் கொடுக்கப்படும் பைல்கள் அச்சடிக்கப்படாமல் இருக்கும் சிக்கல் ஏற்படும்.

10. இமெயில் இணைப்புகளைத் திறக்க இயலவில்லை: 

மின் அஞ்சல் செய்திகளுடன் இணைக்கப்பட்ட பைல்களைத் திறக்க இயலவில்லை எனில், அதனைத் திறப்பதற்கான புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. பொதுவாக பி.டி.எப். பைல்களில் இந்த பிரச்னை இருக்க வாய்ப்புண்டு. இதற்கான பி.டி.எப். ரீடர் புரோகிராமினை இலவசமாக இணையத்திலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து, பின்னர் திறக்கலாம். வேறு வகை பைல் எனில், பைலின் துணைப் பெயரினைக் கண்டறிந்து, அந்த வகை பைலைத் திறக்க என்ன புரோகிராம் வேண்டும் என்பதனைத் தேடி அறிந்து செயல்பட வேண்டும்.

11. புதிய கம்ப்யூட்டரில் என் பழைய ப்ரோக்ராம் செயல்படவில்லை: 

 இந்த பிரச்னை, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டருக்கு மாறுபவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுபவர்கள், இது குறித்து கடிதங்கள் மற்றும் தொலைபேசி வழியாகவும் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம், நீங்கள் குறிப்பிடும் புரோகிராம், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்காது. மேலும், விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள், மேக் ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்காது. மேலும், 32 பிட் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள்,64 பிட் சிஸ்டத்தில் இயங்கும். ஆனால், மாறாக 64 பிட் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள், 32 பிட் சிஸ்டத்தில் இயங்காது. ஆன்லைனில் இயங்கும் சில கேம்ஸ், புதிய கம்ப்யூட்டரில் இயங்காது. இதற்குச் சில ப்ளக் இன் புரோகிராம்கள் இல்லாததே காரணமாக இருக்கும். இதற்கு ஜாவா மற்றும் பிளாஷ் புரோகிராம்கள் காரணமாகவும் இருக்கலாம். பொதுவாக, பிரவுசர்கள், இவை தேவை எனில், உங்களுக்கு எச்சரிக்கை செய்திகளைக் கொடுத்து, இவற்றை இன்ஸ்டால் செய்திடச் சொல்லும்.
Click Here 
 

காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் வெளியானது!


சென்ற வாரம், பெர்லின் நகரில், சாம்சங் நிறுவனம், தன் முதல் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தை அடுத்து, இத்தகைய கடிகாரத்தை அறிமுகப்படுத்திய இரண்டாவது நிறுவனமாக, சாம்சங் பெயர் பெற்றுள்ளது. உடலில் சாதனத்தை அணிந்து கொண்டு, அதன் வழியே கம்ப்யூட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணப் பாங்கு, டிஜிட்டல் உலகில் வலம் வருபவர்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மக்கள் பலரும் இத்தகைய சாதனங்களை எதிர்பார்ப்பதால், இதுநல்ல விற்பனையை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். மேலும், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம் இதற்கு முழுமையாகக் கை கொடுக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச், இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே செயல்படும். இணையாக்கப்பட்ட ஸ்மார்ட் போனுடன், புளுடூத் வழி தொடர்பு கொண்டு இது இயங்கும்.


இந்த கடிகாரத்தில் வைத்து இயக்கவென, எந்த செல்லுலர் தொடர்பும் இருக்காது. இணையாக்கப்பட்ட போன், இரண்டு மீட்டர் தொலைவிற்குள்ளாக இருக்கவேண்டும். தற்போதைக்கு, இந்த ஸ்மார்ட் வாட்ச், சாம்சங் நோட் 3 சாதனத்துடன் இணைவிக்கப்பட்டே இயங்கும். பழைய சாம்சங் போன் அல்லது, மற்ற நிறுவனங்களுடன் இது இயங்காது என்றே தெரிகிறது.
ஸ்மார்ட் வாட்ச் முன்புறம், சதுர வடிவில் 1.6 அங்குல அகலத்தில் AMOLED டச் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பட்டன் மூலையில் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால், ஹோம் ஸ்கிரீன் கிடைக்கிறது. இதனை ஸ்வைப் செய்து, பல அப்ளிகேஷன்களைப் பெறலாம். இதன் தொடக்க தோற்றம் ஒரு கடிகாரத்தினுடையதாகத்தான் இருக்கும். 


