Search This Blog

Saturday 2 November 2013

சான்றோர் சிந்தனைகள்!

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

விளைவுகளை வைத்துதான் செய்லகளின் சிறப்பை மதிப்பிட முடியும்.




நல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்.

உனது அறிவு ஆற்றல் உனக்கு மட்டும் சொந்தம் அல்ல .பகிர்ந்து கொள்ளக்கூடியது.சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் அதனைப் பொதுவுடமையாக்கிவிட்டால்,தனிமனித தேவைகளும்,ஆடம்பர வாழ்க்கையும் குறைந்து போகும்.

---சாக்ரட்டீஸ்.


நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை.

---கிளார்க்

ஆர்வமில்லாத இடத்தில் புதுமைக்ள பிறப்பதில்லை

---டுஸ்டாவ் க்ராங்ஸ்மேன்.

எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து;எவரையும் நம்பாமல் இருப்பதும் ஆபத்து.

---ஆபிரகாம் லிங்கன்.

மூன்று செயல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை;
சென்றதை மறப்பது
நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
வருங்காலத்தைப் பற்றி சிந்துப்பது.
 
---இங்கர்சால்.


இருபது ஆண்டு வளர்ச்சி
இருபது ஆண்டு மலர்ச்சி
இருபதாண்டு மகிழ்ச்சி.
 
---கம்பர்

முதுமை வயதைப் பொறுத்தல்ல; உணர்ச்சியைப் பொறுத்தது

---நபிகள் நாயகம்

நல்ல உடைகளுக்கு எல்லைக் கத்வுகளும் திறக்கும்.

---தாமஸ் புல்லர்

எத்தனை புயல்களை நீ சமாளித்துக் கடந்தாய் என்பதைப் பற்றி உலகத்துக்குக் கவலையில்லை.கப்பலைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தாயா என்பது பற்றியே அதற்குக் கவலை.

------வில்லியம் மீக்லி.

அறிவுள்ள மனிதர்களோடு உரையாடு.அறிவில்லாத மனிதர்களோடு உறவாடு.அனால் பண்பில்லாதவரைக் கண்டால் ஒதுங்கிவிடு.

----------லயட்கரின்

விழிப்புடன் செயலபட்டு வாழ்ந்து வருகிற எந்த ஒரு சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கிவிடமுடியாது.

-----------லாலா லசபதிராய்

இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது யார்?

200px-Algoretestifying 

இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் தட்டி கொண்டது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதற்காக அவர் இணையத்தில் அவப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டுமே தவறானது என்பது தெரியுமா?


இவற்றின் பின்னே உள்ள உண்மையை தெரிந்து கொள்வதன் மூலம் கொஞ்சம் இணைய வரலாற்றை தெரிந்து கொள்வோம்.


இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக சொந்தம் கொண்டாடியதாக சொல்லப்படும் அந்த அமெரிக்க தலைவர் முன்னாள் துணை அதிபர் அல்கோர். யாருமே கண்டுபிடித்திராத இண்டெர்நெட்டை நான் தான் கண்டுபிடித்தேன் என்று சொன்னால் கைகொட்டி சிரிக்க மாட்டார்களா? அதனால் தான் அல்கோர் இப்படி கூறியது  தொடர்பாக இணையத்தில் நிறைய நகைச்சுவை துணுக்குகள் உண்டு.


ஆனால் அல்கோர் அப்படி ஒருபோதும் கூறியது இல்லை . இண்டெர்நெட் உருவாக்கத்தில் தனது பங்களிப்பு பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களே இப்படி தவறுதலாக மேற்கோள் காட்டப்பட்டு மீண்டும் மீண்டும் தவறாக சுட்டிக்காட்டப்படுகிறது.


இந்த தகவலை ஆண்ட்ரூ பிலம் தான் எழுதியுள்ள , புதிய புத்தகமான Tubes: A Journey to the Center of the Internet -ல் தெளிவு படுத்தியுள்ளார்.


அல்கோரை இண்டெர்நெட்டை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், தற்போது நான் பயன்படுத்தும் வகையில் இண்டெர்நெட் உருவானதில் அவருக்கு முக்கிய பங்குண்டு. 1991ல், அதாவது வைய விரிவு வலை உருவாக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , இண்டெர்நெட்டை அதன் கல்வி நிறுவன வேர்களில் இருந்து விடுவித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான முக்கிய சட்ட மசோதாவை செனட் உறுப்பினராக இருந்த அல்கோர் கொண்டு வந்தார். இந்த மசோதா கோர் பில் என்றே குறிப்பிடப்பட்டது. இந்த மசோதா பற்றி அல்கோர் கூறிய கருத்துக்கள் தான் தவறான மேற்கோளின் விளைவாக , இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக கூறப்பட்டு விட்டது.


இதை தான் ஆண்ட்ரு பிலம் தனது புத்தகத்தில் தெளிவாக்கியுள்ளார்.



51KAE1XsOwL._SY344_PJlook-inside-v2,TopRight,1,0_SH20_BO1,204,203,200_


ஆனால் உண்மையிலேயே அல்கோருக்கு இணையம் உருவாகிய விதத்தில் முக்கிய பங்குண்டு என்பதை வின்செண்ட் பெர்பே அங்கீகரித்துள்ளார். செர்ப் வேறு யாருமல்ல இண்டெர்நெட்டின் தந்தை என்று போற்றப்படுபவர். இண்டெர்நெட்டின் அடைப்படை கட்டுமானத்தை உருவாக்கியதற்காக இப்படி பாராட்டப்படுபவர் செர்ப்.” இண்டெர்நெட்டின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு அதன் வளர்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவிய முதல் அரசியல் தலைவர்” என்று அல்கோரை செர்ப பாராட்டியுள்ளார். எங்களுக்கு தெரிந்த வரை வேறு எந்த அரசியல் தலைவரும் இணைய்த்தின் வளர்ச்சிக்கு இந்த அளவு பங்காற்றியதில்லை என்றும் அல்கோர் பற்றி அவர் கூறியுள்ளார்.


இண்டெர்நெட் வளர்ச்சிக்கும் ஆதரவு தெரிவித்ததோடு அது அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட வழி வகுத்ததாகவும் அல்கோர் பர்றி அவர் கூறியுள்ளார். செர்ப் பாராட்டுரையை இங்கே விரிவாக படிக்கலாம்.;
நிற்க ஸ்னோப்ஸ்.காம் என்று ஒரு இணையதளம் இருக்கிறது. இணையத்தில் உலாவுhttp://web.eecs.umich.edu/~fessler/misc/funny/gore,net.txtம் கட்டுகதைகளுக்கு பின்னே உள்ள உண்மைய விளக்கும் தளம் இது. பரவலாக உண்மை என்று கருதப்படும் இணைய பொய்கள் எப்படி உருவானது என தெளிவுபடுத்தி அதன் பின்னே உள்ள உண்மையையும் விளக்கும் தளம் இது. அல்கோர் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தாக சொல்லப்படும் தகவல் குறித்தும் விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. அது இங்கே:http://www.snopes.com/quotes/internet.asp


ஆக, அல்கோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற தலைவராக மறக்கப்பட்டாலும், இணைய வரலாற்றில் அவருக்கு  முக்கிய இடம் உண்டு. பார்க்க அல்கோரும் இண்ட்நெர்நெட்டும்:  (http://en.wikipedia.org/wiki/Al_Gore_and_information_technology) . அல்கோர் பற்றி மற்றொரு தகவல், இணையத்தின் ஆற்றலை குறிக்கும் தகவல் நெடுஞ்சாலை பதத்தை உருவாக்கியவர் அவர் தான்.