பயன்படுத்துபவர், இதனை ஸ்வைப் செய்து, பல பயனுள்ள அப்ளிகேஷன்களைப் பெறலாம். மெசேஜ் மற்றும் அழைப்பு குறித்த அறிவிப்பு இதில் கிடைக்கும். வரும் அழைப்புகளுக்கு, மணிக்கட்டில் உள்ள கடிகாரத்தில் உள்ள, பட்டனை அழுத்திப் பேசலாம். அல்லது அணைத்து ஒதுக்கலாம். இந்தக் கடிகாரத்தில் ஒரு ஸ்பீக்கர் மற்றும் மைக் தரப்பட்டுள்ளது. போனுக்கு வந்திருக்கும் அழைப்புகள் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களை இதில் பார்க்கலாம். ஆனால், ஜிமெயில், ட்விட்டர் போன்றவற்றிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள், அறிவிப்புகளாகத்தான் காட்டப்படும். இவை குறித்து கூடுதல் தகவல்கள் அறிய, பயனாளர் போனைத்தான் பார்க்க வேண்டியதிருக்கும்.

இதில் டயலர் வசதி தரப்பட்டுள்ளது. எனவே,இதிலிருந்து அழைப்புகளை ஏற்படுத்தி பேசலாம். போனின் துணையுடன் இதனை ஒரு போனாகவும் பயன்படுத்தலாம். இதில் 1.9 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமரா ஒன்று இயங்குகிறது. இது கடிகாரத்தில் இல்லாமல், தனியே அதனைக் கைகளில் கட்டும்
பட்டையில் உள்ளது. இந்த கேமரா, இதனை அணிந்திருப்பவரைப் பார்க்காது. வாய்ஸ் மெமோ ரெகார்டர், மியூசிக் பிளேயர், அழைப்புகளின் பட்டியல், போன் புக் மற்றும் பிற அப்ளிகேஷன்களுக்கான ஐகான்களைத் தரும் பக்கத்திற்கான ஐகான் என திரையில் காட்சி கிடைக்கிறது.


செப்டம்பர் 25 லிருந்து, இந்த காலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் 140 நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அக்டோபர் தொடக்கத்தில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும். மொபைல் போன் விற்பனை செய்பவர்கள் மூலம் இது விற்பனை செய்யப் படும்.இதன் விலை 300 டாலர் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புளுடூத் 4 மட்டுமே இயங்கும் என்பதால், புதியதாக வந்துள்ள காலக்ஸி நோட் 3 மட்டுமே, தற்போதைக்கு இதனுடன் இணையாகச் செயல்பட முடியும். இந்த 5.7 அங்குல பேப்ளட் வாங்குவதற்கும் செலவு செய்திட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வளவு செலவு செய்து இதனைப் பயன்படுத்த வேண்டுமா என்பது இன்றைய கேள்வியாக இருந்தாலும், இது போன்ற ஒன்று வேண்டும் என்பது இன்றைய நிலையில் ஒரு தேவையாகத் தரப்படவில்லை.எனவே, புதியதாக அறிமுகப்படுத்தப்படும் இதனை மக்கள் விரும்புவார்கள் என சாம்சங் எதிர்பார்க்கிறது. எப்படி, கம்ப்யூட்டரில் பார்த்துப் பழகிய மின்னஞ்சல்களை, ஸ்மார்ட் போனில் பார்த்துப் பயன்படுத்த நாம் மாறிக் கொண்டோமோ, அதே போல, மொபைல் போனில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, இனி ஸ்மார்ட் வாட்சில் பார்க்கும் பழக்கம் வந்து விடும் என சாம்சங் தெரிவித்துள்ளது.


'முன்னேறிச்செல்'........குட்டிக்கதை



விறகு வெட்டி ஒருவன் விறகு வெட்ட காட்டிற்குச் சென்றான்..அதற்குமுன் தாய் தந்தையரை வணங்கினான் அவன். அவர்கள் ...'உன் வழியில் முன்னறிச் சென்றுக் கொண்டேயிரு...வெற்றிப்பெறுவாய்' என ஆசி கூறினர்.

அந்த வார்த்தைகள் அவன் மனதில் படிந்தது.

அவன் காட்டில் முன்னேறிச் சென்றபோது சந்தனமரங்களைப் பார்த்தான்...மனம் மகிழ்ந்து அவற்றை வெட்டிச் சென்று நிறைய பணம் சேர்த்தான்.

அடுத்தமுறை சென்றபோது..'முன்னேறிச்செல்' என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தது....அப்படியே சந்தனக்காடுகளை கடந்து சென்றான்...வெள்ளிச்சுரங்கம் கண்ணில்
பட்டது.அது அவனை மேலும் பணக்காரன் ஆக்கியது....

மீண்டும் அவன் காட்டிற்குப் புறப்பட்டான்...இம்முறையும் வெள்ளிச்சுரங்கத்தையும் கடந்து முன்னேறிச்சென்றான்.அங்கு தங்கம்,ரத்தினம் எல்லாம் கிடைத்தன.

வாழ்க்கையில் முன்னேறிச் சென்று வெற்றி பெற்றால் போதும் என்று நில்லாது..மேலும் மேலும் முயன்றால் வெற்றிமீது வெற்றி நம்மை வந்து சேரும்.

முயற்சி திருவினையாக்கும்....முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

குட்டி மீனும் ...அம்மா மீனும்........குட்டிக்கதை



ஒரு குளத்தில் அம்மா மீனும்....அதனுடைய குட்டி மீனும் இருந்தன...அம்மா மீன் குட்டி மீனுக்கு நீந்த கற்றுக்கொடுத்தது.

நாளாக ஆக... அம்மா மீனுக்கு வயதானதால்..அதனால் வேகமாக நீந்த முடியவில்லை..

ஆனால் குட்டி மீனோ..அதி வேகமாக நீந்த ஆரம்பித்தது...அதனால் அதற்கு கர்வம் ஏற்பட்டது...அம்மா மீனை கிண்டல் செய்தது...'உன்னால்..உன் உணவை பெறக்கூட நீந்த முடியவில்லை..ஆனால் என்னைப்பார்..எவ்வளவு அழகாக நீந்துகிறேன்...'என டைவ் எல்லாம் அடித்து நீந்தியது...அம்மா மீன் சொல்வது எதையும் குட்டி மீன் கேட்பதில்லை..

ஒரு நாள் ... மீன் பிடிப்பவன் ஒருவன் ...மீன் பிடிக்க தூண்டிலுடன் வந்தான்....கரையில் அமர்ந்து ...சிறு புழுவை தூண்டிலில் சொருகி ...குளத்தில் வீசினான்..

புழுவைத் தூண்டிலில் பார்த்ததும் ..அதை பிடித்து உண்ண குட்டி மீன் விரைந்தது...உடனே ..தாய் மீன் அதனிடம் போகாதே...அது உன்னைப் பிடிக்க வைக்கும் தூண்டில் ..அதில் மாட்டினால் நீ இறந்து விடுவாய் 'என்றது.

'உனக்கு முடியாததால்... எதைப்பார்த்தாலும் நீ சந்தேகப்படுகிறாய்..அந்தப் புழுவை நான் பிடித்து வருகிறேன் பார்' என்றது குட்டி மீன்.அதற்குள் வேகமாக வந்த வேறொரு மீன் தூண்டிலைக் கவ்வி அதில் மாட்டிக்கொண்டு உயிரிழந்தது..