நாட்டையே உலுக்கிய இரண்டு சம்பவங்கள்! குற்றவாளிகள் யார் என தெரியாது?

சாதாரண மக்களுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், அதன் நிர்வாகிகள், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என, பலருக்கும் அவரை நன்கு தெரிந்திருக்கும்.


சுனிதா நாராயணன்:


உலக நாடுகள் அனைத்திலும், தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் பிரமாண்ட நிறுவனங்களையும் எதிர்த்து நிற்பவர் இவர் என்பதால், அந்த நிறுவனங்கள் இவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கும்.உதாரணமாக, குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்ற, அளவுக்கு அதிகமாக, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், குளிர்பானங்கள், உயிர்கொல்லி பானங்களாக மாறி விடுகின்றன என, நாட்டுக்கு வெளிப்படுத்தியவர் இவர்.அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஏராளமான ஆய்வுகளில், இவர் சொன்னது சரி தான் என்பது, தெரிய வந்த போதிலும், பூச்சிக்கொல்லி குளிர்பானங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.அவர், சுனிதா நாராயணன்.டில்லியை சேர்ந்த இவர், 'சென்டர் பார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்' என்ற, அரசுசாரா தொண்டு நிறுவனத்தை, நடத்தி வருகிறார். அதன் மூலம், கண்ணுக்குத் தெரியாத பல, பிரமாண்ட எதிரிகளை சம்பாதித்துள்ளார்.சாதாரண மக்களின் பாதுகாப்பிற்காக, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக, இவர் மேற்கொள்ளும் முயற்சிகள், இயற்கையாகவே இவருக்கு, பல எதிரிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.இருந்தாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்த அவரைக் கொல்ல, இரண்டு வாரங்களுக்கு முன், முயற்சி நடந்தது.

அதை போலீசார், விபத்து என கூறினாலும், இன்னும் எழுந்திருக்க முடியாத வகையில், பலத்த காயம் அடைந்துள்ள சுனிதாவை கொல்ல நடத்தப்பட்ட முயற்சி என்றே, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.ஏனெனில், வாகனங்கள் அதிகம் ஓடாத அந்த காலைப் பொழுதில், வேகமாக வந்த கார் சைக்கிளில், சாலை ஓரம் சென்ற சுனிதா மீது மோதி, துாக்கி எறிந்து சென்றுள்ளது என்றால், அதை விபத்து என கூறுவதா...!

விபத்து என்றால், அதை ஏற்படுத்தியவர் யார் எனத் தெரியவேண்டுமல்லவா...?முகத்திலும், தோள்பட்டையிலும் பல அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மிகவும் மோசமாக இருந்த அவரின் உடல் நிலை, கடந்த சில நாட்களாக, சற்றே முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், அவர் மீது மோதிய கார் பற்றிய விவரமும் தெரியவி்ல்லை; விசாரணையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இரண்டாவது சம்பவம், கொலை.மகாராஷ்டிராவின், புனே நகரில், பில்லி சூனிய பேர்வழிகளுக்கு எதிராகவும், மோசடி மந்திரவாதிகளுக்கு எதிராகவும், பல ஆண்டுகளாக போராடி வந்த, நரேந்திர தபோல்கர், கடந்த ஆகஸ்ட் மாதம், மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.அவரை சுட்டுக் கொன்ற கொலைகாரர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனம், சென்ற வழி எல்லாம், போலீசுக்கு தெரிகிறது; ஆனால், கொலைகாரர்கள் மட்டும், இன்னும் பிடிபடவில்லை.எம்.பி.பி.எஸ்., படித்து, நோயாளிகளின் நோயை போக்கும் முயற்சியில் சக டாக்டர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நரேந்திர தபோல்கர், சமூகத்தை பிடித்திருந்த, நோயை போக்க முயற்சித்தார். அதனால், அவரின் சக டாக்டர் நண்பர்கள், கோடிகளைக் குவித்த நிலையில், இந்த உலகை விட்டே போய்விட்டார் நரேந்திர தபோல்கர்.மகாராஷ்டிர அந்தராஷ்ரதா
நிர்மூலன் சமதி என்ற பெயரில், ஒரு அமைப்பையே நிறுவி, மூட நம்பிக்கைகளுக்கும், பில்லி, சூனியத்திற்கும் எதிராக போராடிவந்த, நரேந்திரா மறைந்து விட்டார்.அவர் விட்டுச் சென்ற பணியை, அவரின் வாரிசுகள், ஹமித் மற்றும் முக்தா தொடர்கின்றனர்.


சடங்குகள் இல்லாமல்...:


வீடு கட்டுபவர்கள், நல்ல நாளில் வேலைகளைத் துவங்குவர். வீட்டின் அறைகளை, வாஸ்து சாஸ்திரப்படி அமைப்பர். வீட்டுக்கு வெளியே, திருஷ்டி பூசணிக்காயை போட்டு உடைப்பர்.நரேந்திர தபோல்கரும் வீடு கட்டினார்.எவ்வித சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்காமல், வாஸ்து பற்றி கவலைப்படாமல், தன் இஷ்டத்திற்கு வீட்டைக் கட்டினார். திருஷ்டி பூசணிக்காய் கிடையாது; புதுமனை புகுவிழா கிடையாது.எளிமையாக வாழ்ந்து காட்டியவர். எளிமையான முறையில் திருமணம் செய்த அவர், தன் இரு வாரிசுகளுக்கும், மிக எளிமையாக, எவ்விதச் சடங்குகளும் இல்லாமல் திருமணம் நடத்தியவர்.

தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

தீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த லேகியம் ரெடி பண்ண நேரமில்லாதவ்ர்கள் ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்.


nov 2 - deepavali lekiyam


இனி தீபாவளி லேகியம் எப்படி செய்வது என்று பார்ப்போமா?


தேவையானவை:


தணியா : 4 கப்

இஞ்சி : 200 கிராம்

ஓமம் : 100 கிராம்


சுக்கு, மிளகு, திப்பிலி : தலா 10 கிராம்

வெல்லம் 100 கிராம்: (துருவிக் கொள்ளவும்)

பொடித்த ஏலக்காய் 5 கிராம்: (விருப்பப்பட்டால்)

நெய் : 1/4 கப்

செய்முறை:

* தணியாவையும், சீரகத்தையும் நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* இளசாக இருக்கும் இஞ்சியாகப் பார்த்து வாங்கவும். இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* மிக்சியில் அல்லது அம்மியில் இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* ஊற வைத்த தணியாவையும், சீரகத்தையும் இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும்.

* கலவை நன்றாக அரைந்து விழுதாக ஆனதும் அதில் வெல்லத்தை பொடி செய்து கலக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து விழுதை அதில் போட்டு நன்கு கிளறவும்.

* பின்னர் அதில் நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருங்கள். லேகியம் பதத்திற்கு வந்ததும் இறக்கி உலர்ந்த பாத்திரத்தில் பத்திரப்படுத்துங்கள்.

* இதனை அனைவரும் சாப்பிடலாம். பலகாரங்களால் வயிற்றுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை இந்த லேகியமே சரி செய்து விடும்.

ரோஹித் சர்மா இரட்டை சதம்: இந்திய அணி 383/6 எடுத்து அசத்தல்!