பயத்துடன் குட்டி மீன் தாயைப்பார்த்தது....பின் 'அம்மா நீ சொன்னது உண்மை..உன் பேச்சைக் கேட்காமல் நான் தூண்டிலைக் கவ்வியிருந்தால் அந்த மீனுக்கு ஆன கதியே எனக்கும் ஆகியிருக்கும்..உன்னால் என் உயிர் காப்பாற்றப்பட்டது.தாய் சொல்லை மீறக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்,,'என அம்மா மீனிடம் மன்னிப்புக் கேட்டது.

குழந்தைகளே.. நாமும் நம்மை விட மூத்தவர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடக்கவேண்டும்.

கந்தனும் .. பாம்பும்.........குட்டிக்கதை



அது ஒரு அழகிய கிராமம்..அந்த கிராமத்தில் கந்தன் என்றொருவன் இருந்தான்.அவன் மிகவும் நல்லவனாய் இருந்தான்.யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் அவனை அணுகினால் அவன் செய்து முடிப்பான்.

ஒரு நாள் அவன் நடந்து செல்கையில்....
குளிரில் விறைத்துப்போய் மயங்கிய நிலையில் பாம்பு ஒன்றைப் பார்த்தான்..உடனே அதன் மீது பரிதாப்பட்டு அதை எடுத்து தன் உடலுடன் அணைத்துக் கொண்டான்.

அவன் உடல் சூட்டில் பாம்பின் குளிர் அகன்றது...கண் திறந்த பாம்பு...தன் இயற்கைக் குணப்படி 'சுருக்'என கந்தனை கடித்தது..

கந்தனுக்கு உடலில் விஷம் ஏறியது..'ஒரு கொடிய வஞ்சகப் பிராணிக்கு நான் இரக்கம் காட்டியதற்குத் தகுந்த பரிசு எனக்கு கிடைத்தது' என்று கூறியபடியே உயிர் விட்டான் அவன்.

நன்றி கெட்டவர்களுக்கு உதவி செய்வது நல்லதல்ல..மேலும்..நம் முன்னோர்கள்..'பாத்திரமறிந்து பிச்சை இடு' எனக் கூறியுள்ளதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.

புறாவும் எறும்பும்... குட்டிக்கதை



ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம்...தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது.அது தண்ணீர் குடிக்கும் சமயத்தில் வெள்ளம் வந்து அதை அடித்துக்கொண்டு போயிற்று.தண்ணீரில் மூழ்கும் தறுவாயில்

இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது.இலையின் மேல்

எறும்பு மெதுவாக ஏறி கரையைஸ் சேர்ந்தது.சிறிது நேரத்திற்குப் பிறகு....வேடன் ஒருவன் வந்து ...மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி....அதை நோக்கி...வில்லில் அம்பைப் பொருத்தி

குறி பார்த்தான்.அதை கவனித்துக் கொண்டிருந்த எறும்பு வேடனின் காலில் கடித்தது.அதனால் ஏற்பட்ட வலியில் வேடனின் குறி தப்பியது.புறாவும் அங்கிருந்து "சட்" என பறந்தோடி தப்பியது.

ஒருவர் நமக்கு செய்த உதவிக்காக அவரிடம் நன்றியுள்ளவனாக இருப்பதோடு.....சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவருக்கு உதவவும் வேண்டும்.

இதையே திருவள்ளுவர்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்கிறார்.

ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறக்கக்கூடாது.அதே சமயம் யாரேனும் நமக்கு தீமை செய்தால் அதை மறந்துவிடுவது நல்லது

சிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்



கம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. அடுத்ததாக, இவற்றைக் கையாள்வது மிகவும் சிரமமான செயலாக அமைகிறது. ஒரு சில போட்டோக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு போல்டர்களில் இருந்தால், எதனை அழிப்பது, எந்த போல்டரில் வைத்துக் கொள்வது என்பது நமக்கு எரிச்சல் தரும் செயல் தானே. அதிர்ஷ்டவசமாக, நமக்கு சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை நீக்கும் எளிய வழி ஒன்றைத் தருகிறது.