ஆஸ்திரேலிய அணியுடனான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன் எடுத்தது. தீபாவளி சர வெடியாக, ரோஹித்  சர்மா இரட்டை சதம் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட் செய்யப் பணித்தது. இதை அடுத்து இந்திய அணியில் துவக்க வீரராகக் களம் இறங்கினர் ரோஹித்  சர்மா, ஷிகர் தவான் ஆகியோர். இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தது. ஷிகர் தவான் 57 பந்துகளில் 60 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.


பின்னர் வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 30 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 28 ரன் எடுத்தார். யுவராஜ் சிங் 14 பந்துகளில் 12 ரன் எடுத்தார். இதில் 1 சிக்ஸர் அடங்கும். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 33.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களாக இருந்தது.
பின்னர் வந்த கேப்டன் தோனியும், ரோஹித் சர்மாவும் இணைந்து 5 வது விக்கெட்டுக்கு அதிரடி காட்டினர். ரோஹித் சர்மா தனது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். சிக்ஸர்களாக அடித்து, ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டி, கிரிக்கெட் தீபாவளியை பெங்களூர் ரசிகர்களுக்கு காணிக்கை ஆக்கினார் ரோஹித் சர்மா. 158 பந்துகளில் 16 சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் அடித்து, 209 ரன் எடுத்து அசத்தினார் ரோஹித் சர்மா.


தோனி 38 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடித்து 62 ரன் எடுத்தார்.
இருவரும் இணைந்து, 5 வது விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தனர். இதை அடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 383 ரன் எடுத்து அசத்தியது.


ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில், மூன்றாம் இடம் பிடித்தார். முன்னதாக சேவாக், சச்சின் ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.


இதன் மூலம் 384 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

“அவனின்றி ஓர் அணுவும் அசையாது”

அண்மையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த போது ஒரு சுவையான செய்தியைப் படிக்க நேர்ந்தது.

 









அது “கடவுள் துகள் ” என்ற கண்டுபிடிப்பு பற்றியது. இதை ஆங்கிலத்தில் God’s particle அல்லது Higgs Boson என்று அழைக்கிறார்கள்.


இதைப் பற்றி விரிவாகப் படித்த போது வார்த்தைகளில் சொல்லொணாத பேரின்பம் இதயத்தில் எழுந்தது. அந்தச் செய்தியைப் படிக்கும் போதே என் மனம் திருமூலர் எழுதிய திருமந்திரத்திற்குத் தாவி விட்டது.
ஏன் ? அதற்கு ஒரு பெரிய கதை இருக்கிறது.


இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் அல்லது எல்லாத் தனிமங்களிலும் (Elements) இருக்கும் அடிப்படைப் பொருள் அணு. இந்த அணுக்கள் ப்ரோடான், நியுட்ரான், எலேக்ட்ரோன் ஆகியவற்றால் ஆனவை. அவை எதனால் ஆனவை என்று பார்த்தால் க்வார்க்குகள் மற்றும் லெப்டான்கள் போன்ற பல உப அணுக்களால் உருவானவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த அணுவை நாம் கண்களால் காண முடியாது. கைகளால் தொட முடியாது . இந்த அணுவே நம் உடல், உணவு, உடை, , மரம் , செடி, கொடி, ஜடப்பொருள் என எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. மொத்தத்தில் எல்லா உயர்திணையும், அஃறிணையும் அணுக்களால் ஆனவை தான். தூணிலும் , துரும்பிலும் கூட இருப்பதால் இவற்றைக் கடவுள் மாதிரி என்று கூட சொல்லலாம்.


ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த அணுவுக்கு ஆதாரமாக இன்னொரு அணு இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதி ஒரு சோதனையில் இறங்கினார்கள். இதன் விளைவாக அந்த உப அணுவைக்( அணுவை இயக்கும் அணு) கண்டிபிடிப்பதில் நெருங்கி விட்டதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள் . அந்த முயற்சியின் பயனாக “கடவுள் துகள் “(The God’s Particle) என்ற ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அது என்ன கடவுள் துகள் ?


அந்தத் துகளுக்குள் போவதற்கு முன் நாம் பெரு வெடிப்புக் கொள்கையைப் (BIG BANG THEORY) பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.


இந்த உலகம் பெரு வெடிப்புக் கொள்கையின் படி தோன்றியது என்று ஒரு பரவலான நம்பிக்கை உண்டு. இதன் படி அண்ட வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 12 முதல் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய தீப்பிழம்பாக இருந்தன . இன்று அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கக் கூடும் என்று நம்பப்டுகிறது. இத்தீப்பிழம்பானது அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கியது . இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) என்று கூறப்படுகின்றது . ஒவ்வொரு விநாடியும் பல மடங்குகளாக இந்த விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகியிருக்கக் கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர் . பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகவும், இந்தப் பேரண்டத்தில் உள்ள எல்லாமே அணுக்களால், அணுக்கூட்டங்களால் ஆனது என்ற உண்மையையும் மனிதன் கண்டுபிடித்தான்.


இருந்தும் ,விஞ்ஞானம் இதோடு நிற்கவில்லை.இந்த அணுக்களை இயக்குவதற்கு மூல காரணமாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று அது நம்பியது. காரணம், இந்த அணுக்களுக்கு நிறை(நிறை என்பது புவியீர்ப்பு விசையைக் கழித்தது போக வரும் எடை.) எங்கிருந்து கிடைக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராய் இருந்தது . அதாவது , இந்த அணுக்களை ஒன்று சேர்த்து ஒட்டும் பொருள் என்ன என்பது தான் அவர்களுக்கு பிடிபடாமல் இருந்தது. ஏனென்றால் நிறையில்லாமல் அவை ஒன்றையொன்று பிடித்து வைத்துக்கொள்ள முடியாது. அப்படி பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அங்கு பொருளோ அதாவது மூலக்கூறுகளோ, அணுவோ, மற்ற எதுவுமே இருக்காது. இந்த நிலையில் தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி 1960 இல் ஒரு கோட்பாட்டை முன்மொழிந்தார்.


இந்த அணுவுக்கு ஏதோ ஒரு உப அணு இருக்க வேண்டும். அது தான் மற்ற எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கில் இயக்குகிறது என்பது அவருடைய தத்துவம்.எனினும், அதற்கும் முன்னதாக 1924 ஆம் ஆண்டே இதைப் பற்றிப் பேசியவர், நம் இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர போஸ் ஆவார். அப்போது அவர் இதைப்பற்றி, அணுவையும், அணுசக்தியையும் கண்டறிந்த சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஒரு ஆய்வறிக்கையை அனுப்பினார். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த `ஐன்ஸ்டீன்-போஸ் கண்டென்ஸேட்’ என்ற கண்டுபிடிப்புதான், இப்போது கடவுள் அணுவைக் கண்டுபிடிக்க முனைந்த விஞ்ஞானிகளுக்கு அடிப்படை. ஆதலால் , அதற்கு ஹிக்ஸ் என்ற பெயரையும், போஸ் என்ற பெயரையும் இணைத்து இந்தக் கண்டுபிடிப்புக்கு ஹிக்ஸ் போஸான்(HIGGS BOSON) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் .



இந்த நுண்ணிய உப அணுவை கண்டுபிடித்தாலே பிரபஞ்ச இரகசியத்தை முழுமையாக அறிய அது வழி வகுக்கும் என்று விஞ்ஞானிகள் நினைத்தாலும் அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று விஞ்ஞானிகள் சிந்தித்து ஒரு சோதனை செய்ய முடிவெடுத்தார்கள்.


பல பில்லியன் டாலர்கள் செலவில் , செர்ன் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் , பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே , 574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் ஜோ இன்கண்டேலா என்ற புகழ்பெற்ற அணு வல்லுநர் தலைமையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது . பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெடிப்பை மறுபடி நடத்திப் பார்ப்பதன் மூலம் இந்த ஒட்டுப்பொருளை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பினர். LHC யில் அதி வேக புரோட்டான்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர். ஒரு வினாடியில் லட்சக்கணக்கான மோதல்கள் நிகழ்ந்தபோது இதுவரை பார்த்திராத துகளின் தடயங்கள் காணப்பட்டன . இதனுடைய நிறை (mass) முன்பு விஞ்ஞானிகள் கணித்துச் சொன்ன அதே வரையறைக்குள் இருந்தது. அதனால் இதுதான் ஹிக்ஸ் பாசன் என்பது கிட்டத்தட்ட முடிவாகி இருக்கிறது.இதை அடுத்து அணுவின் உப அணுவை கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்டோம் என்று ஜூலை 4ந் தேதி விஞ்ஞானிகள்அறிவித்தார்கள்.



ஆனால், இந்தத் துகளைக் கண்டுபிடிப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எந்த ஒரு கருவியும் இல்லாமலேயே நம் மூதாதையர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். கேட்பதற்கு பிரமிப்பாக இருக்கிறதல்லவா !! எப்படி ?



நம் சித்தர் பிரான் திருமூலர் இறைவனைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்,



“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”


கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார். இந்த அணுவின் அணுவை இப்போது தான் விஞ்ஞானிகள் நெருங்கியிருக்கிறார்கள்.


விஞ்ஞானிகள் போஸான் என்று அழைப்பதைத் திருமூலர் ஈச(சா)ன் என்று அழைக்கிறார்.




இந்த ஹிக்க்ஸ் போஸானின் உருவம் என்ன?!! சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்?


“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”


இறைவனை, “அனைத்திலும் கலந்தும் கலக்காமலும் இருப்பவனே, கண்ணுக்குத் தெரியாமல் இருப்பவனே , பரந்த சடையுடையவனே , பசும் பொன்னிறத்தில் இருப்பவனே , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவனே , அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவனே” என்கிறார் திருமூலர்.
இதில் சில வரிகளை ஆராய்ந்து பார்ப்போம். பொதுவாகச் சிவபெருமானை நாம் சடாமுடியன், சடையான் என்று கூறுவோம். அதே போல், அவரும் பரந்த சடையுடையவனே என்று கூறியிருக்கிறார்.


 இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சடையுடன் நினைத்துக் கொள்ளுங்கள். நாம் பேச்சு வழக்கில் பரட்டைத்தலை என்று சொல்லுவோம் அல்லவா அதே போன்று சற்று பெரிய அளவில் . பின்பு அந்த உருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாகக் காணும் சிவபெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த உருவத்தை கண்ணுக்குப் புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அணு அளவிற்கு..! இப்பொழுது தெரிகிறதா அந்த ஹிக்க்ஸ் போசோன் எப்படி இருக்கும் என்று..?! இணையதளத்தில் உலா வரும் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதைக் சிவமாகக் கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே !!!.


“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே”


சிவனுடைய வடிவைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பசுவின் முடியை எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறுகிறார் திருமூலர்.


இப்பொழுது நாம் விஞ்ஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு
0 .000000212 mm. இப்பொழுது நாம் திருமூலர் பாடலின் படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனித முடியின் சுற்றளவு 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே, அதன் சுற்றளவு 100 மைக்ரோன் என்று வைத்துக்கொள்வோம்.


மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )
100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)
இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்,
0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்,
0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)
இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்.
0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM),
ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).


சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக் கோடி அண்டங்கள், பேரண்டங்கள், இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூலகாரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணுசக்தி . ஒரணுவை ஆயிரம் கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றல் கொண்ட சக்தியையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்றால் பிரிக்க முடியாத அணு என்று பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. கண்ணுக்குத் தெரியாத அணு எவ்வளவு சக்தி வாய்ந்ததென்பது நமக்குத் தெரியும். அந்த அணுவினை ஆயிரங் கூறிட்டால்தான் பரமாணு என்கிற ஆதிபிரானைக் காணலாம் என்கிறார்கள் சித்தர்கள் . அந்த அற்புதசக்தியின் ஒளி ஆயரங்கோடிச் சூரியர்களுக்கு நேர் என்றும் கூறுகிறார்கள்.


“இருக்கில் இருக்கம் எண்ணிலா கோடி
இருக்கின்ற மூலத்தூர் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரடில் வீச
உருக்கிய ரோமம் ஒளி விடுந்தானே”


இந்தக் கடவுள் துகளானது நம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவை விட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி , அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா. அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . இப்பொழுது ஹிக்க்ஸ் போஸானில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.


இது மட்டுமல்ல. கம்பரும் ,


“சாணிலும் உளன்;ஓர் தன்மை, அணுவினைச்
சத கூறு இட்ட கோணிலும் உளன்……”
என்று பாடுகிறார்.


கடவுள் சாணிலும் இருக்கிறார்.அணுவினை நூறு கூறுகளாகப் பிளந்தால், அதற்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பதே இதற்குப் பொருள்.அப்படி நூறு கூறுகளாகப் பிரிக்கப்பட்ட அணுவுக்கு கோண் என்று பெயர் சூட்டுகிறார் .அணுவைப் பிளக்க முடியும் என்பதை இருபதாம் நூற்றாண்டில் தான் எர்னஸ்ட் ரதர்ஃபோர்ட்(Earnest Rutherford) கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு முன்பே கம்பர் அதைச் சொல்லி விட்டாரே !!



இது வெறும் கற்பனை தான் என்றாலும் ரதர்ஃபோர்டின் கண்டுபிடிப்புக்கு முன்னோடி அல்லவா நம் கவிச்சக்கரவர்த்தி !!! மேலும் , திருவள்ளுவமாலை என்னும் நூலில் ஒளவையார் திருக்குறளைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்.



“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்”.
அதாவது, ஒரு அணுவைத் துளைத்து, அதற்குள் ஏழு கடல்களை நிரப்பினால் அது எப்படி சக்தி வாய்ந்ததாக இருக்குமோ அப்படி இருக்கிறதாம் திருக்குறள்.
அணுவைத் துளைத்தால்(Nuclear Fission) அளவிட முடியாத சக்தி பிறக்கும் என்பது ஒளவையாருக்கு எப்படித் தெரிந்தது ?


அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற பழமொழியை இதுகாறும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. இப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பொருள் தெரிந்த பின்பு சின்னதாக இருந்தாலும் பிரம்மாண்டமாகத் தெரிகிறது இந்தப் பழமொழி.


இதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது நம் முன்னோர்கள் தான் உலகின் முதல் அணுசக்தி விஞ்ஞானிகளோ என்று எண்ணி அவர் தாம் காலடியில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கத் தோன்றுகிறது.



வாழ்க தமிழ்மொழி !! வாழ்க தமிழினம் !! வாழிய வாழியவே !!!

அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்!


நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்து அளிக்கிறதா? இல்லை. நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது உடலை அழித்து கொண்டிருக்கும் உணவு வகைகள்.

சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ் வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது. ஊட்டச்சத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, நாம் எல்லா வகையான உணவுகளையும் குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள். இதற்கு மாறாக சிலவகை உணவுகள் மூளைச் செயல்பாட்டை அழிக்கும் உணவாகவே இருக்கிறது.