சிகிளீனர் புரோகிராமினை, நிச்சயமாக அனைவரும் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்திருப்பார்கள். விண்டோஸ் சிஸ்டத்தில், தேவையற்றவற்றை நீக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள இந்த புரோகிராமினை நாம் அனைவரும் பயன்படுத்தலாம். தற்காலிக இண்டர்நெட் பைல்கள், விண்டோஸ் சிஸ்டம் ஏற்படுத்தும் தற்காலிக பைல்கள், லாக் இன் சம்பந்தப்பட்ட பைல்கள், குக்கீஸ் என தற்காலிக பைல்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். இவை எல்லாவற்றையும் தானாக சிகிளீனர் நீக்குகிறது.

அது மட்டுமின்றி, விண்டோஸ் இயங்கும்போது, இயக்கப்படும் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் விண்டோவில் சிகிளீனர் சரி செய்கிறது. தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்து நீக்க உதவுகிறது. ரெஜிஸ்ட்ரியில் உள்ள தேவையற்றை வரிகளை, குறியீடுகளை நீக்குகிறது. பைல்களை அழிக்கும் போது, அவற்றின் சுவடு தெரியாமல் முழுமையாக அழிக்கிறது. இதன் மூலம் நமக்கு ஹார்ட் டிஸ்க்கில் இடம் கிடைக்கிறது. 



தற்போது வெளியிடப்பட்டுள்ள சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை இனம் கண்டு நீக்குகிறது. இதனைச் செயல்படுத்த, சிகிளீனர் புரோகிராமினை இயக்கி, டூல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். டூப்ளிகேட் பைல் அறியும் டூலினைப் பெற, இதன் விண்டோவில், File Finder என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். ஏற்கனவே, சில ஆப்ஷன்கள் நமக்காக, சிகிளீனர் இன்ஸ்டால் செய்திடுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும். ஆனால், மிக முக்கியமாக, Ignore என்னும் வகையில், Modified Date under Match By என்பதிலும், File Size Under என்பதிலும், டிக் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். சிஸ்டம் பைல்ஸ் என்று இருக்கும் இடத்தில் Ignore ஆப்ஷனில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பல சிஸ்டம் பைல்கள், இரண்டு டைரக்டரிகளில் அல்லது இரண்டு போல்டர்களில் இருக்க வாய்ப்புண்டு. இவை, நீக்கப்பட்டால், சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்படலாம்.

இனி, கம்ப்யூட்டரில் உள்ள டூப்ளிகேட் பைல்களை எப்படி நீக்கலாம் என்பதனைப் பார்க்கலாம். மாறா நிலையில், சிகிளீனர், அனைத்து ட்ரைவ்களையும் தேர்ந்தெடுத்துக் காட்டும். கம்ப்யூட்டரே, சிகிளீனர் மூலம் ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டால், அந்த வேலை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, டூப்ளிகேட் பைல்கள் உள்ள போல்டர்கள் அல்லது ட்ரைவ்கள் எவை என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். 


போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, பிரவுஸ் பட்டன் கிளிக் செய்து, வழக்கமான முறையில், போல்டர்களையும் பைல்களையும் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த பின்னர், Search பட்டனில் கிளிக் செய்தால், ஸ்கேன் தொடங்கப்படும். ஸ்கேனிங் முடிந்த பின்னர், சிகிளீனர், அது கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைப் பட்டியலிடும். இரண்டு அல்லது அதற்கும் மேலான இடத்தில் உள்ள பைல்கள் தொடர்ச்சியாக இணைத்தே பட்டியலிடப்படும். எந்த பைலை நீக்க வேண்டுமோ, அவற்றை, அதன் அருகே உள்ள செக் பாக்ஸில், டிக் செய்து தேர்ந்தெடுக்கவும். சிகிளீனர் மீண்டும் ஒருமுறை, உங்களிடம், நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்களை உறுதியாக நீக்கவா என்றுகேட்கும். சரி என்று சம்மதத்திற்கென கிளிக் செய்தவுடன், டூப்ளிகேட் பைல் நீக்கப்படும்.
Click Here