உணவியல் வல்லுநர்கள் கூறும் அறிவுரை என்ன வென்றால், இவ்வகை உணவுகளை குறைவாக உட்கொள்வதினால், அதன் கேடு விளைவிக்கும் தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது. இதோ நமது அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் முதல் 11 உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

1.சர்க்கரை உணவுகள் :

சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த உணவுகள், எடை குறைப்பை கெடுப்பதுமட்டுமல்லாது, மூளைச்செயல்பாட்டையும் கெடுக்கும். நீண்ட காலம் சர்க்கரை உட்கொள்வதினால், அது நரம்பியல் பிரச்சினைகளை உருவாக்கும் மற்றும் ஞாபகத்திறனையும் பாதிக்கும். அது மட்டுமல்லாது, சர்க்கரை உணவுகள் நமது படிப்பாற்றலையும் பாதிக்கும். இதனால் தான் சர்க்கரை அதிகமாக உள்ள உணவு வகைகளான பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஸ்வீட், கான் சிரப் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2.மது  :

மது உட்கொள்ளுதல் நாளடைவில் நமது கல்லீரலை பாதிக்கும். இதனால் வருவது தான் `பிரைன் ஃபாக்' எனப்படும் மூளை மூடுபனி. பிரைன் ஃபாக் என்ற பெயருக்கு ஏற்ப இது மனக்குழப்பத்தை ஏற்படுத்தி, சிந்திக்கும் திறனை தாக்குவதோடு, நினைவாற்றலையும் தாக்கும்.

இதனால் மது அதிகம் உட்கொண்டால், சில பொருட்களின் பெயர் மறந்து போய் விடும், சில நிகழ்வுகளை நினைவு கூற முடியாது, நாம் கனவுலகில் இருக்கின்றோமா நிஜவுலகில் இருக்கின்றோமா என்று கூட தெரியாத நிலை வந்துவிடும்.

இவை அனைத்தும் மது நமது மூளையின் செயல்பாட்டை பாதிப்பதால் ஏற்படுகிறது. நல்ல வேளையாக, இந்த அறிகுறிகள் அனைத்தும் திரும்புதலால் நாம் மது அருந்துவதை நிறுத்த வேண்டும் அல்லது வாரம் ஒன்று அல்லது இரண்டு தடவை அருந்துவது என கட்டுப்படுத்த வேண்டும்.

3.ஜங்க் உணவுகள்  :

அண்மையில் மாண்ட்ரியல் பல்கலைகழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் படி, ஜங்க் உணவுகள் நமது மூளையில் உள்ள ரசாயனத்தை மாற்றி, அவை மனஅழுத்தம் மற்றும் கவலை நிலைக்கு ஆளாக்கும். அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு பழகி விட்டு, அதனை நிறுத்தும் போதும் இதே போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

இந்த வகை உணவுகள், டோபமைன் உருவாவதை தடுக்கிறது. டோபமைன் என்பது சந்தோஷம் மற்றும் நல்ல உடல் வளம் பெற உதவி செய்யும் இரசாயனம். அதுமட்டுமல்லாது, டோப மைன் அறிவுத்திறன், விழிப் புணர்வு, ஊக்கத்திறன் மற்றும் ஞாபகத்திறன் போன்றவற்றிற்கும் உதவுகிறது.

4.பொரித்த உணவு  :

தற்போதுள்ள எல்லா பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் ரசாயனங்கள், சாயப் பொருட்கள், சேர்க்கைப் பொருட்கள், செயற்கை சுவைகள் மற்றும் பதப்பொருட்கள் உள்ளன. பொரித்த உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மூளையில் உள்ள நரம்பு அணுக்களை அழிகின்றன. இருப்பினும் சில எண்ணெய்கள் மிகவும் ஆபத்தானவை. அவைகளில் சூரியகாந்தி எண்ணெய் தான் மிகவும் நச்சுத்தன்மை உடையதாகும்.

5.பதப்படுத்தப்பட்ட உணவு  :

பொரித்த உணவுகள் போல பதப்படுத்தப்பட்ட உணவுகளும் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும். மேலும் அல்சைமர் எனப்படும் மூளை சிதைவு நோய் வரும் வாய்ப்புகளும் அதிகமாகும்.

6.அதிக உப்பு உள்ள உணவு  :

அதிக உப்பு உள்ள உணவுகள் ரத்த அழுத்தத்தை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். மேலும் அது நமது இதயத்திற்கும் கேடு விளைவிக்கும். அதிக உப்பு உள்ள உணவுகள் அறிவுத்திறன் மற்றும் சிந்திக்கும் திறனை பெரிதும் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வேண்டுமெனில் அது அறிவாற்றலை பாதிக்கும் என்றும் சொல்லலாம். உப்பு மற்றும் நிக்கோட்டின் உள்ள பொருட்களை சாப்பிடுவது, ஒருவித போதையை உண்டாக்கும். அதனை கைவிடும் போது, அவற்றின் மேல் தீவிர நாட்டம் அடையத் தூண்டும்.

7.தானியங்கள் (முழு தானியங்களைத் தவிர்த்து)  :

எல்லா வகையான தானியங்களும் உடல் நலத்தையும், மூளைச் செயல்பாட்டையும் பாதிக்கும். ஆனால், முழு தானியங்களில் உள்ள அதிக நார்ச்சத்து நாடி துடிப்பிற்கு மிகவும் நல்லது. மற்ற வகை தானியங்கள் அனைத்தும் நமக்கு விரைவிலேயே முதிர்வு ஏற்பட செய்யும் மற்றும் ஞாபக மறதி வரும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

அதனால், தானியங்களுக்குப் பதிலாக கார்போஹைட்ரேட் சேர்த்து சாப்பிட வேண்டும். நாம் பயன்படுத்தும் கார்போஹைட்ரேட், கூட்டு அமைப்பு கொண்ட கார்போ ஹைட்ரேட்டாக இருக்க வேண்டும். அதற்கு முழு தானிய பிரட்டை உண்ணுங்கள்.

8.பதப்படுத்தப்பட்ட புரோட்டீன்  :

தசை வளர்ச்சிக்கும், உடல் சரிவர செயல்படவும் பெரிதும் உதவியாக இருப்பது புரதமே. மாமிசம் தான் உயர்தர புரோட்டீன் நிறைந்த உணவு. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான ஹாட்டாக், சலாமி, சாசேஜ் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

இயற்கையான புரோட்டீன்கள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. ஆனால் பதப்படுத்தப்பட்ட புரோட்டீன் அதற்கு எதிர்மாறாக செயல்படும். ஆகவே இயற்கையான உயர்தர புரோட்டீன் நிறைந்த இயற்கை மீன்கள் (டூனா, சால்மன்), பால் பொருட்கள், வால்நட் மற்றும் விதைகளை சாப்பிடுங்கள்.

9.கொழுப்புச்சத்துள்ள உணவு  :

கொழுப்புச்சத்துள்ள உணவுகள் உடலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிலும் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் ஆரம்பித்து, அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்பட காரணமாக இருக்கும். அவை நமது மூளையையும் பெரிதும் பாதிப்பதனால் பக்கவாதம் வர காரணமாக இருக்கிறது. மேலும் இவ்வகை உணவுகளை நீண்ட காலம் சாப்பிட்டால், அது நமது மூளையை சுருங்கச் செய்யும். இதனை தொடர்ந்து, தமனிகள் பாதிக்கக்கூடும். இதனை தடுக்கவும், பக்கவாதம் வராமல் காக்கவும் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை குறைவாகவே சாப்பிட வேண்டும்.

10.செயற்கை இனிப்புக்கள்  :

சிலர் ஒரே நாளில் எடை குறைப்பதற்காக சர்க்கரைக்கு பதில் செயற்கை இனிப்புகளை உபயோகிப்பதால் ஸ்லிம் ஆகி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆம்! செயற்கை இனிப்புக்களில் மிக குறைவான கலோரிகள் தான் இருக்கின்றன.

ஆனால், அவை நன்மை தருவதை விட தீமையை தான் அதிகம் தருகின்றன. அதிலும் நீண்ட காலம் செயற்கை இனிப்புக்களை உபயோகித்தால், அது மூளையை பாதிக்கும். மேலும் அதிக அளவு செயற்கை இனிப்புக்களை உபயோகித்தால், அது அறிவுத்திறனையும் பாதிக்கும்.

11.நிக்கோட்டின்  :

வயதான தோற்றம், மூச்சு காற்றில் துர்நாற்றம், நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை உண்டாக்குவதோடு மட்டும் நிக்கோட்டின் நின்று விடுவதில்லை. இது ரத்தத் தந்துகிகள் எனப்படும் சிறிய ரத்தக் குழாய்களுக்கு இறுக்கம் கொடுத்து, நரம்பியல் அலைப் பரப்பிகளின் உற்பத்தி மற்றும் செயல்பாடுகளை பாதிப்படைய செய்யும்.

குறிப்பாக ரத்தத் தந்துகிகள் தான் மூளை செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே நிக்கோட்டின் உள்ள உணவுப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது.

உயிர் காக்கும் ஆயுர்வேதம்!


நான்கு வகையான குடலமைப்பை மனிதர்கள் கொண்டவர்களாக இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. தாயின் கருப்பையின் ஒரு அங்கமாக விளங்கும் முட்டையினுள்ளும், தந்தையின் விந்தணுக்களிலும் பொதிந்துள்ள வாத-பித்த-கப தோஷங்களின் ஆதிக்கத்தால், பிறக்கும் குழந்தையின் குடலமைப்பு தீர்மானிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவருக்கும் வாத தோஷத்தின் ஆதிக்கமிருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் குடலில்வாதத்தின் அளவு அதிகமிருக்கும். பிறந்து வளர்ந்தாலும் நீடித்த மலச்சிக்கலாலும், பசியின் தன்மையானது சில நேரத்தில் சீராகவும், சில நேரத்தில் ஏற்றக் குறைவாகவும் காணும். வாயுவின் வறட்சியான தன்மையால், குடலிலுள்ள ஈரப்பசை அதிக அளவில் உறிஞ்சப்படுவதால், குடலின் அசைவுகள் சீராக இல்லாமலிருக்கும்.

இயற்கையான அசைவுகள் மந்தமாக இருப்பதால், மலக்குடல் இறுகி கடும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். சிறிதும் எண்ணெய்ப்பசை வாததோஷத்தில் இல்லாத காரணத்தினால், குடல் வறட்சி அதிகமாக இருக்கும். நகரும் தன்மையுடைய வாதத்தினால், பசித்தீ எனும் ஜுவாலையானது சில சமயம் தீவிரமாகவும், சில சமயம் மந்தமாகவும் இருப்பதால், இவர்களுக்கு பசியானது தாறுமாறாக இருக்கும்.

வயிற்று உப்புசம், மலச்சிக்கல், பெரும் ஏப்பம், பொது இடங்களில் கட்டுப்படாத பெரும் சத்தத்துடன் கீழ்க்காற்று வெளியேறுதல், குடலில் கொட கொடவென்று வாயு உருண்டோடுதல், சரிந்து படுத்தால் வயிற்றில் லேசான வலி போன்றவை காணும்.

உருளைக் கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய், பருப்பு சாம்பார், வேர்க்கடலை, கொண்டக்கடலை சுண்டல், மொச்சக்கொட்டை போன்ற உணவு வகைகளால் இந்த உபாதைகள் மேலும் மேலும் அதிகரித்துக் காணும். இது போன்ற குடலமைப்பைக் கொண்டவர்களுக்கு, விளக்கெண்ணெய் அருமருந்தாகும்.

சூடான கிளாஸ் பாலுடன், ஒன்றிரண்டு டீஸ்பூன் விளக் கெண்ணெய்யைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் வாரமிருமுறை மட்டுமே பருகினால், வயிற்றில் அதிக அளவில் ஓடி நடக்கும் வாயுவானது, மலத்துடன் கீழ்நோக்கி இறங்கி, ஆஸனவாய் வழியாக சுகமாகக் கழிந்து வெளியேறும்.

அப்பாடா! என்ன ஒரு நிம்மதி! என்ற ஒரு மனத் தெளிவையும் ஏற்படுத்தும். ஒன்றிரண்டு மலைவாழைப்பழத்தை உருக்கிய பசு நெய்யில் தோய்த்துச் சாப்பிட்டு, அதன்மேல் கிளாஸ் சூடான பால் பருகினாலும், குடல் வாயு, மலத்துடன் எளிதாக வெளியேறிவிடும்.

வாயுவின் வெளியேற்றத்தால், இடுப்பு வலி, கால் குடைச்சல், நரம்பு வலி போன்ற உபாதைகளிலிருந்து விடுபடலாம். பித்த தோஷத்தின் ஆதிக்கத்தால் குடல் அமையும் தருவாயில், பிறந்தது முதல் மரணம் வரை குடல் பகுதி சூடாகவே இருக்கும். ஒரு சிறிய மலமிளக்கும் உணவுப் பொருள் சாப்பிட்டால் கூட, பேதியாகும்.

உதாரணமாக, பால், கோதுமையினால் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, கோதுமை ரவை உப்புமா, உலர் திராட்சை போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும் இவர்களுடைய பசியின் தன்மையானது மிகவும் தீவிரமாக இருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் விரைவில் செரித்து பசி எடுக்கும்.

உணவில் காரம் புளி உப்புச் சுவை அதிகம் சேர்த்தால், முன் குறிப்பிட்ட பேதியாகுதல், பசி கூடுதல் போன்றவை மேலும் தீவிரமடையும். அதனால் பித்தக்குடல் அமைப்பைக் கொண்டவர்கள் உணவில் அதிகம் இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட சர்க்கரை, கல்கண்டு, நெய் போன்ற இனிப்பும், பாகற்காய், மணத்தக்காளி விதை மற்றும் கீரை, அகத்திக்கீரை போன்ற கசப்புச்சுவையும், வாழைப்பூ, சுண்டைக்காய் போன்ற துவர்ப்புச் சுவையும் அதிகம் சேர்த்துக் குடலை குளிர்ச்சியாக வைத்திருத்தல் நலம்.

கபதோஷத்தின் ஆதிக்கத்தால் குடலின் நிலையானது நடுநிலையாக இருக்கும். பசியின் தன்மையானது மிகவும் மந்தமாக இருக்கும். அதாவது கொஞ்சம் சாப்பிட்டாலே, போதும் என்றும் தோணும். செரிமானமும் மந்தமாகவே இருக்கும்.

அதனால் பசியைத் தூண்டிவிடும் வகையில், பெருங்காயம், சுக்கு, மிளகு, தனியா, மிளகாய், பட்டை, சோம்பு, கரம் மசாலா, சீரகம், ஓமம், கடுகு போன்றவற்றை உணவில் சற்று தூக்கலாக சேர்த்துக் கொள்வது நலம். மூவகை தோஷங்களின் சமமான நிலையில் குடலமைப்பைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

காலையில் எழுந்ததும் சரியான முறையில் மலப் பிரவர்த்தி ஏற்படுவதும், குறிப்பிட்ட சமயத்தில் பசி எடுப்பதும் இதன் சிறப்பு. இதனால் இவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

ஆறு வகையான இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் துவர்ப்புச் சுவைகளை இவர்களுடைய குடல் நன்றாக உள்வாங்கிக் கொண்டு, அவற்றின் சத்தான பகுதியை உடல் அணுக்கள் நிறைவாகப் பெரும் அளவில் வகை செய்வதால்தான் நீடித்த நிலைத்த இன்பத்துடன் இவர்களால் வாழ முடிகிறது.

இந்தக் கட்டுரையின் மூலமாக நாம் அறிந்து கொண்டது என்னவென்றால் மனிதக் குடல் வாதம், பித்தம், கபம், அவற்றின் சமமான சேர்க்கையினால் நடுத்தரம் என்றும், பசியானது வாதத்தினால் சீராக அல்லாமலும், பித்தத்தால் தீவிரமாகவும், கபத்தினால் மந்தமாகவும், தோஷங்களின் சீரான சேர்க்கையினால் நடுநிலையாகவும் இருப்பதையே.

சத்துப்பட்டியல்: தேங்காய் எண்ணெய்!


உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது தேங்காய் எண்ணெய். சமையலில் சேர்த்துக் கொண்டால் அத்தியாவசிய சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும். அதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்...

தென்னை மிக உயரமாக வளரக்கூடிய மரங்களில் ஒன்று. ஒரு மரத்தில் 20 முதல் 150 காய்கள் வரை காய்க்கும். கடினமான நார்ப்பகுதியால் இதன் மேல்பகுதி மூடப்பட்டிருக்கும். அதன் உள்ளே கடின ஓடுடன் விதைப்பகுதி பாதுகாக்கப்படுகிறது.

விதையைச் சுற்றிய உறைப்பகுதியே நாம் தேங்காய் என்று அழைக்கிறோம். உலர்தேங்காய் கொப்பரைக் காய் என்று அழைக்கப்படுகிறது. தேங்காயை நன்கு உலர்த்தி, எண்ணெய் எடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியதாகும். 100 கிராம் எண்ணெய் 884 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்கவல்லது.

தேங்காய் எண்ணை 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது. நீண்டகாலம் கெட்டுப்போகாத ஆயுள் கொண்டது தேங்காய் எண்ணெய். லூரிக் அமிலம் எனப்படும் கொழுப்பு அமிலம் இதில் அதிக அளவில் உள்ளது. இதுவே தேங்காய் எண்ணெய் உறையும்போது வெள்ளை நிறத்தை தருகிறது.

வேறுபல உண்ணக்கூடிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் வழங்க வல்லவை. 232 டிகிரி வெப்பநிலையில்தான் தேங்காய் எண்ணெய் ஆவியாகும் என்பதால் காய்கறிகளை சமைக்க ஏற்றது.

தேங்காய் எண்ணெயிலுள்ள கொழுப்பு அமிலங்கள் 6 முதல் 12 கார்பன் அணுக்களை சங்கிலி இணைப்பாக கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் அவற்றுக்கு சி1-முதல் சி12 வரை பெயர் சூட்டப்பட்டுள்ளது. லூரிக் அமிலம், காப்ரிக் அமிலம், காப்பி ரிலிக் அமிலம், காப்ரோயிக் அமிலம் போன்றவை மட்டும் பூரிதமான கொழுப்பில் 68 சதவீதம் அடங்கி உள்ளது.

உடலில் நல்ல கொழுப்பின் அளவை நீடிக்கச் செய்ய உதவுபவையாகும். 100 கிராம் தேங்காய் எண்ணெயில் 44.6 கிராம் லூரிக் அமிலம் உள்ளது. 12 கார்பன் அணுக்களை கொண்ட இதுதான் தேங்காய் எண்ணெய்க்கு 45 சதவீத கொழுப்புச்சத்தை வழங்குகிறது. ரத்தஓட்டத்திற்கு நன்மை பயக்கும். குளிர்ந்த தேங்காய் எண்ணெயில் வைட்டமின்-இ மிகக்குறைந்த அளவில் உள்ளது.

கபம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும், தடுக்கும் முறைகளும்!

 மார்பு, தொண்டை, தலை, உணவுக்குழாய், மூட்டுகள், இரைப்பை, ரசம் எனும் தாது, கொழுப்பு, மூக்கு, நாக்கு போன்ற உடல் பகுதிகளை கபம் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடல் உறுதி, எண்ணெய்ப்பசை, எலும்பு மூட்டுகளின் இணைப்பு, ஆண்மை, பொறுமை, அறிவு, தைரியம், வலிவு, சபலம் (புலப் பொருள்களை நுகர அதிக ஆசை) இவை போன்றவற்றைத் தோற்றுவிப்பதன் மூலம் கபம் உடலுக்கு நலனைத் தருகிறது.

தன் நிலையிலிருந்து கபம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால்-வெண்மை நிறத்தைத் தோலில் ஏற்படுத்துதல், குளிர்ச்சி, உடற்பருமன், சோம்பல், உடல் பளு, உடல் தளர்ச்சி, ஓட்டைகள் அடைப்பட்டுப் போதல், மூர்ச்சை, சுறுசுறுப்பின்மை, உறக்கம், சுவாச நோய், இருமல், வாயில் நீர் ஊறுதல், இதய வேதனை, பசி குறைதல், பூட்டுகளில் தளர்ச்சி இவற்றை ஏற்படுத்தி வளர்ச்சியடைந்த கபம் உடலுக்குத் துன்பம் தருகிறது.

தன் நிலையிலிருந்து கபம் குறைந்துவிட்டால் தலைச்சுற்றல், உடலைத் திருகுதல் போன்ற வலி, உறக்கமின்மை, உடல் வலி, தோலில் சிறிது எரிச்சல், குத்தல் வலி, கண் எரிச்சல், கொப்புளங்கள், நடுக்கம் உண்டாதல், புகைச்சல், மூட்டுக்களின் தளர்ச்சி, இதயத்துடிப்பு, கபம் இருக்க வேண்டிய இடங்களில் இல்லாதது போல் தோன்றல் முதலியவை குறைவான கபத்தால் தோன்றுபவை. கபம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை:-

1.அவலம்பகம்:- மார்பில் தங்கியுள்ள கபம், தன் சக்தியினால் பிடரி எனும் கழுத்தின் பின்புறப் பகுதிக்கும் முதுகெலும்புப் பகுதிக்கும் உணவின் வீர்யத்தினால், இதயத்திற்கும் பரவி, மற்ற கபம் உள்ள இடங்களுக்கும், தன்னிடத்தில் தங்கியபடியே நீர்த்தன்மை அளிக்கும் செயலினால் அவற்றுக்குப் பற்றுக் கோடாக இருப்பதால் `அவலம் பகம்' எனப் பெயர் பெறுகிறது.

2. க்லேதகம்:- இரைப்பையில் உள்ள இந்த கபம், உணவுக்கூட்டிற்கு ஈரப்பசையை அளிப்பதால் இது இப்பெயரை அடைகிறது.

3. போதகம்:- நாக்கிலுள்ள இந்த கபம், சுவையை நன்கு தெளிவுபடுத்துகிறது.

4. தர்ப்பகம்:- இது தலையில் இருந்து கொண்டு கண் முதலான புலன்களுக்கு தன்நிறைவை அளிக்கிறது.

5. ச்லேஷகம்:- மூட்டுகளில் உள்ள இந்த கபம், எலும்பு மூட்டுகளை சேர்த்து வைத்து, எண்ணெய்ப் பசையையும் அளிக்கிறது. உணவில் அதிக இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை, நீர்க்காய்கள், உணவிற்குப் பிறகு பழங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுதல், பழைய சோறு, பகலில் படுத்து உறங்குதல், தலையில் குளிர்ந்த நீரால் குளித்தல்,

ஏசி அறையில் படுத்துறங்குதல், பனி பெய்யும் அதிகாலையில் தலையை துணியால் மறைக்காமல் வீட்டை விட்டு வெளியே வருதல், ஈரமான தரையில் நின்று கொண்டு வேலை செய்தல், தண்ணீரின் தன்மையறியாது குடித்தல், சூடு ஆறிப்போன் உணவுப் பொருளை மறுபடியும் சூடு செய்து சாப்பிடுதல் போன்றவற்றால் உடலில் கபம் எனும் தோஷம் கூடி பல உபாதைகளை ஏற்படுத்துகிறது.

20 வகையான கப நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அவை:-

எப்பொழுதும் சாப்பிட்டது போன்ற உணர்ச்சி, மயக்கத்துடன் கூடிய சோம்பல், அதிக உறக்கம், உடல் பருத்து பளுவாதல், சக்தி இருந்தும் செயலில் ஆர்வமின்மை, வாயில் இனிப்புச் சுவை, வாயில் உமிழ்நீர் சுரத்தல், அடிக்கடி கபம் வெளிப்படுதல், மலம் அதிகமாதல், கபம் அதிகரித்தல்:-

இதயத்தில் பூசியது போன்ற அடைப்பு, தொண்டையில் குழகுழப்பு, நரம்புகள், இரத்தக்குழாய்கள் நிறைந்திருப்பது போன்ற உணர்வு, கழுத்தில் தோன்றும் ஒரு வகைக் கட்டி, உடல் அளவு கடந்து பருத்தல், உடல் குளிர்ச்சி, மார்பில் அரிப்பும் குத்தலோடு கூடிய வீக்கமும், உடல் வெளுத்தல், கண்கள், மலம், சிறுநீர் இவை வெளுத்தல்.

கபத்தினால் ஏற்படும் உபாதைகளை நீக்க:- நெஞ்சில், தலையில் நிறைந்துள்ள கபத்தை உருக்கி வாந்தி மூலம் வெளியேற்றுதல், வறட்சி யளிப்பதும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை உள்ளதும், சூடான வீர்யம் கொண்டதும், பழமையானதும், இதயத்திற்கு நன்மை பயக்கக்கூடியதுமான உணவு வகைகளையும் சாப்பிடுவது நல்லது.

ஓடுதல், தாவுதல், நீந்துதல், விழித்திருத்தல், உடற்பயிற்சி செய்தல், புணருதல், வறட்சியுண்டாக்கும் பொருட்களால் உடலில் தேய்த்தல் போன்றவை செய்ய நல்லது. வறட்சியான இடம், வறட்சித் தன்மை கொடுக்கக்கூடிய போர்வை இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக தேன், பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பார்லி, கொள்ளு, பச்சரிசி போட்டுக் காய்ச்சிய கஞ்சித் தண்ணீர் பருகுதல், சூடான தண்ணீரால் வாய் கொப்பளித்தல், கோரைக்கிழங்கு, சுக்கு போட்டுக் காய்ச்சிய வெந்நீர் குடித்தல், வாந்தி செய்து கபத்தை வெளியேற்றுதல் போன்றவை சிறந்த சிகிச்சை முறைகளாகும்.

வியாக்ராதி, தசமூல கடுத்ரயாதி கஷாயம், பலாஜீரகாதி கஷாயம், நயோபாயம், இந்து காந்தம் கஷாயம், அக்னி குமார ரஸம், ஆசால்யாதி, கோரோசனாதி குடிகை, அகஸ்திய ரஸாயனம், தசமூலரஸாயனம் போன்ற லேகியங்கள், வாஸாரிஷ்டம், கனகாஸவம், தசமூலாரிஷ்டம்,

தலைக்கு அஸனவில்வாதி, அஸனமஞ்ஜிஷ்டாதி, ஏலாதி போன்ற வெளிப்புறப் பூச்சுகள், தாளீஸபத்ராதி, வைஷ்வாநரம் எனும் உள்ளுக்குச் சாப்பிடும் மருந்துகள் போன்றவைகளாலும் மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டிய சில தரமான மருந்துகளாலும் கபத்தை நம்மால் குறைக்க முடியும்.

கூகுள் நெக்ஸஸ் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்



கூகுள் இன்று மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் சமீபத்திய பதிப்பான ஆண்ட்ராய்டு 4.4 (கிட்கேட்) கொண்ட நெக்ஸஸ் 5 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது. நெக்ஸஸ் 5 தற்போது ப்ளே ஸ்டோர் மூலம் பெரிய சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் என்றும், இந்தியாவில் விரைவில் வருகிறது என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தையில் நெக்ஸஸ் 5 ஸ்மார்ட்போன் 16ஜிபி வகை ரூ.28.999 மற்றும் 32ஜிபி வகை ரூ.32.999 விலையில் கிடைக்கும். நெக்ஸஸ் 5 இப்போது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் கூகுள் ப்ளே ஸ்டோர்களில் கிடைக்கும்.

நெக்ஸஸ் 5 ஸ்மார்ட்போன்: முழு எச்டி (1080) தீர்மானம் கொண்ட 4.95-இன்ச் எல்சிடி திரை மற்றும் கொரில்லா கண்ணாடி 3 பேனல் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது 2GB ரேம் உடன், 2.2GHz Quad-core ஸ்னாப்ட்ராகன் 800 ப்ராசசர் கொண்டுள்ளது. சாதனம் 16 மற்றும் 32 ஜிபி பதிப்புகள் (இல்லை microSD ஆதரவுடன்) இருக்கும்.

வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வரும். 8.0-மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 1.3-மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது. இணைப்பு தொகுப்பு 2G, 3G, 4G, Wi-Fi, ப்ளூடூத் 4.0 மற்றும் Le, NFC மற்றும் microUSB கொண்டுள்ளது. 2,300 Mah பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் $ 349 விலை ஆகும்.

கூகுள் நெக்ஸஸ் 5 தொழில்நுட்ப குறிப்புகள்

பிராசசர்: 2.26GHz Quad-core க்ரைத் CPU உடன் கூடிய குவால்காம்

ஸ்னாப்ட்ராகன் 800

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்ட் 4.4, KitKat

டிஸ்ப்ளே: 4.95-இன்ச் முழு ஐடி ஐபிஎஸ் (1920 x 1080 பிக்சல்கள்)

நெட்வொர்க்: CDMA/1xRTT/EVDO, ஜிஎஸ்எம் / ஜிபிஆர்எஸ் / எட்ஜ், WCDMA /
எச்எஸ்பிஏ +, LTE

உள்ளக சேமிப்பு: 16GB / 32GB

ரேம்: 2GB

கேமரா: OIS / முன்னணி 1.3-மெகாபிக்சல் எச்டி கொண்ட பின்புற
8.0-மெகாபிக்சல்

பேட்டரி: 2,300 Mah Li-பாலிமர் (உள்ளமைந்த)

அளவு: 137,84 x 69,17 x 8.59mm

எடை: 130g

மற்றவை: வயர்லெஸ் சார்ஜிங், NFC